பரிபூரண அன்பினிலே - மது
நிலம்புடை பெயரினு நீர்தீப் பிறழினும்
இலங்குதிரைப் பெருங்கடற் கெல்லை தோன்றினும்
வெவ்வாய்ப் பெண்டிர் கௌவை யஞ்சிக்
கேடெவ னுடைத்தோ தோழி நீடுமயிர்க்
கடும்ப லூகக் கறைவிர லேற்றை
புடைத்தொடு புடைஇப் பூநாறு பலவுக்கனி
காந்தளஞ் சிறுகுடிக் கமழும்
ஓங்குமலை நாடனொ டமைந்தநந் தொடர்பே.
(மதுரைக் கொல்லன் புல்லன்; குறுந்தொகை 373)
கருங்குரங்கு தன்னுடைய விரல்களால் பலாக் கனியை தோண்டி விட அதன் மணமானது எங்கும் பரவி விடும்... அது போல தலைவனிடம் தான் கொண்ட காதல் ஊருக்கு தெரிந்து விட்டதோடு வம்பு பேசும் பெண்கள் தலைவன் அன்பை சந்தேகித்து பழி பேசியதை அறிந்த தலைவி மனம் வாடுகிறாள்.. அப்போது தோழி நிலம் தன் இடம் பெயர்ந்தாலும் நீரும் நெருப்பும் தன் தன்மையில் இருந்து மாறினாலும் விதி வசத்தால் ஏற்பட்ட தலைவனின் காதல் என்றும் மாறாது என தலைவிக்கு ஆறுதல் கூறுகிறாள்… இந்தக் கவிதை சிறுகதை இந்த சங்க பாடலின் பாதிப்பில் எழுதியிருக்கிறேன்.. உங்கள் கருத்துக்களை ஆவலோடு எதிர் நோக்கி இதோ கவிக் கதை..
நிலவின் கருஞ்சுவடு
மங்கிடுமோ அழகு (1)
கங்கையில் அசுத்தம்
அழிந்திடுமோ புனிதம் (2)
கனியில் வெடிப்பு
கசந்திடுமோ இனிப்பு (3)
பளிங்கென நிர்மலமான முகம்
பனிப்பாறையாய் இறுகிய மனம்
"பவித்ரா" அக்னியின் அவதாரம்(4)
நீலவானை விஞ்சும் பரந்த எண்ணம்
நிலத்தினும் நிலைத்திருக்கும் திண்ணம்
நீரும் தாகம் என கேட்கும் யாசகம்
நாயகன் "கருணா" அன்பின் சாகரம்(5)
நித்தம் ஓர் சுய வேள்வி
நெருப்பில் துடிதுடிக்க வெந்திடும் பாவை
தணித்திடுமோ அன்பெனும் அருவி (6)
அள்ள அள்ள குறையா அழகு
அன்னை தந்த சீதனம்
தன்னிகரில்லா அறிவுச் செறுக்கு
தந்தை அளித்த தானம் (7)
பாசம் கொண்ட பெற்றவரையே - காலன்
பாசக் கயிற்றால் பிணைத்திட்டான்
பரிதவித்த பசுங்கன்றினையே
பாட்டி மூதாட்டி அரவணைத்தாள்(8)
பத்தாம் வகுப்பில் பள்ளியில் முதன்மை
பட்டாம்பூச்சியாய் மகிழ்ந்த நறுமுகை
அகமும் புறமும் ஒரு சேர மலர
அங்கு பெண்மையின் மேன்மை குடியேற(9)