2017 போட்டி சிறுகதை 130 - கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே - ஜெய்
This is entry #130 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest
போட்டி பிரிவு - சூழ்நிலை கதை - கதை தொடக்கத்தில் இருந்து தொடர்க...
எழுத்தாளர் - ஜெய்
மணமேடையில் அமர்ந்திருந்தவளின் கண்களில் கண்ணீர்த் துளிகள் எட்டிப் பார்த்தன... இதோ இன்னும் சில நிமிடங்களில் அருகே இருக்கும் இவன் அவளுக்குத் தாலி அணிவித்து கணவனாகப் போகிறான்... நினைக்கும்போதே சுளீர் என வலித்தது....
மணப்பெண் கீதா, மணமகனான ஆதவன் தன்னைப் பெண் பார்த்துவிட்டுப் போன நாளிலிருந்து நடந்ததை நினைத்துப் பார்த்தாள்...
“என்னங்க நேத்திக்கு உங்க அக்கா போன் பண்ணி இருந்தாங்க. நம்ம கீதாக்கு அவங்க வீட்டுக்காரரோட சொந்தத்துல ஒரு வரன் இருக்காம். பையன் டெல்லில டாக்டரா இருக்காராம். அம்மா, அப்பா எல்லாம் சென்னைல இருக்காங்க போல”
“ஹ்ம்ம் என்கிட்டயும் அக்கா பேசினா. ஆனா அவங்க கொஞ்சம் வசதியானவங்கப் போல கமலா. நம்மளால அந்த அளவுக்கு செய்ய முடியுமான்னு தெரியலை”
“இப்போ நாமளே ஒண்ணும் அவங்க சம்மந்தம் தேடி போகலையே, அவங்கதானே உங்க அக்காக்கிட்ட கேட்டு இருக்காங்க. அவங்க கேட்ட மரியாதைக்கு நாமளும் நம்ம கீதா ஜாதகம் அனுப்புவோம். அவங்களுக்கும் பொருந்தி வந்துச்சுன்னா நம்மால நம்ம பொண்ணுக்கு என்ன செய்ய முடியுங்கறதை சொல்லலாம். அது அவங்களுக்கும் தோதுப்பட்டு வரும்ன்னு தோணிச்சுன்னா மேற்கொண்டு proceed பண்ணலாம். என்ன சொல்றீங்க”
“நீ சொல்றதும் சரிதான் கமலா, அக்காக்கிட்ட ஏற்கனவே கீதா ஜாதகம் இருக்கு, அதையே பையன் வீட்டுல கொடுக்க சொல்றேன்”
இரு வீடுகளிலும் ஜாதகங்கள் பரிமாறி பத்துக்கு எட்டுப் பொருத்தங்கள் இருப்பதாக கணிக்கப்பட்டு கீதாவிற்கும், டெல்லியில் டாக்டராக இருக்கும் ஆதவனுக்கும் பெண் பார்க்கும் படலம் இனிதே நடந்து முடிந்து நிச்சயதார்த்த நாளும் வந்தது.
“ஆதவா, என்னடா இது நாளைக்கு நிச்சயம். இன்னைக்குதான் டெல்லிலேர்ந்து வந்த. வந்த உடனே பொண்ணு வீட்டுக்குப் போகலைன்னா என்னடா. நீ இப்படி வழிஞ்சிட்டுப் போய் நின்னா அப்பறம் மாப்பிள்ளைன்னு என்ன மரியாதை இருக்கும். எப்பவுமே மாப்பிளைன்னா ஒரு கெத்து வேணும்டா”
“என்னம்மா இப்படி சொல்ற. நீ சொன்னேன்னுதான், நான் பொண்ணு பார்த்த அப்பறமும் டெல்லிலேர்ந்து போன்ல கூட பேசலை. அவளே எனக்கு ரெண்டு வாட்டி பண்ணினபோதும், வேலை இருக்குன்னு சொல்லி வச்சுட்டேன். இங்க வந்தப்பறமும் போகாம, பேசாம இருந்தா நல்லா இருக்காதுன்னுதான் நான் வரேன்னு கீதாக்கிட்ட சொன்னேன். இப்போ எப்படி போகாம இருக்கறது”
“இப்போ நீ போன் பண்ணி பேசாததால என்ன குறைஞ்சு போச்சு. அதான் கல்யாணத்துக்கு அப்பறம் ரெண்டு பேரும் பேசிட்டேதானே இருக்கப் போறீங்க. என்னமோ ஹாஸ்பிட்டல்ல உன்னோட chief டாக்டர் கூப்பிட்டு உடனே போகாத மாதிரி பேசற, அதெல்லாம் வர முடியாதுன்னு சொல்லு போ”
Chief டாக்டரும், வருங்கால மனைவியும் எப்படி ஒன்றாவார்கள், ஏன் இப்படி சம்மந்தம் இல்லாமல் பேசுகிறார்கள் என்று புரியாமல் கீதாவை அழைத்துத் தான் இன்று அவளை பார்க்க வர முடியாது என்று கூறினான் ஆதவன்.
இவர்கள் பேசுவதைப் பார்த்துக்கொண்டே வந்த ஆதவனின் சித்தி, அவள் அக்காவிடம், “சரியா சொன்னக்கா, இப்பவே நாம வளைஞ்சு கொடுத்துப் போய்ட்டா, நாளப்பின்ன அவங்க நம்மளை மதிக்கவே மாட்டாங்க”, என்று கூற இவர்களின் பேச்சை இன்னும் கேட்டால் தன் நிலை இதைவிட மோசமாகும், நிச்சயம் முடிந்து கூட பேசவிட மாட்டார்கள், என்று அந்த இடத்தை விட்டு அகன்றான் ஆதவன்.
“என்னடி கீதா, இன்னைக்கு நிச்சயம், கொஞ்சம் கூட சுரத்தே இல்லாம இருக்க, மாப்ஸ் கூட பேசலையா, அதுதான், இந்த சோக மூஞ்சியா?”, கீதாவின் தோழி, அவளின் அம்மாவிற்கு உதவிக்கொண்டே கேட்டாள்.
ஆமாம், அப்படியே பேசிட்டாலும் என்று நொடித்துக் கொண்ட கீதாவை, இருவரும் கேள்வி குறியோடுப் பார்க்க,
“அம்மா நிஜமாகவே, ஆதவனுக்கு இந்தக் கல்யாணத்துல சம்மதமானே தெரியலைமா, இந்த மூணு மாசத்துல அவரா எனக்கு ஒரு முறை கூட போன் பண்ணினதில்லை, நான் பண்ணிப் பேசினாலும் ஒண்ணு அவங்க அம்மா பத்தி பேசுவார், இல்லைனா அவரோட வேலைப் பத்திப் பேசுவார்”
“இல்லை கீதா, சில பேருக்கு கொஞ்சம் கூச்ச சுபாவம் இருக்கும். டக்குன்னு பேசிட மாட்டாங்க. மாப்பிள்ளை அந்த மாதிரியோ என்னவோ, பொண்ணு பாக்க வந்த அன்னைக்குக் கூட மத்தவங்கதான் பேசினாங்க, அவர் சும்மாதானே இருந்தாரு”
“அம்மா, நீ சொல்றது மத்த professionல இருக்கறவங்களுக்கு சரிம்மா, ஆனா ஒரு டாக்டர் அப்படி இருக்க முடியாதும்மா. வர்ற நோயாளிகள் கிட்ட பேசத்தானே செய்வாரு”
“நோயாளிகள் கிட்ட பேசறது வேற, வரப்போற மனைவி கிட்ட பேசறது வேற கீதா. நீயும் உனக்கு சளித்தொல்லை, ரெண்டு நாளா இருமல் இப்படி ஏதாவது சொல்லி இருந்தா அவரும் நல்ல விளக்கமா பேசி இருப்பாரா இருக்கும்”, என்று கீதாவின் தோழி கூற அங்கே இருந்த இறுக்கமான மன நிலை சற்று மாறியது. கீதாவும் அவள் அம்மா கூறியதைப் போல ஆதவன் கூச்ச சுபாவத்தினால்தான் தன்னுடன் பேசவில்லை என்ற முடிவுக்கு வந்தாள்.