அவன் தானே தன்னை மறந்து விடுவாய் என்று சொல்லாமல் சொன்னான்.. என் நினைவின் அலைகழிப்பு அவனுக்கு எப்படி தெரிந்தது. யட்சன் போல் வந்து மறைந்து விட்டான்.
அவனுக்குள் என் மீது இரக்கமே இல்லையா?.. நான் படும் கஷ்டங்களுக்கு மருந்தாக வேண்டுமென அவன் எண்ணவில்லையா?.
ஏன்? அவனுக்கு என்னை பிடிக்கவில்லையா? அதனால் தான் அன்றும் அப்படி பேசினான். இன்றும் என்னை காண்பதை தவிர்த்தான்.
மனமானது ஆனந்த கூத்தாடும் போது நடக்கும் சின்ன சின்ன விஷயங்களுக்கும் நல்ல கோணத்திலேயே பதில் கொடுக்கும். அதே மனம் கவலையில் இருக்கும் போது நடக்கும் சின்ன தவறுகளையும் பூதாகரமாய் ஆக்கி , புதிய கோணத்தில் யோசிக்க வைத்து தவறான முடிவை எடுக்க வைக்கும்.
ரிஷிகாவின் மனமும் இத்தனை நாளாய் தவித்த தவிப்பிற்கு முற்று புள்ளி வைப்பது போல் " அவனுக்கு என்னை பிடிக்கவில்லை " என்றொரு புதிய கோணத்தை வகுத்து கொடுத்தது.
இந்த வார்த்தையே திரும்ப திரும்ப ஒலிக்க காதுகளை மூடி கண்ணீர் வடித்தாள்.
எத்தனை நேரம் கடந்ததோ,
மதிய உணவு கூட உண்ணாமல் அறையிலே அடைந்து கிடிக்கும் மகளை அழைக்க வந்த மீனா கதவில் கை வைக்க அது நான் அடைபடவில்லை என்று நகர்ந்து உணர்த்தியது.
கட்டிலில் கிடந்த ரிஷிகாவை பார்க்கும் போதே மனம் பதறிட, அருகில் சென்று கன்னம் தொட்டார்.
ரிஷிகா... ரிஷிகா... அம்மாடி...
அய்யோ யாராவது வாங்களேன்.
மரம் போல் அசையாதிருக்கும் மகளை பார்த்து கொண்டே கத்தினார்.
அப்போது உள் நுழைந்த ரகுராமனின் காதில் மீனாவின் குரல் விழ விடு விடுவென்று ஓடினார். ரிஷிகாவின் நிலை கண்டு ப்ரமை பிடித்தாற் போல் அப்படியே நின்று விட்டார்.
அய்யோ என்னங்க... இங்க பாருங்க பயமா இருக்குங்க.. ரிஷிகா அப்பா வந்தாச்சுமா பாருமா... அவரின் குரல் ஓயவில்லை.
அலுவலகத்தில் பாதி விடுப்பு எடுத்து கொண்டு வந்த ரிஷிகாவை பார்க்க வந்திருந்த வனிதா,மஹிமாவின் செவிகளுக்கும் மீனாவின் குரல் செல்ல , என்னவாயிற்று? என்ற பதறிய மனதோடு உள் சென்றனர்.
மயங்கி கிடந்த ரிஷிகாவை பார்த்து பேயடித்தது போல் நின்றனர். ஆனால் மறு கணமே விறுவிறுவென செயல் பட்டனர்.
வாசலில் காத்திருந்த மஹேனை துணைக்கழைத்து கொண்டு ரிஷிகாவை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
காரில் ரிஷிகாவின் இரு புறமும் மீனாவும் வனிதாவும் அமர, தன்னிலைக்கு வந்திருந்த ரகுராமன், சிவந்த விழிகளோடு மஹேனின் அருகில் அமர்ந்து கொண்டார்.
அவன் மஹிமாவை பார்க்க அவளோ சீக்கிரம் போங்க மஹி, நா வனிதாவோட ஸ்கூட்டில வரேன்... என்று வீட்டை பூட்டி சாவியோடு பின் தொடர்ந்தாள்.
மீனாவின் விசும்பல் ஓய்ந்த பாடில்லை... ரிஷிகாவின் கை பற்றி கொண்டிருந்த வனிதா அவள் கை விடாமல் பற்றி கொண்டிருந்த சாக்லேட் கவரை பார்த்து புருவம் சுருக்கினாள்.
என்றோ கவுதம் கூறி இருந்த சாஹித்யனுக்கும் சாக்லேட்க்குமான உறவு அப்போது அவளின் மூளைக்குள் வந்து போனது. மெதுவாய் அவளிடம் இருந்து அதை பிரித்து தன் கைக்குள் வைத்து கொண்டாள்.
மருத்துவமனையின் அவசர பிரிவில் ரிஷிகா சேர்க்க பட்டிருந்தாள்.
சிறுது நேரம் கழித்து மருத்துவரிடம் இருந்து அழைப்பு வர ரகுராமனை பார்த்தாள் மஹிமா, அவரோ என்னால் முடியாதுமா...என்ற விசும்பலோடு அங்கிருந்த சேரில் அமர்ந்தார். அவரின் கை பிடித்து மீனாவும் அமர, மஹேனும் மஹிமாவும் சென்றனர்.
நீங்க..?
அவளோட ஃப்ரண்ட் டாக்டர். அவ அப்பா அம்மா ரொம்ப நெர்வசா இருக்காங்க என் கிட்ட சொல்லுங்க.. கையை பிசைந்தாள். அவளின் நடுக்கம் அவருக்கு புரிந்தது.
தாயும் தந்தையும் பயப்படுவது இயல்பு.. ஆனால் ரத்த சொந்தமில்லாத ஒருவன் மற்றவனுக்கு ஆபத்து என்று வரும் போது உயிரளவு பயம் கொள்வது நட்பில் மட்டுமே சாத்தியமான ஒன்று.
அவங்க ரொம்ப வீக்கா இருக்காங்க மிஸ்...
மஹிமா...
ம்ம்ம், மனசுல எதையெல்லாமோ நினைச்சு பயந்துருக்காங்க... மனசளவுலயும்,உடல் அளவுலயும் ரொம்பவே பாதிக்க பட்டு இருக்காங்க.. போதாத குறைக்கு ஜன்னி பிடிச்சிருக்கு... அதிகமான நேரம் குளிர்ல உக்காந்து இருக்காங்க ட்ரீட்மெண்ட் கொடுக்குறது ரொம்பவே சிரமமா போச்சு... கொஞ்ச நாளாவே எதையோ நினைச்சு அளவுக்கு அதிகமா ஃபீல் பண்ணிருப்பாங்க போல அவங்களோட மூளை தேவைக்கு அதிகமா யோசிச்சு யோசிச்சு... ஒரு கட்டத்துல தாங்க முடியாம அப்கான்சியஸ் ஆகிட்டாங்க. ட்ரீட்மெண்ட் கொடுத்துட்டு இருக்கோம் பார்க்கலாம். அவங்களுக்கு நினைவு திரும்புனதுக்கு அப்புறம் தான் எதையும் முடிவா சொல்ல முடியும்...
இதை கூறும் அவரின் குரல் கூட கம்மியதோ என்று தோன்றியது.