சரஸ்வதி இனிமே அவன் வீட்டில் முடங்கி கிடக்கக் கூடாது என முடிவு செய்தாள். சிறு வயதில் இருந்தே ராகவனுக்கு படிப்பில் அத்தனை நாட்டம் இல்லை. எப்போதும் விளையாட்டுதான். டிகிரி முடித்ததும் காவல்துறையில் வேலை கிடைக்க சேர்ந்துவிட்டான்.
சரஸ்வதி அவனை “இமை” என்னும் பார்வையற்றவர் பயிற்சி பள்ளியில் சேர்த்தாள். அங்கு பார்வையற்றவர் எப்படி தானாக செயல்படுவது. யாரையும் அண்டாமல் தன் வேலையை தானே செய்வது. வருமானம் ஈட்ட வழி என வாழ்க்கை பாடமே கற்றுக் கொடுக்கின்றனர்.
தான் உயிரோடு இருக்கும் வரை அவனை பார்த்துக் கொள்வாள். தனக்கு பிறகு அவன் நிலைமை என்னவாகும் என்ற கவலை பெரிதாக இருந்தது. தன் மகன் வாழ்க்கையில் திருமணம் என்ற ஓன்று நடக்குமா?. எந்த பெண் சம்மதிப்பாள்?. இப்படி பல கேள்விகள் அவள் மனதை ஆக்ரமித்தது. இவற்றில் ஓன்றுக்குகூட அவளிடம் பதில் இல்லை. குடும்பம் நடத்த பணப் பிரச்சனை இல்லை ஓரளவு சமாளிக்கலாம் என்பது மட்டுமே ஆறுதலான விஷயமாக இருந்தது.
இதே மன ஓட்டத்தில்தான் ராகவனும் இருந்தான். இப்படியே இருந்தால் பைத்தியம் பிடித்துவிடும் என்றுதான் இமை பயிற்சி பள்ளியில் சேர ஓத்துக் கொண்டான்.
அங்கு மீண்டும் ஏ பி சீ டி படிக்க ஆரம்பித்தான் ப்ரெயிலி முறையில். ஊனிலும் உடம்பிலும் பதிந்திருந்த சாதாரண ஏ பி சீ டியை மீண்டும் வேறு முறையில் படித்து நினைவில் வைத்துக் கொள்வது ராகவனுக்கு சிரமமாக இருந்தது.
தாளில் புள்ளி புள்ளியாக புடைத்திருந்தது. ஆறு புள்ளிகள் கொண்டது ஒரு செல் (cell) . . அதாவது மேல் இரண்டு புள்ளிகள் அதன் கீழ் இரண்டு அதற்கும் கீழ் இரண்டு என இருந்தது. ஆறு புள்ளிகள் விரல் அடக்கத்திற்கு ஏற்றாற்போல் சின்னதாக இருந்தது. தடவி பார்த்தான் ராகவன்.
ஒரு செல்லில் மேலே உள்ள முதல் புள்ளி புடைத்திருந்தால் அது ஏ . . மேலே கீழ் என இரண்டு புள்ளிகள் புடைத்திருந்தால் அது பி … மேலே உள்ள இரண்டு புள்ளிகள் நேராக புடைத்திருந்தால் அது சீ . . என இருபத்தியாறு எழுத்துகளுக்கும் சொல்லிக் கொடுத்தனர். அதே போல எண்களுக்கு அதனோடு கமா, புல் ஸ்டாப் போன்ற நிறுத்தக்குறியீடுகளுக்கு என அத்தனைக்கும் இருந்தது. இதையெல்லாம் மனனம் செய்வது அத்தனை சுலபமாக இல்லை ராகவனுக்கு.
மற்றும் அந்த பள்ளியில அவனை போலவே எத்தனையோ பேர் பார்வையற்றவர்களாக இருந்தது. சின்னஞ்சிறு குழந்தை கூட பாதிக்கப்பட்டதை கேட்க சங்கடமாக இருந்தது.
நாட்கள் உருண்டோடின இப்போது அவன் வைட் கேன்(white cane) பார்வையற்றவர்கள் உபயோகிக்கும் வெள்ளை குச்சியின் உதவியால் தானாகவே மெல்ல நடக்க ஆரம்பித்திருந்தான். ஒருவரின் உயரத்திற்கு தகுந்தாற்போல் அக்குச்சியின் நீளம் வேறுபடும். அதை மற்ற சமயத்தில் மடித்து வைத்துவிடலாம். அத்தோடு கொஞ்சம் படிக்கவும் வந்தது.
இமை பள்ளியின் தொண்டு நிறுவனத்தின் மூலம் அவனுக்கு ரம்யா ஸ்க்ரைப்பாக சேர்ந்தாள். பார்வையற்றவர் தங்களால் பரீட்சை எழுத முடியாது அதனால அவர் சொல்ல மற்றொருவர் எழுதுவார் அவரை ஸ்க்ரைப் என்று அழைப்பர். தேர்வுக்கு இன்னும் நாட்கள் அதிகம் இருந்தது. ரம்யா முன்கூட்டியே பார்த்து பேசினால் நன்றாக இருக்கும் என வந்தாள்.
வீட்டில் அவன் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தான். சட்டென்று அவன் அருகில் கொலுசு சத்தம், மல்லிகை பூ வாசனை, வளையல் சத்தம் என சம்பந்தம் இல்லாமல் வந்தது. “ஹலோ” ஒரு இனிமையான குரல்
“யாரு?” கேட்டுவிட்டு . . “அம்மா” என சத்தமாக கூப்பிட்டான். “ஒரு காலத்தில் நீ போலீசாக மற்றவருக்கு பாதுகாப்பு அளித்த இப்ப . . .” மனக் குதிரை ஓடியது.
“என் பேரு ரம்யா உங்க ஸ்க்ரைப் . . உங்க அம்மா வெளியில காய்கறி வாங்கிட்டு இருக்காங்க வந்துடுவாங்க இருங்க” என மடமடவென பேசினாள்
“நீங்க ஸ்ஸ்ஸக் யாரு”
“ஸ்க்ரைப் உங்க பரிட்சை எழுத . .?”
“உட்காருங்க சாரி யாரோனு நினைச்சிட்டேன்”
“பரவாயில்ல ..”
“எனக்காக எக்சாம் எழுதுறதுக்கு ரொம்ப தேங்க்ஸ்”
“நீங்க படிச்சாதான் நான் எழுத முடியும் படிக்கீறீங்களா?” அவள் குரலில் இருந்த நட்பை அவனால் உணர முடிந்தது
“படிச்சிட்டு இருக்கேன் . இப்ப கேள்வி கேட்கபோறீங்களா?” ஒரு குழந்தையை போல அவனிடமிருந்து கேள்வி வந்தது
“ச்சேசே . . இல்லீங்க சும்மா உங்கள பாத்து பேசத்தான் வந்தேன் . . .நீங்க போலீஸ்ல இருந்தீங்களா?” சகஜமாக பேசினாள்
போலீசில் வேலை பார்த்தவன் முரட்டுதனமாக இருப்பான் என எதிர்பாத்திருந்தாள் ஆனால் இவனோ மென்மையானவனாக காணப்பட்டான்.
“ஆமாங்க . . . நீங்க என்ன பண்றீங்க?”
“எம்.ஏ. தமிழ் லிட்ரேச்சர் படிக்கிறேன்”