(Reading time: 14 - 28 minutes)

2017 போட்டி சிறுகதை 127 - நக்ஷத்திரா..!! - வசுமதி

This is entry #127 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - சூழ்நிலை கதை - முடிவுக்கான கதை

எழுத்தாளர் - வசுமதி

 sad

ரு தாய் குருதியின் பந்தம்

தாய் மாமனின் சொந்தம்..

உண்மை பாசம் முழுதுமாய்

குடும்ப நிகழ்வுகளில் முதன்மையாய்..

மகிழ்ந்திருக்கும் நேரத்தை பெருக்குவான்

கசிந்திருக்கும் நேரத்தை கசக்குவான்...

தன் உடன்பிறந்தாளை பாசம் மாறாமல்

என்றும் தாங்கும் தாய்மாமன்...

14 டிசெம்பர் 2006 

நெற்றியில் சிறு தழும்பு.. அடர்ந்த காடு போல் இமைமூடிய கண்கள்.. செப்பு போல் இருக்கும் இதழ்கள் எச்சில் ஒழுக சிரிக்கும் போது தான் எவ்வளவு அழகு... அழகுக்கு அழகு சேர்க்கவே அந்த கன்னக்குழி.. அந்த குழந்தைக்கு தாயோ தந்தையோ அல்ல அவன்..இருந்தாலும் அந்த பஞ்சு பொதியை ஏந்திய போது மகிழ்ச்சி நீரூற்று போல் பெருகியது.. தனது பிரியமான ப்ரியா அக்காவின் மகள் அல்லவா அந்த ரோஜாமொட்டு..

"அதீ.. முதல்ல போயி படி... பப்புவை கொஞ்சிட்டே இருந்து இன்டர்வ்யூவை கோட்டை விட்டுடாதடா..",என்றார் அதீயின் தாய் வைரலட்சுமி..

"ரிலாக்ஸ் வைரம்.. உன் அதீ ரொம்ப புத்திசாலி.. நீ வேனா பாரு பிரஸ்ட் அட்டெம்ப்ட்ல ஐயா ஐ பி எஸ்..",என்று கண்சிமிட்டினான்..

"இன்னும் ஒரு வாரத்துல பார்க்க தானே போறோம் உன் வண்டவாளத்தையும் தண்டவாளத்தையும்..", என்றார் அங்கு வந்த அதீயின் தந்தை முத்துச்செல்வன் நக்கலாக.

"விடுங்கப்பா..சும்மா அவனை வம்பிழுத்துட்டே இருக்காதீங்க..",என்று தந்தையிடம் கூறிய ப்ரியா, தன் தமையனை நோக்கி,"அதீ.. நாளைக்கு பப்புக்கு தொட்டில் கட்டுற பங்ஷன் இருக்கறதால நீ படிக்கவும் மாட்ட அதுக்கு உனக்கு நேரமும் இருக்காது.. அதுனால இப்போ போயி படி..",என்று அவனை துரத்தினாள்.

"அக்கா.. பப்புக்கு நான் சொல்லற பெயரை நீ வைக்கிறேனு சொல்லு... அப்போ தான் படிக்க போவேன்", என்றான் பிடிவாதமாய்.

"மொதல்ல நீ பெயரை சொல்லு.. வைக்கிறதா இல்லையானு உங்க அக்காவும் மாமாவும் முடிவு பண்ணிக்கட்டும்", என்றார் முத்து..

"நக்ஷத்திரா.." என்று புன்னகைத்தான் அதீ (எ) அதித் தேவ்..

குழந்தையைத் தொட்டிலில் கிடத்தித் தாலாட்டுப் பாடித் தூங்க வைக்கும் பழக்கம் தமிழரின் தனிப்பண்பாகும். குழந்தையை முதன்முதலில் தொட்டிலில் இடுவது நம் நாட்டு மக்களால் ஒரு சடங்காகவே மேற்கொள்ளப் படுகிறது. இந்த சடங்கு குழந்தை பிறந்து மூன்றாவது மாதத்தில் நடைபெறும்..

குழந்தையின் தாய் மாமன் தொட்டில் துணி, தொட்டில் கம்பு, தொட்டில் கயிறு, புத்தாடை ஆகியவற்றைக் கொண்டு வந்து தொட்டில் கட்டி அதில் குழந்தையைக் கிடத்தி மூன்று முறை ஆட்ட வேண்டும். இவ்வாறு செய்வதே தொட்டிலிடுதல் சடங்காகும்.. குழந்தைக்கு பெயர் சூடும் விழாவையும் இதன் தொடர்ச்சியாய் நடத்துவர்..

பச்சை இலுப்பை வெட்டி - என்கண்ணே உனக்கு

பால்வண்ணத் தொட்டில்கட்டி

தொட்டிலிட்ட அம்மானும் -என்கண்ணே

தூரவழி போறாரம்மா

14 டிசெம்பர் 2007

"தாரா..குட்டிம்மா.. மாமாகிட்ட வாங்க... "

"மா.. மா... ஹீ... ஈ…"

" ஹாங்.. அப்படித்தான்.. மெதுவா மெதுவா.." , என்று நடக்க பழகிக் கொண்டிருந்த நக்ஷத்திராவுடன் அதீ விளையாடிக் கொண்டிருந்தான்..

" பப்புக்குட்டி அம்மாட்ட வாங்க பாக்கலாம்", என்று தாராவை தூக்கினாள் பிரியா..

"அக்கா.. மாமனுக்கும் மருமகளுக்கும் இடையில் குறுக்க வரக்கூடாதுன்னு உனக்கு எத்தனை தடவை சொல்றது..??",என்று ப்ரியாவை முறைத்தான் அதீ..

"டேய்.. மணி எட்டாகுது.. பப்புக்கு இட்லி ஊட்டிவிட்டுட்டு அவளை உனக்கு கொடுக்கறேன்டா.."

"நீ ஒன்னும் ஊட்ட வேணாம் நானே ஊட்டி விடறேன்",என்று அவள் கையிலிருந்த தாராவையும் கிண்ணத்தையும் வாங்கிக் கொண்டு பால்கனி பக்கம் சென்றான் அதீ..

நக்ஷத்திரா இந்த ஒரு வருடத்திற்குள் அதீக்கு இன்றியமையாதவளாய் மாறிப் போனாள்.. சில சமயங்களில் தாராவிற்கு உணவு ஊட்டுவது முதல் நாப்கின் மாற்றுவது வரை அதீ தான் செய்வான்.. பல சமயங்களில் தான் ஒரு ஐ பி எஸ் என்பதை மறந்து மழலையுடன் மழலையாகிப் போவான்..

தன் தமையன் தாராவிற்கு உணவு ஊட்டுவதை கண்ட ப்ரியாவின் இதழ்களில் ஒரு நிறைவான புன்னகை பூத்தது..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.