இனியனுக்கு சட்டென கோபம் வந்துவிட்டது. “வேணாம் சார் , நா இண்டர்வியூ அட்டெண்ட் பண்ணவேயில்லை. இவ்வளோ சந்தேகத்துல நீங்க எனக்கு சலுகை காட்டவேணாம். என்னைப் பொறுத்தவரை இண்டர்வியூ முடிஞ்சுது. என்னால அதுல கலந்துக்க முடியலைன்னு நெனைச்சுக்கறேன். அதுக்காக நீங்க சொன்ன மாதிரி கீழ்த்தரமா நடந்துக்கற ஆள் நானில்லை. ஐ ஆம் சாரி சார்” சோம சுந்தரத்திடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டு வெளியேறினான் இனியன்.
அன்று இரவு முழுவதும் அவனுக்கு மனம் கொதித்துக் கொண்டே இருந்தது. அவன் யாருடைய பாராட்டுக்காகவும் இதையெல்லாம் செய்யவில்லை. இயல்பாகவே அவனுள் இருந்த மனிதத் தன்மையால் தான் அவன் நேர்காணலைக் கூட பொருட்படுத்தாது ஓடினான். ஆனால் இந்த நாராயணன் அவனையே கொச்சைப் படுத்தி விட்டாரே?.பெரிய அதிகாரியாக இருந்தால் என்ன வேண்டுமானாலும் பேசிவிடலாமா? இவரையெல்லாம் கடவுள்தான் கேட்கவேண்டும். மனதில் பொருமிக்கொண்டே தூங்கிப்போனான் இனியன்.
ஆம் கடவுள் கேட்டுவிட்டர்தான். அந்த நல்ல மனிதனின் மனதை நோகவைத்த நாராயணனுக்கு அன்று மாலையே பைக்கில் போகும்போது ஆக்சிடெண்ட். அது ஒதுக்குப் புறமான பகுதி என்பதாலும் பார்த்த மனிதர்களும் நமக்கேன் வம்பு என்று ஒதுங்கி சென்றதாலும் கிட்டத்தட்ட ஒருமணிநேரம் கழித்து ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட நாராயணனின் ஒருகால் நிரந்தர ஊனமாகி விட்டது. ஒருமணிநேரதுக்கு முன்பே வந்திருந்தால் காலை எடுக்கவேண்டி இருந்திருக்காது என டாக்டர்கள் அபிப்பிராயப்பட்டபோது நாராயணனுக்கு இனியனின் ஞாபகம் வந்தது. அவன் அன்று அவ்வளோ வேகமாக செயல்படவில்லை என்றால் அந்த உயிர்கள் மடிந்துதானே இருக்கும். உயிரின் மதிப்பு தெரியாமல் அவனைப் போய் நோகடித்து விட்டோமே. முதல் வேலையாக அவனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நினைத்தபடி தூங்கிப் போனார்.
அவர் கண் விழித்துப் பார்த்தபோது எதிரில் இனியன் உட்பட அலுவலகத்தை சேர்ந்த அனைவரும் வந்திருந்தனர். தான் செய்த அனைத்து தீமைகளையும் மறந்து தன் நிலையைப் பார்த்து கண்கலங்கும் இனியனை கட்டித் தழுவிக் கொண்டார் நாராயணன்.
“என்னை மன்னிச்சுடுப்பா இனியன். நா அடிபட்டுக் கிடந்த அந்த நேரத்துல உன்னைத்தான் நெனச்சுக்கிட்டேன். உன்னைப்போல ஒருசிலராவது இருக்கறதாலதான் மழையே பெய்யுது. நீ செய்த காரியம் எவ்வளோ பெருசுன்னு இப்போதான் தெரியுது. இந்த சின்ன வயசுலேயே உனக்கு எவ்வளோ பொறுப்பு. உன் மேல கொண்ட காழ்புணர்ச்சியில நா உன்னை , நீ செய்த நல்ல காரியத்தை கேவலமாக பேசிட்டேன். அதுக்கு கடவுள் எனக்கு சரியான தண்டனை கொடுத்துட்டார். இது நியாயமான தீர்ப்புதான். அதுக்காக நான் கவலைப் படலை. ஆனா நியாயமா உனக்கு கிடைக்க வேண்டிய மேனேஜர் பதவி கிடைக்காம போனதுக்குதான் வருத்தப் படறேன்” என்றார்.
"இல்லை சார் இனியனின் நல்ல மனசுக்கு அப்படியெல்லாம் நடக்குமா? மறு நாளே இண்டர்வியூ வைத்து அதில் சிறப்பாக தேறிய இனியன்தான் இனி மேனேஜர்ன்னு சோமசுந்தரம் சார் சொல்லிட்டாரு. காலைல தான் ஆர்டர் வந்தது.." என்றார் தலைமை குமாஸ்தா. அதைக் கேட்டு உண்மையிலேயே மகிழ்ந்தார் நாராயணன்.
{kunena_discuss:785}