இந்த ஒரு மாதத்தில் இப்படி எல்லாம் அவனை பாதித்தவள் இன்று பைக்கில் வேறொருவன் பின்னால்…!அவள் முன்னால் இருப்பது யாராக இருக்கும். அவன் தோளின் மேல் கைகளை வைத்து சிரித்து பேசிக்கொண்டிருக்கிறாள், வண்டி சிக்னலில் நிற்கிறது. இவன் காரின் முன்னால் இப்போது அவர்கள் நின்று கொண்டிருக்கிறார்கள். அவள் முன்னால் இருப்பவனின் முகம் பார்ப்பதற்காக இவன் காரின் கண்ணாடியை கீழே இறக்கி வெளியில் தலையிட்டு கொஞ்சம் எட்டிப்பார்க்கவும் அவள் திரும்பி இவனை பார்த்து விட்டாள். அவள் முன்னிருந்தவனும் இப்போது திரும்பி பார்த்தான்.இவன் தலையை உள்ளே திருப்பிக்கொண்டான். அவர்களும் திரும்பிக் கொண்டு பேசுவதை இவன் பார்த்துக்கொண்டிருக்க இப்போது சிக்னல் மறைந்துவிட்டது. அவர்கள் முன்னே செல்ல… இவனும் காரை செலுத்தினான். மனம் மட்டும் தணலாய் எரிகிறது..
“ ஆள் ரொம்ப அழகா இருக்கான்.ஒரு வேளை அவங்க ரெண்டு பேரும் லவ்வர்ஸா இருப்பாங்களோ..அம்மாகிட்ட எல்லா நாளும் பேசுறாளே..என் நம்பர் அம்மா கண்டிப்பா அவக்கிட்ட கொடுத்திருப்பாங்க. இந்த ஒரு மாசத்தில என்கிட்ட ஒரு தடவ கூட எங்கிட்ட பேசுனதே இல்ல. அப்ப அவளுக்கு என்னை பிடிக்கல. இந்த அம்மாகிட்ட எத்தனை தடவ சொன்னேன். அவளுக்கு என்னை கல்யாணம் பண்ணிக்க சம்மதமானு 100 தடவை கேட்டு கன்பர்ம் பண்ணிக்க சொன்னேன்ல. அம்மா அவளுக்கு சம்மதம்னு தானே சொன்னாங்க. ஒரு வேளை பெரியவங்ககிட்ட இவளால மறுப்பு சொல்ல முடியலையோ….? வேண்டாம்பா ..லவ்வால நான் பட்ட காயம் போதும். இந்த காயத்தை வேற யாருக்கும் கொடுக்க வேண்டாம். அவகிட்ட இன்னைக்கு பேசணும்.” என்று மனதில் நினைத்து அவர்கள் வண்டியை பின் தொடர்ந்தான். சாலையின் இடது புறம் ஒரு பெரிய மரத்தின் நிழலில் அவர்கள் இரு சக்கர வாகனத்தை நிறுத்தவும், இவனும் அவர்கள் பின்னால் போய் நிறுத்தினான். அவள் இறங்கி இவனை இறங்க வேண்டாம் தான் வருவதாக சொல்லி இவனை நோக்கி ஓடி வந்தாள். அருகில் வந்ததும் அவள் சர்வ சாதாரணமாக “என்ன இந்த பக்கம்” என்று கேட்கவும் இப்போது என்ன சொல்வதென்று இவனுக்கு வார்த்தை வரவில்லை.
“ ம்ம்..அது வந்து உங்களுக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லைனா தாராளமா நிறுத்திடலாம். நீங்க விரும்புற வாழ்க்கை உங்களுக்கு கிடைக்கட்டும். உங்களால வீட்டுல பேச முடியலைனா இன்னைக்கு நைட் எங்க அம்மாகிட்ட பேசும்போது போனை எங்கிட்ட தர சொல்லி எங்கிட்ட சொல்லிடுங்க. நான் எப்படியாவது இந்த கல்யாணத்தை நிறுத்திடுறேன்.” அவள் திக்பிரமை பிடித்து நிற்பது இவனுக்கு நன்றாக புரிகிறது. “ஓ இவனுக்கு விஷயம் தெரிந்ததும் அவளுக்கு இவனை பேஸ் பண்ண முடியாம அதிர்ச்சியயிருக்கும்” என்பதாய் செல்கிறது இவனின் நினைவு…இவன் உடனே காரை வெகு விரைவாக எடுத்து சென்றுவிட்டான்.ஒரு ஆம்புலன்ஸ் போகும் சத்தம் கேட்கும் போதுதான் இயல்பு நிலைக்கு வந்தான். அருகில் கிடந்த அலை பேசி அடித்துக் கொண்டிருக்கிறது. கையில் எடுத்து பார்க்கும் முன்பு நின்றுவிட்டது. எண்ணை பார்த்ததும் கோபம் வந்தது. இப்போதெல்லாம் 777 என்று முடியும் எண்ணிலிருந்து அடிக்கடி மிஸ்டு கால் வருகிறது. அந்த எண்ணிலிருந்து தான் இப்போது அழைப்பு வந்து நின்றது. இவனுக்கு மிஸ்டு கால் வந்தாலே பிடிக்காது. தேவை உள்ளவர்கள் போன் பண்ணி பேசுவார்கள்.வேலை வெட்டி இல்லாதவர்கள் தன் இப்படி மிஸ்டு கால் கொடுப்பார்கள் என்பது இவன் எண்ணம்.ஆனால் இந்த 777 என்று முடியும் எண்ணிலிருந்து தினமும் ஒரு முறையாவது மிஸ்டு கால் வருகிறது. இப்போது இருக்கும் மன நிலையில் இவனுக்கு ஒன்றும் நினக்க முடியவில்லை.மனதில் பாறாங்கல்லை எடுத்து வைத்தது போலிருந்தது. நேரே வீட்டிற்கு சென்றான். இவன் கார் சத்தம் கேட்டதும் அம்மா உடனே வாசலில் வந்து நின்றார். காதில் போன் வைத்திருந்து சிரித்துக்கொண்டே “ அபிகேல், அவன் வந்துட்டான்மா…அவங்கிட்ட கொடுக்கவா..ம்ம்ம் வேண்டாமா..சரி மா…அப்புறம் பேசுறேன்.
அபிகேல் என்று கேட்டதும் ஜோஷ்வாவின் இதயம் ஒரு கணம் திகைத்தது.”கல்யாணத்தை நிறுத்த சொல்லத்தான் கூப்பிட்டிருப்பாளோ…என்று நினைத்து தான் தன் அறைக்கு போவதாக அம்மாவிடம் சைகையில் சொல்லிவிட்டு முன்னே சென்று அறைக்குள் போய் கதவை அடைத்துக் கொண்டான்.
இரவு உணவு அம்மா இவனுக்கு பறிமாரிக்கொண்டிருந்தார்கள். இவன் மனமோ பூலோகம்..பாதாளம்..விண்ணுலகம் வரைக்கும் பந்து போல் மேலும் கீழும் பறந்து போய் வந்துகொண்டிருந்தது. “ அம்மாகிட்ட கல்யாணத்துக்கு சம்மதம் இல்லைனு சொல்லிருப்பாளோ..” அம்மாவின் முகம் பார்த்தான். துக்கத்தின் சாயல் துளி கூட இல்லை. திடீரென்று “ உங்கிட்ட எத்தன தடவ காரை வேகமா ஓட்டாதேனு சொல்லிருக்கேன். சாயங்காலம் (ஈவ்னிங்க்) நீ எங்கேயோ கார்ல ரொம்ப வேகமா போயிட்டிருந்தத அபிகேல் பார்த்து பயந்து எனக்கு ஃபோன் பண்ணினா. நீ வர்றதுக்குள்ள ஒரு பத்து தடவையாவது நீ வீட்டுக்கு வந்து சேர்ந்துட்டியானு ஃபோன் பண்ணி கேட்டிருப்பா. அவ ரொம்ப நல்ல பொண்ணுப்பா. இப்ப உன்னைப் பத்தி எனக்கு ஒரு கவலையும் இல்ல. அவ வந்து உன்ன நல்லா பார்த்துப்பா…”. தணலின் மேல் தண்ணீர் ஊற்றி இவன் நெஞ்சில் பால் வார்த்ததுபோல் இவனுக்குள் ஒரு நிம்மதி பரவுவதை இவனால் உணர முடிகிறது.ஏன் என்று தெரியவில்லை.
எதாவது பேச வேண்டும் என்பதற்காக “அம்மா ,அப்பாவை காணோம்..இன்னும் வரலியா” என்று கேட்டான்.
“இதோ வந்திட்டே இருக்கேன் ஜோஷ்வா. உங்கம்மாவுக்கு தான் இப்பொ எல்லாம் என் நினைவே இல்லப்பா.எப்பவும் மருமக கூடத்தான் பேச்சு”என்று சிரிப்புடன் மாடிப்படியிலிருந்து இறங்கி வந்து கொண்டிருந்தார்.