அவ்வளவுதான், அதே மத்துக் கொம்பைக் கொண்டு என் வாயில் அடித்தார்.
“இப்படி இன்னொரு முறை சொல்வாயா? யாருக்கு எதை கொடுக்க வேண்டுமென்று எனக்கு தெரியும்.”
வாயில் விழுந்த அடியில் உதடு மற்றும் பற்களிலிருந்து இரத்தம் கசிய, வலியில் அழுதேன்.
“மூச்… ஒழுங்கா சாப்பிடு” என்று மிரட்டவும், அந்த வலியிலும் வேறு வழியின்றி சாப்பிட்டேன். வீங்கியிருந்த உதடுகளோடு பள்ளிக்குச் சென்றேன். ஆசிரியர் முதல் மாணவர்கள் வரை எல்லோரும் என்னவாயிற்று என்று கேட்க, பதிலேதும் சொல்ல முடியாமல் அழுதே நாள் கழிந்தது. அறுசுவை உணவில்லையென்றாலும் நல்ல சாதம்கூட சாப்பிட பெண் குழந்தைக்குக் கொடுக்கக்கூடாதா?
பல தினங்களில், செய்யாத தவறுக்காக வீட்டிலிருந்து வெளியே தள்ளப்பட்டு, போக இடமின்றி வீட்டு வாசலிலியே மாலை வரை உணவு தண்ணீரென ஏதுமின்றி, வீதியில் செல்பவருக்குக் காட்சி பொருளாகி, என்றுதான் இவையெல்லாம் முடியுமென்று இறைவனை கேட்டதுண்டு. இப்படி எத்தனை பிரச்சனைகளிருந்தாலும் காலம் தனது வேலையை செய்ய, வருடங்களுருண்டது. இதுபோன்று பல சம்பவங்களைப் பார்த்து வளர்ந்த என் தம்பிக்கு பெண்கள் ஈனப்பிறவிகளென்றும், அவனின் சகோதரிகள் அவனுக்கு சேவகம் செய்பவர்களென்றும் தோன்றியது. அதை அவ்வப்போது அவன் செயல்களிலிலும் வெளிப்படுத்தினான். இவையணைத்தும் எனக்கு ஆண் வர்கத்தின் மீதும் சமுதாயத்தின் ஆணாதிக்கத்தின் மீதும் வெறுப்பை உண்டாக்கியது.
அவனுக்கு வயது பத்தொன்பது. ஒரு நாள் நடைப் பயிற்சியை முடித்துக்கொண்டு வீட்டுக்கு வந்தேன். தம்பி டிவிப் பார்த்துக்கொண்டிருந்தான். என் அறையை நோக்கி நடந்தேன். அந்நேரம் அவனின் கைப்பேசி சிணுங்கியது அவனறையில்.
“அந்த போன் எடுத்துவா” என்றெனெக்கு உத்தரவிட்டான். காலம் எனக்களித்தப் பரிசாக நான் அவனுக்காக சின்ன சின்ன வேலைகளை செய்வதையும் நிறுத்தியிருந்தேன்.
“வேண்டுமென்றால், நீ போய் எடுத்திக்கொள்” என்றேன்.
“என்ன நீ? இதைக்கூட செய்யமுடியாத?”
“நான் ஏன் செய்யவேண்டும்?” என்று கேட்டவாறு என் அறையை அடைந்தேன்.
“நான் எவ்வளவோ உங்களிருவருக்கும் செய்திருக்கேன்”
“என்ன செய்திட்ட பெரிசா?” என்றாள் தங்கை.
“நாயே… நீ பேசாதே. இப்போ வந்தேன், அடித்தேக் கொன்றுவிடுவேன்”
“ஆமாம்… அதொன்றுதான் குறையாகயிருக்கிறது. உன் போனை எடுக்கமுடியாத நீ… ச்சே” என்று தங்கை சலித்துக்கொண்டாள்.
“எதை எப்படி செய்யனும்னு எனக்கு தெரியும். உங்களைப் பற்றிதான் ஊரே பேசுகிறதே”
“என்னைக் குறித்துப் பேச ஏதுமில்லை” என்றேன்.
“நீ எங்கே யாருடன் போகிறாயென்றெல்லாம் தெரியும். உன்னை எத்தனை இடங்களில் பார்த்ததாய் ஊரெல்லாம் பேசுகிறார்கள். நடத்தைகெட்ட உங்களிருவரையும் வீட்டில் வைத்திருப்பதே தவறு”
மனதில் இடி இறங்கியதைப் போலிருந்தது. அமிலம் போன்ற வார்த்தைகள். நானா நடத்தைக் கெட்டவள்? ஆணாதிக்கம் நிறைந்த சமுதாயத்தின் மேல் கொண்ட வெறுப்பால், ஆண்களிடம் தேவைக்கதிகமாக பேசாத நானா நடத்தைக் கெட்டவள்? உன்னை சீரட்டி வளர்த்தேனே, அதற்கான புகழாரமா? கண்கள் குளமாகின. செயலற்று அப்படியே நின்றிருந்தேன்.
அவனே தொடர்ந்தான், “பணிப்புரிகிறாய். ஆனால் வீட்டில் சம்பளத்தைக் கொடுப்பதில்லை. இதெல்லாம் ஒரு வாழ்க்கையா?”
நான் சம்பளத்தை பெற்றோரிடம் கொடுக்கவில்லை. எனக்கு தெரியும், என்றாவது ஒரு நாள் வீட்டிலிருந்து வெளியேற்றப்படுவேனென்று.
என்னை சமாளித்துக்கொண்டுக் கேட்டேன், “நடத்தை சரியில்லாத நான் சம்பாதித்தப் பணம் எப்படிக் குடும்பத்திற்கு நல்லது செய்யும்?”
“சாப்பாட்டிற்கும் வீட்டிலிருப்பதற்கும் பணம் கொடுக்கதான் வேண்டும்” என்றான்.
“கொடுக்க முடியாது. என்ன செய்ய முடியும் உன்னால்?”
“என்ன திமிரா பேசுற?” என்றபடி வந்து என்னையும் தங்கையையும் அடித்தான். வீட்டைவிட்டு வெளியேற வேண்டுமென்றுச் சொல்லி அடித்தான். அவனை திருப்பி அடித்ததோடல்லாமல் சொன்னேன்,
“இது உன்னோடு சம்பளத்தில் வாடிகை செலுத்தும் வீடல்ல”
அப்போதுதான் அங்கு வந்த எங்கள் அருமை தந்தை எங்களிருவரையும் வீட்டிலிருந்து வெளியேறச் சொன்னார். நான் யூகித்ததுதானென்றாலும் இந்த சமயத்தில் எதிர்ப்பார்க்கவில்லை.
“அப்பாவே சொல்லிவிட்டார். கிளம்புங்கடி” என்றான் ஏளனமாக.
“சரி! நாங்கள் போகிறோம்” என்றேன் திடமான குரலில்.
அவன் அங்கிருந்து சென்றுவிட்டான். என் பணத்தால் வாங்கிய துணிகளை எடுத்துக் கொண்டிருந்தேன். நடந்த களேபரத்தில் துடைப்பம் சிதறியிருந்தது. அதை எடுக்க வந்த அன்பு அம்மா, “இவங்க பிரச்சனையில் 75 ரூபாய் துடைப்பத்தை வீணாக்கிட்டாங்களே” என்று வருந்தினார்.
இதைக் கேட்ட எனக்கு சிரிப்பதா அல்லது அழுவதா என்று புரியவில்லை. 75 ரூபாய் துடைப்பத்திற்குக் கொடுக்கும் மதிப்புக்கூட ஒரு பெண்ணுக்கில்லையா?
நண்பர்களிடம் பேசி ஒருவழியாக தங்குமிடம் (PG) முடிவு செய்துக்கொண்டு தயாராக இரண்டு மணிநேரமானது. அதற்குள் அன்பு அம்மாவினுள் ஒரு மாற்றம்.
“ஒருத்தியா வீட்டைவிட்டுப் போனால், எவனையோ இழுத்திட்டு ஒடிப்போயிட்டான்னு சொல்லலாம். ஆனால் இவளுங்க ரெண்டுபேரா போனா, ஊர் நம்மளைதான் குறை சொல்லும்” என்று சொல்லி எங்களை வீட்டிலிருந்து வெளியேறவிடவில்லை.
அதன் பிறகு எனக்கு திருமணம் செய்துவிட முடிவெடுத்து, ஒரு படிக்காத கூலித் தொழிலாளியை சல்லடைப்போட்டுத் தேடிக் கொண்டிருக்கின்றார்கள். எனெனில் அப்படியிருக்கும் மாப்பிள்ளைதான் இதைக் கொடு, அதைக் கொகு என்று என் பெற்றோர்களைக் கேட்கமாட்டானாம்.
இப்படியாக தம்பி வேண்டுமென்று என்னுள் விதைக்கப்பட்ட ஆசை இன்று ஆணாதிக்க சமுதாயத்தின் மீதான அருவருப்பின் ஆலமரமாக உருவெடுத்திருக்கிறது.
இங்கு ஆசைக்கும் அருவருப்புக்குமான இடைவெளியில் நிரப்பப்பட்டிருக்கும் எல்லாச் சம்பவங்களும் உண்மை. என் தோழியின் வாழ்க்கையில் நடந்தவைகளை, அவளின் அனுமதியுடன் என்னால் முடிந்தளவிற்கு எழுத்தில் பதிந்திருக்கிறேன். குற்றங்களிருப்பின் மன்னிக்கவும். இந்தக் கதையின் எந்த பாத்திரங்களுக்கும் பெயர் குறிப்பிடவில்லை. ஏனெனில் எத்தனையோ பெண்கள் இப்படி ஆயிரமாயிரம் சோதானைகளை நாள்தோறும் சந்திக்கிறார்கள். ஒவ்வொரு பெண்ணும் எதோ ஒரு வகையில் இதுபோன்ற பல கதைகளை இன்றும் சுமக்கிறாள்.
டும்… டும்… டும்…
இதுவரையும் இந்தக் கதையை பொறுமையாப் படிச்ச மகாஜனங்களுக்கு, இதனால தெரியப் படுத்துறது என்னென்னா; உங்களை சுத்தியிருக்கும் பெண்களை மதிக்கவும். பெண்ணின்றி வாழ்க்கையில்லை. நாமெல்லோரும் சமுதாயத்தின் அங்கம் என்றதால, நாம மாறும்போது சமுதாயமும் மாறிவிடும். நன்றி
டும்… டும்… டும்…
{kunena_discuss:785}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.