(Reading time: 22 - 43 minutes)

2017 போட்டி சிறுகதை 128 - காதல் முகம் பார்ப்பதில்லை.. - சித்ரா.வெ.

This is entry #128 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - சூழ்நிலைக் கதை - கதை ஆரம்பத்தில் இருந்து தொடர்க... / முடிவுக்கான கதை

எழுத்தாளர் - சித்ரா.வெ.

Beauty

ணமேடையில் அமர்ந்திருந்தவளின் கண்களில் கண்ணீர்துளிகள் எட்டிப் பார்த்தன... இதோ இன்னும் சில நிமிடங்களில் அருகே இருக்கும் இவன் அவளுக்கு தாலி அணிவித்து கணவனாக போகிறான்... நினைக்கும் போதே சுளீர் என வலித்தது.

மனசுக்கு பிடித்தவனை, மனதார விரும்பியவனை தான் திருமணம் செய்துக் கொள்ள போகிறாள்... ஆனால் இப்படி ஒரு திருமணத்தை ராகவி எதிர்பார்க்கவில்லை...

அவன் இன்னொரு பெண்ணை நேசித்தவன், அதுவும் இவளின் தோழியை.. அது தெரிந்த பின், இவள் காதலை மனதுக்குள்ளேயே புதைத்து, யாருக்கும் இவள் மனதில் உள்ளதை தெரியாமல் பார்த்து, எப்போதும் போல் இயல்பாக இருக்க என்று, இவள் திரும்ப பழைய நிலைமைக்கு மாற, கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகியது...

ஆனால் இப்போது திடிரென்று அவனுடன் திருமணம், யாரும் இந்த திருமணத்திற்கு கட்டாயப்படுத்தவில்லை... மலர் அத்தைக்காக தான் இவளே இந்த திருமணத்திற்கு சம்மதித்திருந்தாள்...

அதுவும் இல்லாமல் ஸ்ரேயா, அஜய் சந்திக்க காரணமே இவள் தான்... அந்த குற்ற உணர்வில் இந்த திருமணத்துக்கு சம்மதித்தாள்... அதனால் தான் மனதில் குழப்பம் பிறந்தது ராகவிக்கு... இவளின் காதல் கைகூடி இந்த திருமணம் நடந்திருந்தால், சந்தோஷமாக இந்த திருமணத்தை ஏற்றுக் கொண்டிருந்திருப்பாள்...

ஆனால் இவள் காதல் அத்தியாயம் முடிந்துவிட்டது எனறு நினைத்திருந்த நிலையில் இவளால் திரும்ப அவனுடன் ஆனந்தமாக வாழ முடியுமா..?? அவனும் தான் ஸ்ரேயாவை மறந்துவிட்டு இவளுடன் வாழ்வானா..?? திருமணத்திற்கு சம்மதித்திருந்த இந்த மூன்று நாட்களாக இதெல்லாம் தான் இவள் மனதில் ஓடியது...

"கெட்டிமேளம்... கெட்டிமேளம்.." என்ற குரல் கேட்டு, மேள வாத்தியங்கள் இசைக்க... ஐயர் எடுத்துக் கொடுத்த தாலியை ராகவி கழுத்தில் கட்டினான் அஜய்.. பின் நெற்றியில் அவன் குங்கும இட...

இது என்ன உணர்வு..?? அவன் தாலிக்கட்ட இவளை தொட்டப்போது, அவளுக்கு சிலிர்த்ததே ஏன்..?? மார்பில் தொங்கிக் கொண்டிருந்த தாலியும்... நெற்றியில் இட்ட குங்குமமும் அவன் இவளுக்கு உரிமையானவன் என்று பறைசாற்ற, மனதில் அந்த ஆனந்தம் எங்கிருந்து வந்தது...

எல்லாம் முடிந்துவிட்டது என்று நினைத்தாளே... எதுவும் முடியவில்லையா..?? மனதில் அவன் மேல் வைத்திருந்த காதல் மறையவில்லையா..?? இன்னும் ஆழ் மனதில் அதெல்லாம் புதைந்து இருந்ததோ...?? இதே இந்த இடத்தில் வேறொருவன் இருந்திருந்தால், இந்த ஆனந்தம் வந்திருக்குமா..??

ஏனோ இந்த நிமிடம் மனதில் இருந்த குழப்பங்கள் எல்லாம் காணாமல் போய், மனம் தெளிந்த நீரோடையாய் இருந்தது... கண்டிப்பாக இவனோடு காதல் கலந்த வாழ்க்கையை வாழ முடியும் என்ற நம்பிக்கை பிறந்தது... அவன் மனம் மாறும் வரை இவளால் காத்திருக்கவும் முடியும்... எல்லாம் தெளிவான இந்த நொடி, மீண்டும் இவள் கண்களில் கண்ணீர் துளி... ஆனால் இது ஆனந்தத்தில் வந்த கண்ணீர்...

ஆனால் ஆரம்பத்திலிருந்தே இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த அஜய் கொஞ்சம் குழம்பிப் போனான்... அதுவும் அவளை மூன்று நாட்களாகவே அவன் கவனித்துக் கொண்டிருந்தான்... அவளின் குழப்பமடைந்த முகத்தை பார்த்து அவன் மனதில் கேள்விகள் பிறந்தன...

சடங்கு சம்பிரதாயங்கள் முடிந்ததும் பெரியவர்கள் காலில் விழுந்து இருவரும் ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டனர்... அஜயின் தாய் தந்தையர் காலில் விழும்போது, அஜயின் தாய் மலர்விழி அவர்கள் இருவரையும் மனப்பூர்வமாக ஆசிர்வதித்து, பின் ராகவிக்கு கைகூப்பி நன்றி கூறினார்.

"என்ன அத்தை... என்கிட்ட நன்றியெல்லாம் சொல்லிக்கிட்டு.."

"இல்லம்மா... காதலிச்சவளே, இப்போ என் பையனை வேண்டாம்னு சொல்லிட்டு கல்யாணத்தை நிறுத்திட்டு போய்ட்டா... இனி என் பையன் இப்படியே தனியா நின்னுடுவானோன்னு பயந்துட்டேன்... ஆனா நீயும், உன்னோட அப்பா, அம்மாவும் எவ்வளவு பெரிய காரியம் செஞ்சிருக்கீங்க... சாகற வரைக்கும் இதுக்கு நன்றியுள்ளவளா இருப்பேன்..."

"என்ன மலர்... நல்லது நடந்திருக்கும் போது, சாகறதப்பத்தியெல்லாம் பேசற... அஜயை கல்யாணம் பண்ணிக்க, ராகவிக்கு கொடுத்து வச்சிருக்கனும்... நாங்க என்ன அன்னியமா?.. இல்ல எங்களுக்கு அஜய்ய பத்தி தெரியாதா..? இதுக்கு போய் நன்றின்னு பெரிய வார்த்தையெல்லாம் பேசிக்கிட்டு..." என்றனர் ராகவியின் பெற்றோர்.

"எல்லாம் சரி தான்... அந்த ஸ்ரேயா, என் பையனை எதுக்காக வேண்டாம்னு சொன்னாளோ.. அதை நீங்க பெருசாவே நினைக்கலையே... உங்க மனசு யாருக்கு வரும்..."

"ஏன்னா அஜய் எங்களுக்கும் மகன்... நாங்க இதுவரைக்கும் அப்படி தான் நினைக்கிறோம்... எங்க பையனை நாங்களே குறை சொல்லுவோமா..??" என்று சொன்னதும், அஜய்க்கும், அவன் பெற்றோருக்கும் பேச வார்த்தைகளே இல்லை... மூவரும் நெகிழ்ந்து போயிருந்தனர்.

ரவு கையில் பால் சொம்போடு ராகவி அறைக்குள் நுழைந்த போது, அஜய் யாரோடோ அலைபேசியில் பேசிக் கொண்டிருந்தான்... இவள் உள்ளே வந்ததைப் பார்த்தவன், "அஷோக்.. ராகவி வந்துட்டா, இரு அவக்கிட்ட கொடுக்கிறேன்.." என்று அவளிடம் அலைபேசியை கொடுத்தான்.

"ஹலோ அஷோக்.."

"ஹாப்பி மேரிட் லைஃப் ராகவி.."

"தேங்க்ஸ் அஷோக்... ஆமா என்ன லண்டன்ல இருந்து பேசறீங்களா..??  நீங்க கல்யாணத்துக்கு வருவீங்கன்னு நினைச்சேன்.."

"அது நான் இந்தியா வர டிக்கெட் போட்றதா தான் இருந்தேன்... ஆனா அஜய் தான் இந்த மேரேஜ் நடக்குமான்னு டவுட்டா இருக்குடா.. அதனால நீ இப்போ வராத... எப்பவும் எப்படி வருவியோ அது போல வா அப்போ நாம மீட் பண்ணலாம்னு சொன்னான்.." என்று அஷோக் சொல்லும்போது, இவளுக்கு ஒருமாதிரி ஆகிவிட்டது.

"ராகவி... கடைசியில அவன் நினைச்சது போலவே நடந்துடுச்சே... இருந்தும் உனக்கும், அவனுக்கும் கல்யாணம்னு சொன்னதும், நான் ரொம்ப சந்தோஷப்பட்டேன்... உன்னோட நல்ல மனசுக்கு எல்லாம் நல்லப்படியா நடக்கும்.." என்றான்.

"தேங்க்ஸ் அஷோக்.." சரி அஜய்க்கிட்ட கொடுக்கிறேன்.." என்று அஜயிடம் அலைபேசியை கொடுத்தாள்...

"வெய்ட் பண்ணு ராகவி... தோ வந்துட்றேன்.." என்று அவளை காத்திருக்க சொல்லிவிட்டு அவன் அலைபேசியில் பேசியபடி பால்கனிக்கு சென்றான்.

அவன் தன் நண்பனுடன் பேசிக் கொண்டிருந்த நேரம்... இவள் மனதிலும் ஏதேதோ எண்ண ஓட்டம்...

"பாவம் அவனுக்கு முன்பே இந்த திருமணம் நிற்கப் போகிறது என்று தெரிந்திருக்கிறது... அதனால் தான் தன் நண்பனிடம் அப்படி கூறியிருக்கிறான்... எல்லாவற்றிற்கும் காரணம் ஸ்ரேயா தான்... அந்த ஸ்ரேயாவை பற்றி நினைக்கும்போதே கோபமாக வந்தது ராகவிக்கு..

அவளுக்கு கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லை.. நன்றியுணர்வு கூட இல்லை என்று நினைத்தாள்... இவளையெல்லாம் உயிர் தோழி என்று நினைத்தோமே, இவளுக்காக தன் காதலை கூட விட்டுக் கொடுத்தோமே.. என்று ராகவிக்கு கோபம் வந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.