இனி சொல்லி என்ன நடக்க போகிறது என்று இருந்தது அவளுக்கு. வீட்டில் வளராமல் வெளியில் இருந்த பொழுது தோன்றிய எண்ணங்களை நினைத்தால் இப்போதும் கடினமாக இருந்தது. யாரும் துன்புறுத்தவில்லை, திட்டவில்லை. ஆனால் வீட்டில் வேளாவேளைக்கு கிடைத்த சுகம் இல்லை, உடல் குன்றி போனால் பார்த்துக்கொள்ள அருகே தாய் இல்லை. திடிரென்று பயந்து தேடும் பொழுது அருகே எவரும் இல்லை தன்னை போன்ற சிறுமிகளை தவிர, ஆசையாய் ஊட்டிவிட ஆள் இல்லை, உரிமையாய் வழிநடத்த ஒரு துணை இல்லை. மொத்தத்தில் என்னதான் கல்லூரி பருவம் இனித்தாலும் அருகே தாய் தந்தை இல்லை என்ற உணர்வே அவளை வெளியே செல்ல வெறுப்பை வளர்த்தது.
பெண் பார்க்கும் படலம், உறவினர்க்கு சொல்லுவது, மண்டபம் பார்ப்பது என்று எல்லா சடங்கும் முடிந்து அடுத்த 5 மாதத்தில் திருமணம் நடந்தது. அதுவரை பாதுகாப்பாக இருக்கவென உறவினர் வீட்டில் இருந்தாள். மனம் குமுறியது இந்த உறவினர் வீட்டுலேயே வேண்டும் என்றால் இருக்க சொல்லிருக்கலாமே, இதற்காக திருமணமா... இது அநியாயம் என்று மனம் நொந்தது... திருமணம் பிடிக்காமல் இல்லை, மாப்பிளையும் தான் ஆனால் முதல் முறை படிப்பிற்காக வெளியே வந்தது மீண்டும் வீட்டில் இருக்கும் வாய்ப்பே இல்லாமல் போனது. அந்த கடுப்பில் இருந்தாள் முதல் முறை வருங்கால கணவனிடம் பேசும் வரை. பல நாட்களுக்கு முன்னால் நடந்த காதல் பேச்சுக்களும் பார்வையும் இப்போது நினைக்கும் போதும் மலரின் முகத்தில் புன்முறுவல் தோன்றியது...
நீர் திரையிட்ட கண்கள் தானாக திரும்பி பார்க்க கையில் தட்டில் உணவோடு கணவன் அருகில் வந்துக்கொண்டிருந்தார். தானாக இதழ்கள் விரிந்தன, இதோ மனதை கவர்ந்தவன், என் மனதை படித்தவன் வந்துகொண்டிருக்கிறான் இத்தனை வருடம் கழித்தும் இன்னும் அவனிடம் வசமிழக்க செய்ய...
சில நாட்கள் கடந்திருக்க, வினோதினி முகமெல்லாம் பிரகாசமாக மின்ன, பெட்டியெல்லாம் காரில் அடுக்கிகொண்டு இருந்தாள். சிங்கார பட்டணத்தின் வளர்ப்பு பெரிதாக எதையும் இழப்பதை போல அவளை உணர செய்யவில்லை, கிளம்பியாயிற்று வேறு நாட்டில் தன்னுடைய கல்லூரி படிப்பை துவங்க...
“அம்மா பத்திரமா இரு, அப்பாவை பார்த்துக்கோ, நான் எப்போ லீவ் கிடைக்குதோ உடனே வந்துடுவேன்... பெரிய கல்லூரி நடத்துரன்னு தான் பேரு, இப்படி பொண்ணு வெளிநாட்டில் படிக்க போரத்துக்குலாமா அழுவாங்க..” என்று அன்பாக இரண்டு நிமிட அணைப்பு இலவசமாக கிடைத்தது தாய்க்கு. மகள் பேசுவது எதுவும் காதில் விலாமல் என்றோ கணவனிடம் கூறியது தான் விழுந்தது.. “கோபால் நான் என் வீட்ல இருந்ததே இல்லை, ஒருவேளை பொண்ணு பிறந்தால், என் கூடவே இருக்கணும் கல்யாணம் ஆகுற வரைக்கும். இங்கயே நல்ல கல்லூரி எல்லாம் இருக்குல, இல்லாட்டி கூட நம்மலே ஒரு கல்லூரி ஆரம்பிக்கலாம் பாப்பாக்காக. அப்போ அவள் வெளியே போய் படிக்க தேவையில்லை தானே” என்று 7 மாத குழந்தையை வயிற்றில் சுமந்துகொண்டு கேட்கும் மலரை அணைத்துக்கொண்டு “சரிடா” என்று ஆறுதல் வார்த்தை கூறினார் கோபால்.
மகள் காரில் பறந்துப் போவதை பார்க்கும் போது, தான் கடைசியாக வீட்டை விட்டு வெளியே வந்தது நியாபகம் வந்தது அவளுக்கு... திருமணம் முடிந்து வெளியே வரும் போது கண்ணெல்லாம் நீரை வெள்ளமாக கொட்டியது... இதோ ஆசை ஆசையாய் வளர்ந்த வீடு, ஒரு இளவரசி போல் ஆணை இட்டு திரிந்த வீட்டை விட்டு கிளம்ப போகிறேன், பெற்றோரோடு இருக்கும் தருணமும் இந்த காலத்தில் எண்ணிப்பார்க்க முடியா கனவாக போகிறதே என்ற கவலை தொண்டை அடைத்துக்கொண்டு கண்ணீர் வர தாயின் நெஞ்சில் சாய்ந்து பாரத்தை கொட்டினாள் மலர். அன்று தான் பெற்றோர் இப்படி எண்ணி பார்க்காத ஒரு இடைவெளி வர போவதையும், இத்தனை காலம் இழந்துவிட்டோமே என்பதையும் உணர்ந்தனர். இவையெல்லாம் மகளின் வாகனம் தூர போக எண்ணியவள், நீயும் இதை கடந்து வருவாய் மகளே... என்று நினைத்துக்கொண்டாள்
அன்று கொடிகள் நட்டு, போராடி, சண்டைகள் போட்டு பல உயிரிழப்புக்கு நடுவே வெள்ளையனே வெளியேறு என்று கோஷமிட்டனர்... ஆனால் இன்றோ படிப்பு, வேலை என்று ஒவ்வொரு காரணத்திற்கும் அறியாமலேயே ஒவ்வொரு மையில் தூரம் போகின்றனர் மகள்கள். பார்த்து பார்த்து வளர்த்து, மேளம் கொட்டி நகை பூட்டி, மாற்றான் கையில் பிடித்துக்கொடுத்து சொல்லாமல் சொல்கின்றனர் பெற்றோர்... மகளே பத்திரமாக வெளியேறு என்று...
{kunena_discuss:785}