ஆச்சரியப்பட்ட அந்த ஸ்பானிஷ் முகேஷின் திறமையை பாராட்டி ஒரு பெரிய மோதிரத்தை பரிசளித்தான். அவனின் ஞாபகார்தமாக வைத்து கொள்ள சொல்லி அவனே அதை முகேசின் விரலில் மாட்டிவிட்டான்.
ஸ்பானிஷின் அருகே இருந்த அவன் நண்பன் ஹிப்பி தலைமுடியுடன் ஜெர்மனியன் ஒருவன், குறும்பாக, விலைமாது ஒருவளின் செல்போன் நம்பரை பாக்ஸ்ஸில் போட்டுவிட்டு முகேஷை பார்த்தான். அவன் மனதில் நினைத்த அந்த விலைமாது ஜெர்மனில் யாரோ ஒருவனுடன் படுக்கையில் இருந்தாள்.
அவளுக்கு செல்போன் அழைப்பு வர “நேரங்கெட்ட நேரத்தில எவன்டா போன் பண்ணறது” என்று ஜெர்மன் பாஷையில் திட்டிவிட்டு, வெறுப்போடு போனை அணைத்துவிட்டு கஸ்டமரை அணைத்தாள்.
கப்பலின் ஆடிடோரியத்தில் இருந்த அகன்ற திரையில் “The customer you are trying is currently busy, please try after sometime” என்று தொலைதொடர்பு துறை பொறுப்பாக பதில் தந்தது.
“சார் வேற நம்பர் இருக்கா?” விவரம் புரியாமல் கேட்டான் முகேஷ்.
“ஒ. இருக்கே. இப்பவே உடனடியா போன் போடு. அலறி அடிச்சுகிட்டு இந்த கடலுக்கே ஓடி வந்துருவாங்க” ஜெர்மன் பாஷையில் சொன்னான்
“யார் சார் அவங்க?” (உரையாடல் அவர்கள் மொழியில் இருந்தாலும் கதை படிப்பவர்களின் வசதிக்காக தமிழில் தொடரும்)
“இண்டியன் கோஸ்டல் கார்ட் சீப் கமேண்டர்”
“இண்டியன் ஆர்மிய எதுக்கு இப்ப காண்டக்ட் பண்ணனும்”
“ஏன்னா இந்த கப்பல கடத்த போறேம். அதை முறைப்படி சொல்லவேண்டாமா?” என்று மறைத்து வைத்திருந்த ரிவால்வரை கையில் எடுத்தான்.
முகேஷ் கண்ணில் கட்டி இருந்த கருப்பு துணியை விலக்கி “ஹலோ இந்த மாதிரி பொம்மை துப்பாக்கி என்கிட்ட நிறைய இருக்கு” என சொல்லி முடிப்பதற்குள் எதிரே இருந்த ஒரு மூதாட்டியை இரக்கமில்லாமல் தலையில் சுட்டு கொன்றான் ஜெர்மானியன்.
“இப்பவாது நம்பறையா இது ஒரிஜினல் பிஸ்டல்ன்னு”
ஆடிட்டோரியத்தில் பரவசம் மறைந்து, பயங்கரம் தொற்றிகொண்டது. பயத்தில் உறைந்த பயணிகள் திசைக்கு ஒரு பக்கம் சிதறி ஓட முயல, கடத்தல்காரர்கள் கன் பாயிண்ட்டில் பயணிகளை மிரட்டி மெயின் டோரை இழுத்து மூடினர். முகேஷுடன் ரகசியயமாக செல்போன் தொடர்பில் இருந்து (third umpire போல் ) அவனுடைய மேஜிக்கில் கான்ப்ரன்சு காலில் உதவி செய்து கொண்டு இருந்த சென்னை நண்பன் ரவி, கப்பலில் ஏதோ விபரீதம் நடப்பதை உணர்த்து ராயபுரம் கடலோர காவல்படை தலைமையகத்திற்கு ரகசிய தகவல் தர, மின்னல் வேகத்தில் அதன் இடைமறிக்கும் படைபிரிவினர் அந்த கப்பலை நெருங்கினர். ரவியின் உதவியுடன் முகேஷை தொடர்பு கொண்டனர். ஆடிடோரியம் அகன்ற திரையில் ராணுவ தலைகள் தெரிந்ததும் கடத்தல்காரர்கள் உஷாரானார்கள். காக்பிட்டில் இருந்த கேப்டனை துப்பாக்கி முனையில் மிரட்டி கப்பலை நிறுத்தினர். மின்சார விநியோகம் துண்டிக்காமல் இருக்க D.G SET இன்ஜினியரை சிறை பிடித்தனர்.கப்பலின் முழு கட்டுப்பாடும் கடத்தல்காரர்கள் வசம் வந்தது.
ஆங்கிலம் தெரிந்த கடத்தல்காரன் ஒருவன் கமேண்டரிடம் “எங்களை அட்டாக் பண்ணற யோசனையை விட்டிட்டு எங்க பேச்சை கேக்கணும்”
“இப்ப நீங்க சரண்டர் ஆகலைனா, உங்களை கொன்னுறுவோம்” கமேண்டர் மிரட்ட
“ஹலோ அதிகாரி, நீங்க அட்டாக் பண்ணினா நாங்க 10 பேர்தான் சாவோம். நாங்க கோபப்பட்டா இங்க இருக்கிற ஆயிரம் பேரோட இந்த கப்பல் ஜலசமாதி ஆயிரும், கப்பல் முழுக்க லேசர் பாம் இருக்கு. அதை வெடிக்க வைக்க ரிமோட் எங்க கைல இருக்கு. இனி முடிவு உங்க கைல இருக்கு”
“உங்க டிமான்ட் என்ன? எவ்வளவு பணம் வேணும்?” கமேண்டர் கேட்க
“எங்களுக்கு பணம் வேண்டாம். அந்தமான் ஜெயில்ல இருக்கிற கைதி சமரதுன்காவை ரிலீஷ் பண்ணி எங்ககிட்ட ஒப்படைக்கணும்.நாலு மணி நேரம் டைம் தர்றோம். சீக்கிரம் முடிவு பண்னுங்க”
அதற்குள் தீவிரவாத தடுப்பு குழுவும் (N.C.T.C), மார்கோஸ் என்று அழைக்கப்படும் மெரைன் கமாண்டோ போர்ஸ்சும் (M.C.F) அந்த கப்பலை சுற்றி வளைத்தனர். அதிரடியாக கப்பலில் குதித்து அட்டாக் செய்ய வைஸ் அட்மிரலின் உத்தரவுக்கு காத்திருந்ததனர். அவரோ அரசின் முடிவுக்கு காத்திருந்தார். சென்ட்ரல் இன்டலிஜென்ஸ் பீரோ மூலம், மினிஸ்ட்ரி ஆப் டிபென்ஸ்க்கு தகவல் போக, டின்னெர்கூட சாப்பிடாமல் பிரதமர் தலைமையில் அவசர அமைச்சரவை கூட்டம் கூடியது.
கப்பலில் ஆயிரத்து சொச்சம் பேர் இருப்பது அரசுக்கு கவலை தந்தது. அத்தனை பாதுகாப்பையும் மீறி கப்பலில் எப்படி எக்ஸ்புலோசிவ் மெடீரியல் வந்தது என்பதற்கு I.B யிடம் எந்த பதிலும் இல்லை. விசாரணை முடிவில்தான் தெரியும் என்றனர். நீண்ட ஆலோசனைக்கு பிறகு பயணிகளின் நலன் கருதி அந்த கைதியை விடுதலை செய்ய அரசு முடிவு செய்தது.ஆனால் அவர்கள் நம்நாட்டின் கடல் எல்லையை தாண்டும் முன் உயிரோடு மடக்கிப்பிடிக்க மாஸ்டர்பிளான் தயாரானது.