“உங்களுக்கு கிரிக்கெட்ல ரொம்ப இன்ட்ரஸ்டுனு ரம்யா சொன்னாங்க”
“ஆமா ரொம்ப பிடிக்கும்”
“ஆடுவிங்களா இல்ல பாக்கறது மட்டும்தானா? ஐ மீன் முன்னாடி” அவருக்கு ராகவனை பற்றிய முழு விபரமும் ரம்யா சொல்லியிருந்தாள்.
“டைம் கிடைக்கும் போது ஆடுவேன் . . காலேஜ் டேஸ்ல நிறைய ஆடியிருக்கேன்”
“குட் வாங்களேன் கொஞ்சம் ஆடி பாக்கலாம்”
“சார் பிளைண்ட் கிரிக்கெட்ல பார்வை குறைபாடு இருக்குறவங்கதானே ஆடணும் . . .எனக்கு முழு பார்வையும் கிடையாது”
“அப்படி இல்ல டீம்ல நாலு பேரு டோட்டல் பிளைண்ட்டா இருக்கணும் . . .இதுதான் ரூல்”
“அப்படியா?”
என்கூட வாங்க என ராகவனை மைதானத்துக்கு அழைத்து சென்றார். ரம்யாவும் அவர்களோடு இணைந்தாள்.
“இங்கயும் ஒரு டீம்ல பதினோரு பேர் தான்” எனச் சொல்ல ஆரம்பித்து தொடர்ந்தார் வெங்கட் . . .
“பி-1 எனப்படும் முழுமையாக பார்வை இழந்தோர் 4 பேர்
பி-2 (பார்ஷியலி பிளைண்ட்) பார்க்கும் திறன் மிக மிக குறைவு 3 பேர்
பி-3 (பார்ஷியலி சைட்டட்) பார்க்கும் திறன் மிக குறைவு 4 பேர்”
பந்தை ராகவன் கையில் கொடுத்தார். அது சாதாரண கிரிக்கெட் பந்தைவிட சற்று பெரியதாக இருந்தது. பார்வை குறைபாடு உள்ளவர் பார்க்க வசதியாக இருக்க அப்படி அமைக்கப்பட்டிருந்தது. அதுவும் இல்லாமல் அதுனுள் இருந்து சலங்கை அல்லது கிலுகிலுப்பையில் இருந்து வரும் சத்தத்தை போல வந்தது. பார்வையற்றவர்கள் ஒலியை வைத்து பந்தை அடிக்க வசதியாக அமைக்கப்பட்டிருந்தது.
கையில் பந்தை பிடித்தவுடன் ராகவனுக்கு உற்சாகம் தொத்திக் கொண்டது வெங்கட் மேலும் தொடர்ந்தார் “முழு பார்வையற்றவர் ஒரு ரன் அடித்தால் அது இரண்டாக எடுத்துக் கொள்ளப்படும்
ஸ்டெம்ப் உயரம் சற்று அதிகமா இருக்கும். பந்து வீச்சிலும் மாற்றங்கள் இருக்கு. பந்தை உருட்டியபடி போடணும். மேல் நோக்கி வீச கூடாது.
பௌலர் பந்தை போடறதுக்கு முன்னாடி “ரெடி?” எனக் கேட்க வேண்டும். அதற்கு பேட்ஸ்மேன் “யெஸ்” என பதில் கூற வேண்டும். மீண்டும் பௌலர் பந்தை வீசும்போது “ப்ளே” என கூற வேண்டும்” இப்படி பல விதிமுறைகளை ராகவனுக்கு சொல்லிக் கொடுத்தார்.
ஏற்கனவே கிரிக்கெட் பற்றி நன்றாக தெரிந்திருந்ததால் இதையெல்லாம் கிரகித்துக் கொள்வது ராகவனுக்கு சுலபமாக இருந்தது. வெங்கட் அவன் கையில் இருந்து பந்தை வாங்கி பேட்டை திணித்தார். அவனை மெல்ல ஸ்டம்ப அருகில் நிற்க வைத்தார். அவன் ஸ்டம்பை தொட்டு பார்த்தான்.
“ரெடியா?” வெங்கட் கேட்க
“போடுங்க” என்றான் சந்தோஷமாக
முதலில் கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. “நல்லா கவனிங்க ராகவ் பந்து சத்தத்தை . . அமைதி டென்ஷன் இல்லாம ஆடுங்க”
மெல்ல மெல்ல பழகினான். முதலில் பேட் பந்தை தொடவே இல்லை. பின்பு லேசாக பட்டது. அவன் கவனம் முழுவதையும் பந்து சத்ததில் வைத்தான்.
“இன்னைக்கு இதுபோதும் . . உங்களுக்கு எப்ப ஆடணும்னாலும் வந்து ஆடுங்க” என கைகுளிக்கி சென்றார்.
அதன் பின் அவன் கவனம் முழுவதும் கிரிக்கெட்டிலேயே இருந்தது. ஆரம்பத்தில் ஐந்து ரன் எடுப்பதே மிக கஷ்டமாக இருந்தது. ஆனால் அவன் சளைக்கவில்லை. மிக பிடித்தமான விஷயம் செய்யும்போது அலுப்போ சளைப்போ தெரிவதில்லை. ரம்யா அவனுக்கு உறுதுணையாக இருந்தாள். வெங்கட் ராகவனின் ஆர்வத்தை பார்த்து அவனுக்கு மேலும் பல நுணுக்கங்களை கற்றுக் கொடுத்தார்.
வீட்டில் பந்தை கட்டி தொங்கவிட்டு கொடுத்தாள் ரம்யா. அதை அடித்து அடித்து பழகினான். பௌலிங்கும் பழகினான். ஆனால் பீல்டிங் அத்தனை இலகுவாக வரவில்லை. முதலில் அப்படிதான் இருக்கும் பழக பழக வரும் என ஆறுதல் படித்தினார் வெங்கட்..
ராகவன் இமையின் கிரிக்கெட் டீமில் இடம் பிடித்தான். மற்றொரு டீமுடன் மேட்ச் நடந்தது. அதில் பௌலர் “ரெடி” எனக் கேட்க இவன் “யெஸ்” பதிலளித்தான். அவன் பந்தை உருட்டி “ப்ளே” என கத்த இவன் பந்தில் கவனம் வைத்து அடித்தான். பந்து எங்கு போகிறது எனத் தெரியவில்லை. இரண்டு நொடியில் “ப்போர்” அனைவரும் சத்தம் போட்டனர்.
முதல் முறையாக ஐம்பது ரன்களை தாண்டினான். மற்றவர்களுக்கு இது பெரிய விஷயமாக இல்லாமல் இருக்கலாம். பெரிய மேட்ச் இல்லை. இருப்பினும் அவனை பொருத்த அளவு அவனுக்கு இது இமாலய சாதனை. அந்த மேட்சில் இவன் அணி தோற்றது ஆனாலும் வாழ்க்கையில் தோல்வி இல்லை என மனம் சொன்னது. பயிற்சி, முயற்சி, நம்பிக்கை இது மூன்றும் இனி அவன் கையில். இதுதான் தன் வாழ்க்கை என அந்த நொடி தீர்மானித்தான்.