அன்பே
அகத்தின் கண்ணாடி உன் முகம்
அறிந்து கொண்டேன் உன் மனக்கிலேசம்
உணர்ந்து பூரித்தேன் உன் நேசத்தின் ஆழம்
உன்னை இனியும் பிரியேன் ஒரு க்ஷண நேரம்(63)
எனவே
அடுத்த தொடரோடு முடிவுறும்
என் கிரிக்கெட் பயணம்
என் பிரபல பிம்பமும் மறையும்
உனது பயமும் அகலும்(64)
வருவேன் இரு திங்கள் சென்று
வதுவை புரியவே
வரவேற்பாய் முழு விருப்பமாக அன்று(65)
என்ன இருக்கிறது என்னிடம்
ஏன் இப்படி ஓர் அன்பு
என்று எப்படி கேட்பேன் அவரிடம்(66)
இத்தனை நாள் கொண்டிருந்த
உறுதியும் மனோதிடமும்
கானல் நீரா(67)
இன்று பூதகரமாய் மிரட்டும்
பயம் பச்சாதாபம்
வேரூன்றி சாய்த்திடுமா(68)
அமிர்தமாய் அவர் அன்பு
எனக்கு புத்துயிர் அளிக்க
ஆலகால விஷமாய் என் பலவீனம்
அவர் வீழ்ச்சிக்கு வழியாவதோ(69)
இரு திங்கள் கழித்து
தொடரை வென்ற களிப்பு
கேளிக்கைகளுக்கு கருணா நிராகரிப்பு
தன் சகாக்களுக்கு அழைப்பு
அவசர பத்திரிகையாளர் சந்திப்பு(70)
கூட்டத்தில் சலசலப்பு
செய்தி என்னவென்ற பரபரப்பு (71)
நடுநாயகமாக அவன்
நன்றி உரை ஆற்றியபடியே
விருப்ப ஓய்வு பெற முடிவு என்றே
வார்த்தைகள் விழும் முன்னே(72)
பவித்ரா பிரவேசம்
பார்த்த விழி பார்த்திருக்க
புதிதாய் அவன் அன்பில் ஜனித்த
பீனிக்ஸ் பறவையென(73)
அடைத்திருந்த மனக்கதவின்
தாழ் திறக்கவே
அவனுக்கு அழைப்பு விடுத்தாள்
இருவிழி வழியே(74)
திடீரென அவன் மௌனம்
திகைத்திருந்த அரங்கம்
மேடையில் இருந்து அவன் எழவே
கேமரா கண்களும் அவன் பின்னே(75)