22. தமிழுக்கு புகழ் என்று பேர் - புவனேஸ்வரி கலைச்செல்வி
கடற்கரை காற்று அந்த இரவில் குளிர்காற்றாக தமிழையும் யாழினியையும் தழுவிச் சென்றது. புகழ், ஆயிஷா, குமரன் மூவருமே தாங்கள் வந்த வேலை முடிந்துவிட்டது என்று அங்கிருந்து எப்போதோ கிளம்பியிருந்தனர். எதுவும் பேசாமல் அடிக்கடி தமிழின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள் யாழினி.
அவள் எதையோ சொல்ல விழைவதை உணர்ந்தான் தமிழ். இருப்பினும் அவளை ஊக்குவிக்காமல் போக்கு காட்டிக்கொண்டிருந்தான் அவன்.
“பார்க்கலாம் எவ்வளவு நேரம் இவ வாயி அடங்குதுன்னு”என்று சொல்லிக் கொண்டான் மனதிற்குள். தமிழின் விஷமமான ஆசையானது அவனுக்கே சிரிப்பை மூட்டியது. இருப்பினும் முடிந்த அளவிற்கு அதைக் காட்டிக் கொள்ளாமல் இருந்தான். அவனையே பார்த்துக் கொண்டிருந்த யாழினிக்கோ பொறுமை காற்றில் பறந்தது.
“தமிழ்..”என்று அழைத்ததுமே அவனுக்கு சிரிப்பு பீறிட்டுக் கொண்டு வந்தது.
“என்ன..என்ன ..ஏன் சிரிக்கிறீங்க?”
“ஹா.,ஹா.. ஒன்னுமில்ல..”
“என்ன ஒன்னுமில்ல? பொய் சொல்லுறீங்க..ஏன் சிரிச்சீங்க?”
“அடிப்பாவி..கல்யாணம் பண்ணி ஒன் ஹவர் கூட ஆகல..அதுக்குள்ள இப்படி மிரட்டுறியா?”
“ஆமா..அதெல்லாம் அப்படித்தான்..சொல்லுங்க ஏன் சிரிச்சீங்க..”
“அய்யே..அதெல்லாம் சொல்ல மாட்டேன் போ.. நீ என்ன சொல்ல வந்த?” என்றான் தமிழ். தன்னுடைய மிரட்டலுக்கு கொஞ்சமும் இசைந்து போகாத கணவனை பாசமாக பார்த்தாள் யாழினி.
“ தமிழ்.. இன்னைக்கு நீங்க பண்ணின விஷயம் ரொம்ப பெரிய விஷயம்..”
“நீ தானே ஆசைப்பட்ட?”
“ஆமா.. அதனாலத்தான் நெகிழ்ந்து போறேன்.. நான் ஆசைப்பட்டேன்னு இப்படி ரிஸ்கு எடுத்து செஞ்சுட்டீங்களே.. எனக்கு தமிழையும் தெரியும்.. தமிழுக்குனு இருக்குற சிலகோட்பாடுகளும் தெரியும். என்னை சந்தோஷப்படுத்துறதுக்காக நீங்க உங்க இயல்பை விட்டு கொடுக்காதீங்க தமிழ். ஆரம்பத்துல இரது இரசிக்க முடிஞ்ச சந்தோஷமான விஷயமா இருக்கலாம்.. ஆனா போக போக அதுவே நமக்குள்ள குழப்பத்தை உருவாக்கிடும்..”
“..”
“நான் ரொம்ப தெளிவாக இருக்கேன்.. தனக்கு சரின்னு படுறத மட்டுமே செய்யுற ஸ்ட்ரிக்ட்டு தமிழைத்தான் நான் காதலிச்சேன்.. காதலிக்கிறேன்..காதலிப்பேன்.. நீங்க எனக்காக மாறவே வேண்டாம்..” என்று உணர்ச்சிபொங்க பேசியவளின் தலையில் செல்லமாக தட்டினான் அவன்.
“ஏன்டீ.. இதுதான் உன் தெளிவா?”
“ஏன்? என்னவாம்?கஸ்டப்பட்டு இவ்வளவு டைலாக் யோசிச்சேன் தெரியுமா?” என்று சிணுங்கினாள் யாழினி.
“ஹா ஹா இப்படிப்பட்ட மொக்க டைலாக்கை நீ சொல்லாமலே இருந்திருக்கலாம்” என்று நக்கலடித்தவன் அவள் முறைக்கவும் கொஞ்சம் தன்மையான குரலில் விளக்கமளித்தான்.
“இது பாரு சோடாப்புட்டி, தன்னியல்பை மாத்திக்கிறது வேற, நமக்கு பிடிச்சவங்களுக்காக சில நேரம் தழைஞ்சு போறது வேற. உதாரணத்திற்கு நீ ஏதோ ஒரு மொக்க விஷயத்தை ஷேர் பண்ண என்னை தேடி ஓடி வரனு வெச்சுக்கோ..”
“நான் என்ன சொன்னாலும் அது உங்களுக்கு மொக்கையா?”
“அம்மா தாயே நாம சண்டை போட நிறைய டைம் இருக்கு. கண்டிப்பா அதுக்கான வாய்ப்பை உனக்கு தரேன். பட் இப்போ என்னை பேச விடு.. நீ ஏதோ சொல்ல வரும்போது நான் வேலை விஷயமாக ஆழ்ந்த யோசனையில இருக்கேன்.. இப்போ எதுவும் பேச வேணாம் யாழினினு சொல்லிட்டு நான் மறுபடி யோசனையில் ஆழ்ந்து போயிடுறேன்.. நீ என்ன பண்ணுவ?”
“ நீங்க ஏதோ யோசனையில் இருக்கும்போது அதை எப்படி தொந்தரவு பண்ணுவேன்.. அப்பறமா பேசிக்கலாம்னு போயிவேன்..”
“வெரி குட். நான் எதிர்ப்பார்த்த பதிலிது. எங்க நீ பாட்டுக்கு உல்ட்டாவா சொல்லிடுவியோன்னு பயந்தேன்”என்றவன், மீண்டும் தான் சொல்ல வந்த விஷயத்தை தொடர்ந்தான்.
“எதையும் நினைச்சதுமே சொல்லி முடிச்சிட்டு அடுத்த வேலையை கவனிக்கிறது உன் இயல்பு. அப்படி இருக்கும்போது நீ எனக்காக அப்பறம் பேசலாம்னு நினைக்கிறதுக்கு பேரு உன் இயல்பை மாத்திக்கிறதா? இல்ல விட்டு கொடுக்குறதா?”. தமிழ் சொல்ல வந்ததை புரிந்து கொண்டாள் யாழினி.
“ஹீ ஹீ.. விட்டுக்கொடுக்குறது தான்!” என்று அசடு வழிய சொன்னவளில் நெற்றியில் அழுந்த இதழ் பதித்து புன்னகைத்தான் தமிழ்.
“தமிழ்ழ்ழ்ழ்ழ்…”
“என்ன அடுத்த கேள்வி கேட்கனுமா உனக்கு?”
“ஹா.. ஆமா..”
“கேளும்..கேட்டு தொலையும்” சலித்து கொண்டது போல பாசாங்கு செய்தான் அவன்.
“ நாம இப்படி கல்யாணம் பண்ணிக்கிட்டது சரி இல்லைல? அப்பாவுக்கும் அத்தை மாமாவுக்கும் தெரிஞ்சா என்ன ஆகும்?”
“நாம என்ன ஜோடி மாத்தியா கல்யாணம் பண்ணிக்கிட்டோம்?”