ராமன் சொன்ன தீர்ப்பு... - தங்கமணி சுவாமினாதன்
அயோத்தி.ஸ்ரீ ராமனின் அரண்மணை.தர்பாரில் அமர்ந்திருக்கிறார் ஸ்ரீராமன்.அவருக்கு சற்று தள்ளி இலக்குவன்,சேனாதிபதி,மந்திரிப் பிரதானிகள்,ராஜ குரு ஆகியோர் அவரவர்களுக்குரிய இருக்கையில் அமர்ந்திருக்க பொதுமக்களும் கொஞ்சம் பேர் குழுமி இருந்தார்கள்.ராமனின் மனதில் இன்னும் சற்றுநேரத்தில் தன்னை நாடி வரப் போகும் வழக்கு ஒன்றைப் பற்றிய சிந்தனையில் இருந்தது.அவ்வழக்குபற்றி அவரைத் தவிர வேறு யாருக்கும் தெரிந்திருக்க நியாயமில்லை.அவர் ஒரு நாய்க்கு மோட்சம் கொடுக்க வேண்டிய நாள் அது.அகலிகைக்கு பாப விமோசனம் கொடுத்தவரல்லவா அவர்?காத்திருந்தார் வழக்கின் வருகைக்காக.
கைத்தடியை ஊன்றியபடி மெள்ள மெள்ள நடந்து வந்தார் அந்த துறவி.எழுபதைத் தாண்டிய வயதிருக்கும்.இடுப்பில் காவியுடை, காலில் மரத்தாலான பாத ரட்சை,குழிந்த வயிறு,ஒட்டி உலர்ந்த உடல்,கண்களில் பசி,பசியால் தள்ளாட்டம்.துறவிகள் அனைத்துப் பற்றுக்களையும் விடவேண்டும்தான் என்றாலும் வயிற்றுப் பசி அவர்களைவிட்டுச் செல்ல மறுக்கிறதே?அது அவர்கள் தவறா என்ன?அவரும் அப்படி ஒன்றும் மூன்று வேளையும் உணவு உண்டு உயிரை வளர்ப்பவர் அல்ல.மதியம் ஒரே வேளை உணவு.அதுவும் பிட்சை எடுத்து கிடைப்பதை மட்டுமே உண்பார்.நிதம் ஒரு ஒரு வீடு.அவ்வீட்டில் கொடுத்தால் உண்பார்.மறுத்தால் அன்று உபவாசம்தான்.
வேறு வீட்டில் கேட்க மாட்டார்.பெரும்பாலும் யாரும் இல்லை என்று சொன்னதில்லை.ராமனின் ஆட்சியாயிற்றே?வளத்திற்குக் கேட்கவா வேண்டும்.மக்களிடம் தர்ம சிந்தனை மேலோங்கியே இருந்தது.அயோத்தியில் வீடுகளுக்கு வாசல் கதவே கிடையாது என்பரல்லவா?அனைவருமே வளமாய் வாழ்ந்ததால் யாருக்குமே திருடிப் பிழைக்க வேண்டிய அவசியம் இல்லாமல் இருந்ததால் திருட்டு பயம் அறவே இல்லை.அதனால் வீடுகளுக்கு வாசல் கதவு இல்லை என்பர்.
அன்று எந்த வீட்டில் பிட்சை கேட்க வேண்டிய முறையோ அந்த வீட்டு முன்பு நின்று யாசிக்கிறார் அந்தத் துறவி.உணவு இல்லை என்று உள்ளிருந்து பதில் வருகிறது.இது போன்ற ஒரு பதில் இதுவரை அவர் கேட்டதே இல்லை.அதிசயத்துப்போகிறார் துறவி.ராமனிடம் செல்லப் போகும் வழக்கில் இந்தத் துறவிக்குப் பெரும் பங்கு உண்டு என்பதால் இது போன்ற ஒரு நிலை அவருக்கு உண்டானது என்பது ஸ்ரீ ராமன் மட்டுமே அறிந்த ஒன்று.
வேறு எந்த வீட்டிலும் உணவு கேட்க வில்லை அந்தத் துறவி.வழிப்போக்கர்கள் அமர்ந்து சிறிது நேரம் இளைப்பாறிச் செல்லும் சுமைதாங்கிக் கல்லில் அமர்ந்து கொண்டார் அத்துறவி.சூரியன்
உச்சிக்குச் சென்றுவிட்டான்.துறவிக்குப் பசி காதை அடைத்தது.வயிறு பசியால் டொர்..டொர்ரென்று சப்தமிட்டது.கடும் பசியால் அவருக்குக் கோபம் ஏற்பட்டது.பசி அதிகமாக அதிகமாக கோபம் தலைக்கேறியது.கையிலிருந்த கைத்தடியால் தரையை ஓங்கி ஓங்கி அடித்தார்.அத்தனைக் கோபம் பசியால்.பசிவந்தால் பத்தும் பறக்கும் என்பது உண்மை போலும்.என்னதான் கடும் பசி என்றாலும் தன்னைக்கட்டுப் படுத்திக்கொள்ள வேண்டும். தான் முற்றும் துறந்த ஓர் துறவி என்ற எண்ணம் அவருக்கு இல்லாமல் போய்விட்டதே?
அப்போது அவர் அமர்ந்திருந்த தெருவுக்குள் நாய் ஒன்று நுழைந்தது.துறவி அமர்ந்திருந்த பக்கத்தின் எதிர்த்த சாரியில் அது தான்பாட்டுக்கு தேமேனென்று மெதுவாய் நடந்து சென்றது.அது யாரைப்பார்த்தும் குரைக்கவில்லை,யாரையும் துரத்தவில்லை,யாரையும் கடிக்கவில்லை, யாருக்குக்குறுக்காயும் ஓடவில்லை மிகவும் சாதுவாய் போய்க்கொண்டிருந்தது.
துறவியின் பார்வை அந்த நாய் மீது விழுந்தது.கடும் பசியால் கோபம் தலைக்கேற தரையைக் கைத்தடியால் அடித்துக்கொண்டிருந்த அவருக்கு நாயைத் தாக்கவேண்டும் என்ற எண்ணம் திடீரெனத் தோன்றியது.அவரின் கோபம் நாய்மீது திரும்பியது.சட்டென எழுந்து நாயை நோக்கி நடந்தார்.இவரின் எண்ணம் அறியாத அந்த நாய் தேமேனென்று தம்பாட்டுக்குச் சென்று கொண்டிருந்தது.
அதன் பின்னல் சென்ற துறவி கைத்தடியால் அதன் முதுகில் ஓங்கி ஒரு போடு போட்டார்.வீல் என்று கத்தியது நாய்.அது கொஞ்சமும் இதை எதிர்பார்க்கவில்லை.அடுத்து கண் இமைக்கும் நேரத்திற்குள் அடுத்தடுத்து ஓங்கி ஓங்கி சரமாரியாக விளாச ஆரம்பித்தார்.நாய் ஓடியாவது போயிருக்கலாம்.
அது ஓடவில்லை.ராமனிடம் செல்லவேண்டுமென்பது அதன் விதியாயிற்றே?கடும் கோபத்தோடு அவர் அடித்து விளாச நாயின் உடலிலிருந்து ஆங்காங்கே சதை பிய்ந்து தொங்க ரத்தம் கொட்ட ஆரம்பித்தது.உடலின் அனைத்து பாகங்களும் வீங்கிப் போயிற்று.கால் எலும்பு முறிந்து ஒரு கால் உடைந்தது.வலி தாங்க முடியாமல் நாய் ஊளையிட்டது.கத்தியது,அலறியது பெருங்குரலெடுத்து அழுதது.ஒரு கண்ணிலிருந்து ரத்தம் வடிந்தது.எத்தனை பெரிய தவற்றைச் செய்கிறோம் எனத் தெரியாமல் நாயைஅடித்துத் துன்புறுத்திக்கொண்டிருந்த துறவிக்குக் கோபம் கொஞ்சம் குறைந்தது.
சட்டென அடிப்பதை நிறுத்தினார்.தன்னால் அடிபட்ட நாய் குற்றுயிரும் கொலையுயிருமாய்
நிற்பதையும்,வலியால் துடிப்பதையும் கண்டார்.அவர் மனம் வருந்தியது.
வலியால் துடித்தபடி அந்த நாய் துறவியைப் பார்த்து பேச ஆரம்பித்தது.ஏ..துறவியே..நான் உமக்கு என்ன தீங்கு செய்தேன்?எதற்காக என்னை இப்படி நையப் புடைத்தீர்?உமக்கின்றி வேறு யாருக்காகிலும் நான் தீங்கு ஏதும் செய்தேனா?என் உடல் வலியால் துடிப்பதையும் என் உயிர் ஊசலாடுவதையும் காணுங்கள்.எனனுடல் முழுதும் ரணமாகிவிட்டது ரத்தம் கொட்டுகிறது.என் பிராணன் இப்பொழுதே போய்விடும் போல் உள்ளது.காரணமே இல்லாமல் எனக்கு இவ்வளவு
கொடுமையான தீங்கினைச் செய்த உம்மை நான் சும்மா விடமாட்டேன்.சக்ரவர்த்தி ஸ்ரீ ராமனிடம் சென்று முறையிடுவேன்.உமக்கு தண்டனை வாங்கித் தராமல் இருக்கமாட்டேன்.என்னுடன் வாரும். இப்போதே ஸ்ரீ ராமனிடம் செல்வோம் என்றது.
ஸ்ரீ ராமனின் அரண்மணை நோக்கி நடக்க ஆரம்பித்தது.தன் தவற்றை உணர்ந்திருந்த துறவி மறு பேச்சில்லாமல் அந்த நாயைப் பின் தொடர்ந்தார்.
டாண்..டாண்..டாண்...ஆராய்ச்சி மணி அடித்தது.வழக்கு வந்தாயிற்று என ராமனுக்குப் புரிந்தது.
லட்சுமணா..ஏதோ வழக்கு ஒன்று வந்திருக்கிறது போலும்..வாசலில் சென்று பார்த்து வழக்காட வந்திருப்பவர்களை அழைத்துவா என்று ஸ்ரீ ராமன் சொல்ல.... லட்சுமணன் ..இதோ அண்ணா
உங்கள் ஆணைப்படி சென்று அழைத்து வருகிறேன் என்று சொல்லியபடி வாசல் நோக்கிச் சென்றான்.
வாசலில் ரத்தக் களரியோடு நாய் ஒன்றும் துறவி ஒருவரும் நிற்பதை பார்த்து திகைப்பாய் இருந்தது லட்சுமணனுக்கு.வாருங்கள் துறவியாரே வழக்காட வந்திருக்கிறீர்களா?எனக்கேட்ட லட்சுமணனைப் பார்த்து நாய்..ஐயா..இவர் மீது வழக்குத் தொடுக்க நான் வந்திருக்கிறேன்.நான் வாதி.இவர் பிரதி வாதி என்றது முந்திக்கொண்டு. துறவி வாயே திறக்கவில்லை.
சரி..வாருங்கள் உள்ளே..ஸ்ரீ ராமர் உங்களை அழைத்து வரச் சொன்னார் என்று சொல்லி நாயையும் துறவியையும் உள்ளே அழைத்துச் சென்றான் லட்சுமணன்.
அவையின் உள்ளே நுழைந்த துறவியையும் நாயையும் அங்கே வீற்றிருந்த அனைவரும் திகைப்போடு பார்த்தார்கள்.துறவியும், நாயும் ஸ்ரீ ராமனின் முன்பு நின்றார்கள்.
துறவியாரே என்னைப் பார்க்க எதற்காக வந்துள்ளீர்கள்?துறவியைப் பார்த்து வினவினார் ராமர்.
அவர் வரவில்லை..நான்தான் அவரை அழைத்துவந்தேன்.அவர் மீது வழக்குத் தொடுக்க வந்துள்ளேனென்று தான் முந்திக்கொண்டு ராமனிடம் உரைத்தது நாய்.
அப்போதுதான் நாயைப் பார்ப்பதுபோல் அதனைப் பார்த்தார் ராமர்.அடடா..என்னவாயிற்று நாயே
உனக்கு?உடல் முழுதும் ரணப்பட்டுப் போய் வந்துள்ளாயே.உனக்கு இந்த அளவு துன்பம் கொடுத்தது யார்.என்ன கொடுமை இது?ராமர் கேட்டதுதான் தாமதம்....
கோசலை மைந்தா..தசரத புத்ரா..ஜானகி ராமா..ஆரம்பித்தது நாய்..
போதும் போதும்..விபரத்தை சொல்வாய்..என்றார் ராமர்.