‘சாமி..! எம் மச்சான் காளைய அடக்கிபுடுவாகனு எனக்கு தெரியும்ங்க.. ஆனா அவுக மனசு வெசனப்படாம கல்யாணம் நடக்கனும்னா ஜல்லிகட்டு கண்டிப்பா நடக்கனும்.. எப்புடியாச்சும் ஜல்லிக்கட்ட நடத்தவச்சுபுடுங்க !!’.
‘அய்யா தேவரய்யா..!! என்னய நம்பியிருக்க புள்ளய நா கல்யாணம் பண்ணனும்ங்க.. அதுக்கு எப்புடியாச்சும் ஜல்லிக்கட்ட நடத்தவச்சுபுடுங்கய்யா!!’.
அந்தி சாயும் நேரம், மாட்டுசாமி கோயில், ஏகப்பட்ட ஜல்லிக்கட்டுகளில் விளையாடி பல பரிசுகளை வென்ற ஒரு காளைமாடு வயதாகி இறந்தபின்பு அதன் உரிமையாளரால் கட்டப்பட்ட சமாதி அது. தங்களின் குலசாமி கருப்பன் அங்கு வாசம் செய்வதாய் மக்களின் நம்பிக்கை.
‘யய்யா தொர! இந்த நேரத்துல இங்கன என்ன பண்றவ’ என்றபடி அங்கு இருந்த காளை சிலையையே பார்த்துக்கொண்டிருந்த ராஜதுரையை நெருங்கி வந்தார் சீனிக்கண்ணு.
‘தாத்தா, இந்த பொங்கலுக்கும் ஜல்லிக்கட்டு நடக்காதா?? பயலுவ எல்லாம் நம்ம கருப்பு போட்டிக்கே போவாதுனு இளப்பமா பேசுறானுவ’, என்று கலங்கிய கண்களுடன் கேட்டான் ராஜதுரை.
இருநூறு ஆண்டுகளாக தன் முன்னோர்களால் பின்பற்றப்பட்டு வரும் ஜல்லிக்கட்டு பண்பாடு தன் தலைமுறையோடு அழியப்போகிறதே என்ற ஆற்றாமையும், ஜல்லிக்கட்டு இல்லையெனில் நாட்டுக்காளை இனமே அழிந்து இறக்குமதியின் பிடியில் சிக்கிக்கொள்ள நேருமே என்ற ஆதங்கமும் அந்த அறுபத்தைந்து வயது முதியவரின் நெஞ்சைப் பிசைந்தது.
‘யய்யா நம்ம கருப்பன வேண்டிக்கய்யா ஜல்லிக்கட்டு நடக்கனும்னு’ என்றார் பேரனுக்கான சமாதானமாக மட்டுமல்லாமல் தனக்கான சமாதானமாகவும்கூட.
மறுநாள் காலை 9 மணி,
‘ஆத்தா, எனக்கு சாப்பாடு எடுத்து வை’, என்றபடி தரையில் அமர்ந்தான் வீரபாண்டி. ‘யய்யா, உனக்குப் புடிச்ச உளுந்தங்களி செஞ்சுருக்கேன் நல்லா சாப்புடுய்யா.. வரவர மனசு வெசனப்பட்டுக்கிட்டு சரியாவே சாப்புடறது இல்லையே’ என்று புலம்பியபடியே சாப்பாடு எடுத்து வைத்தார் செல்வி.
‘ம்..ம்..’ என்று சாப்பிட்டு முடித்தவன் ‘ஆத்தா நா மரக்கடை வர போய்வாரன்’ என்று தாயிடம் சொல்லிவிட்டு தன் புல்லட்டை எடுத்துக்கொண்டு கிளம்பினான் வீரபாண்டி.
‘என்னய்யா , சொணங்கித் தெரியுற.. மேலுக்கு சொகமில்லயா?’ என்று சோர்வாக இருந்த பேரனைக் கேட்டார் சீனிக்கண்ணு.
‘ஆமாங்க மாமா , காச்ச (காய்ச்சல்) அடிக்காப்ல இருக்கு.. அதான் பள்ளிக்கொடத்துக்கு அனுப்பல’, என்றாள் அன்னலட்சுமி.
‘சரி தாயி, காஷாயம் வச்சி எடுத்தா.. நானே புள்ளைக்கு தாரேன்’, என்று பேரனின் அருகிலேயே அமர்ந்துவிட்டார்.
காலை 10.30 மணி,
‘பங்காளி.. பங்காளி’ என்று அழைத்தபடி பரபரப்பாக மரக்கடைக்குள் வந்தான் சுந்தரம்.
‘என்னய்யா..? என்னாச்சு..?’ என்ற வீரபாண்டியிடம் ‘பங்காளி.. இந்த வருசம் ஜல்லிக்கட்டு நடத்தலாம்னு கவர்மென்டுல சொல்லிப்புட்டாகயா !!’ என்று குரலில் மகிழ்ச்சியைப் புகுத்தி கூறினான் சுந்தரம்.
‘நெசமாவா பங்காளி !! சந்தோஷம்ய்யா.. சந்தோஷம்ய்யா..’ என்று அவனை கட்டிப்பிடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய வீரபாண்டி தன் மாமன் வீட்டை நோக்கி வண்டியில் பறந்தான்.
‘மாமா.. ஜல்லிக்கட்டு நடத்தலாம்னு சொல்லிப்புட்டாக.. வர தை-யில கல்யாணத்துக்கு நாளு குறிச்சுபுடுங்க’ என்றான் உற்சாகமாக.
அடுக்களையில் நின்று அவன் சொல்வதையேக் கேட்டுக்கொண்டிருந்த வேலுத்தாயி தன் மகிழ்ச்சியை தன் தாயை கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தமிட்டு வெளிப்படுத்தினாள்.
“ஓஒ! இவள், பொருபுகல் நல்ஏறு கொள்பவர் அல்லால்
திருமாமெய் தீண்டலர்” - (கலித்தொகை 102:9-10)
(போர் செய்யும் விருப்பம் உடைய நல்ல காளையை அடக்குபவரே அல்லாமல் வேறு யாரும் இவளது மெய் தீண்டத்தக்கவர் அல்லர் என்பது பொருள்.)
‘அப்புச்சி.. அப்புச்சி.. இந்த வருசம் ஜல்லிக்கட்டு நடத்தலாம்னு அரசாங்கம் சொல்லிப்புடிச்சாம் !!’ என்று கூவியபடியே வீட்டுக்குள் வந்தார் ராஜதுரையின் தந்தை, சீனிக்கண்ணுவின் மகன் மருது.
காய்ச்சலில் துவண்டிருந்த ராஜதுரை இதை கேட்டவுடன் துள்ளியெழுந்து தன் காளையை நோக்கி ஓடினான். அவனை தொடர்ந்து சீனிக்கண்ணுவும் மருதுவும் தொழுவத்தில் போய் நின்றனர்.
‘தாயி.. அன்னலட்சுமி..’ என்று மருமகளை நோக்கி குரல் நடுங்க அழைத்த சீனிக்கண்ணுவிற்கு ‘தோ வந்துட்டேங்க மாமா’ என்ற அன்னலட்சுமி கையில் ஆரத்தித் தட்டுடன் வந்தாள்.
‘உன் கையாலே கருப்புக்கு காட்டு தாயி’ என்றார் பெரியவர்.
ஆரத்தி காட்டும்போது ‘அய்யா..! கருப்பா..!’ என்று கைக்கூப்பி நின்றவர்க்கு மேலே வார்த்தை வரவில்லை, கண்களில் தாரைத்தாரையாய் கண்ணீர் வழிந்தது. எதையோ காப்பாற்றிவிட்டோம் என்ற ஆனந்தகண்ணீர் !!
‘கருப்பு.. நீ ஜல்லிக்கட்டுக்கு போகபோறல..’ என்று தன் காளையை கட்டிக்கொண்டு அதன் நெற்றியில் முத்தமிட்டு ஆர்ப்பரித்தான் ராஜதுரை. கருப்புக்கும் மகிழ்ச்சிதான்..! ராஜதுரையின் முகத்தை தன் நாவால் நக்கியது !!
“பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை” – திருவள்ளுவர்.
{kunena_discuss:785}