பெண்ணாக பிறந்ததில் இது ஒரு பிரச்சினை. ஆண்களைப்போல காதலை வெளிகாட்ட முடியாது. அதிலும் ஒருதலைக் காதலென்றால் சொல்லவே வேண்டாம். இருதலைக் காதலிலும், அவள் காதலிக்கும் போது அந்தப் பெண்ணின் வாழ்க்கை தான் பிறர் அலசப் போகும் அதிமுக்கியமான தலைப்பாகும். இது நிறுத்தப்படுவது அவள் தன் காதலனையே கைபிடிக்கும் போதுதான், அதுவும், ‘எவ்வளவு நாளோ?’ என்ற கிண்டலுடன். துரதிஷ்டவசமாக, அவளது காதல் கைகூடாவிட்டால், பிறர் வாய்க்கு அவலாகியே மாய்ந்து போவாள். காவியங்களிலும் படங்களில் மட்டுமே காதல் ரசிக்கப்படுகிறது. இந்த சமுதாயத்தின் கண்ணோட்டம் மாறும் வரை என்னைப்போல பல பெண்கள் காதலுக்கு கல்லறை கட்டித் தான் வாழ்வர். ஏனோ பல இடங்களில் “சாதிகள் இல்லையடி பாப்பா” என்று பாரதி சொன்னது வெறும் ஏட்டோடு நின்றுவிட்டது.
சில மாதங்களுக்கு முன்பு நடந்த ஒரு சம்பவம் எனக்கு நியாபகத்திற்கு வருகிறது. என்றாவது ஒரு நாள் தான் ஊருக்கு செல்வது, அதுவும் ஏதாவது விஷேஷமோ திருமணமோ என்றால் மட்டும் தான் என்பதால் நடந்து வெகு நாட்களுக்குப் பின்பே தெரியவந்தது. எங்கள் ஊரில் ஒரு பெண் தன் காதலனை வீட்டை விட்டு வெளியேறி திருமணமும் புரிந்து கொண்டாளாம். அச்சச்சோ என்று நான் பயப்படும்போதே சொன்னார்கள், அவள் நலமுடன் இருப்பதாக. அந்த பையனின் அப்பா ஒரு அரசியல் பெரும்புள்ளி என்பதால் அவர்களது காதலும் உயிரும் தப்பித்ததோ? இந்தக் காதலுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு என்றேனும் நடந்திடுமா? தெரியவில்லை.
இவற்றை எல்லாம் யோசித்துக்கொண்டே வீட்டை வந்தடைந்தேன். வாசலில் காலை வைக்கும் போதே அவர் என்னை சட்டியில் போடாமலும், எண்ணெய் ஊற்றாமலும் வருத்தெடுத்துக் கொண்டிருந்தது கேட்டது. சீக்கிரமே எழுந்துவிட்டார் போல. ஒரு கசந்த புன்னகையுடன் உள்ளே நுழைந்தேன், அவரின் லட்சர்ச்சனையைக் கேட்க.
{kunena_discuss:785}