“நீ ரொம்பவே குடுத்து வச்சவன்டா நிதின். நந்தினி உன்னை திருத்த உன்னுடன் சண்டை போடக்கூட தயங்குவதில்லை. நீ என்னைப் போல சுதந்திரமா இருக்க ஆசைப்பட்டுக் கொண்டு அவுங்களோட சண்டை போடுவதும் அவுங்களை அழ வைக்கிறதும் எனக்குத் தெரியும். தயவு செய்து இனிமேல் அப்படியெல்லாம் செய்யதே. நந்தினி மாதிரி பெண்ணுக்குத்தான் ஒரு குடும்ப விளக்காக இருக்க எல்லா தகுதியும் இருக்கு. அவுங்களை நானும் கூட தப்பா நெனைச்சிட்டேன் அவுங்க வந்ததும் அவுங்க கிட்ட ஒரு சாரி கேட்டுட்டு நா கிளம்பறேன்” என்றான் கண்கலங்க.
நந்தினிக்கு தன் மேல் அளவிடமுடியாத அன்பு என்பதை நிதின் உணர்ந்திருந்தாலும் தெளிவாக அறிய முடியாதபடி இத்தனைநாள் அர்ஜுனின் வாழ்க்கை முறையும் சுயதம்பட்டமும் ஒரு திரையாக இருந்து மறைத்து வந்தது. இப்போதுதான் நந்தினி அவன்மேல் வைத்திருக்கும் அக்கறை புரிந்தது.
'சே அவளை எவ்வளோ கஷ்டப் படுத்திவிட்டோம். அவளும் அர்ஜுனின் மனைவிபோல இருந்திருந்தால் இந்நேரம் சந்தி சிரித்திருக்கும். ' என்று எண்ணியபடி
“வேண்டாம் அர்ஜுன் . நீ என் மனைவியிடம் மன்னிப்புக் கேட்கவேண்டிய அவசியம் இல்லை. இப்போ நீ சாரி கேட்டால் உன் குடும்ப விவகாரங்களை அவளிடம் சொல்ல வேண்டி வரும் , அது தேவையில்லாதது. அவளுக்கு என் மேல் உள்ளது சற்று அதிகப்படியான அன்புதான் என்பதையும் அவள் என்னை கட்டுப் படுத்தியதெல்லாம் என் மேல் கொண்ட அக்கறையால்தான் என்பதையும் நா இப்போ நல்லாவே புரிஞ்சுக்கிட்டேன். அதுவே போதும் " என்றான் நிதின்.
“சரி நிதின் , அப்போ நா கிளம்பறேன் . இந்த ஊரிலே இனிமே நா இருந்தா அவமானம். நா வேலையை ரிசைன் பண்ணப் போறேன். இனி என் சொந்த ஊரோட போய்டப் போறேன்” என்றபடி எழுந்தான் அர்ஜுன். நிதின் எவ்வளோ கெஞ்சியும் ராஜினாமா செய்யும் முடிவிலிருந்து அவன் மாறவில்லை.
அர்ஜுன் சென்று வெகுநேரம் அப்படியே சிலையாக அமர்ந்திருந்தான் நிதின்.
கோயிலிலிருந்து திரும்பிய நந்தினி, நிதின் ஒன்றுமே சாப்பிடாமல் அமர்ந்திருப்பதை பார்த்து கோபமானாள்.
"டிபன் செய்து டேபிள் மேலே வச்சிட்டு தானே கோயிலுக்குப் போனேன். உங்களுக்கு நேரத்துக்கு எடுத்து சாப்பிடக்கூட முடியாதா? பதினோரு மணிவரை சாப்பிடாமல் கிடந்தா உடம்பு என்னத்துக்கு ஆகும்" என்றாள்.
நிதினுக்கு என்னவோபோல ஆகிவிட்டது. ‘பதினோரு மணிவரை நீ சாப்பிடாமல் எனக்காக விரதம் இருந்துகொண்டு நான் சாப்பிடவில்லையே என்று கோபம் கொள்கிறாய் என் கண்மணி, உன்னை நான் ராட்சசி என்று நினைத்தது எவ்வளோ தவறு? நீ என் தேவதை அல்லவா?’ என்று மனதில் நினைத்தபடி அவளை நிமிர்ந்து பார்த்தான்.
அவன் அருகில் வந்த நந்தினி " என்னாச்சும்மா? உடம்பு ஏதும் சரியில்லையா ? காலைல நல்லா தான இருந்தீங்க " என்றபடி அவன் நெற்றியை தொட்டுப் பார்த்தாள்.
சட்டென தன் இரு கைகளையும் பேண்ட் பாக்கெட்டில் விட்டுக்கொண்டு "நந்தும்மா எனக்குதான் ரெண்டு கையும் இல்லையே ..என்னால இன்னிக்கி தானா சாப்பிட முடியாது. யாராவது ஊட்டிவிட்டால்தான் முடியும்” என்றபடி அவளை பார்த்து குறும்பாக சிரித்தான் .
அவள் முகம் பூவாக மலர்ந்தது.
{kunena_discuss:785}