சகுந்தலை அவனைப் பார்க்கப் பிடிக்காமல் வேறு திசையில் கவனத்தைச் செலுத்தினாள். இளவரசன் வீசி எறிந்த வாள் அவள் கண்களில் பட்டது.
"என்ன, உங்கள் நண்பன் இங்கு வீழ்ந்து கிடக்கிறான்" என்று கூறிக்கொண்டே அந்த வாளின் அருகில் சென்றாள்.
"அவனுக்கு என்னைப் பிடிக்கவில்லையாம். அதனால் தான் சென்று விட்டான்."
"ஏன்? இவனிடமும் கேலிப் பேச்சுப் பேசினீர்களோ? அதனால் தான் கோபித்துக்கொண்டான் போல" என்று கூறி வாளை இரு கைகளால் எடுத்தாள்.
"அம்மம்மா, இவ்வளவு கனமாக இருக்கிறதே? இதைக் கொண்டு எவ்வாறு சண்டையிடுகிறீர்கள்?"
இளவரசன், "பூக்களைப் பறிக்கும் கைகள் வாளைத் தொடலாமா?" என்று கூறி அதை வாங்கிக் கொண்டான். வாளை தன் இடையில் செருகிக்கொண்டான்.
பின் சகுந்தலையை ஒரு பார்வை பார்த்து, "பெண்ணே, விடைபெறும் முன் உன்னிடம் ஒரு சில வார்த்தைகள் பேச ஆசைப்படுகிறேன். நீ பேசிய வார்த்தைகளை ஓர் ஆண் மகன் பேசியிருந்தால், இந்நேரம் அவன் உயிர் காற்றோடு காற்றாகக் கலந்திருக்கும். நீ ஒரு பெண்ணாக இருந்ததால் தப்பித்தாய். முதலில் ஓர் ஆண் மகனிடம் எப்படிப் பேச வேண்டும் என்று கற்றுக்கொள். அதுவும் நான் இந்நாட்டு இளவரசன். என்னிடம் யாரும் இவ்வளவு திமிராகப் பேசியது இல்லை; உன்னைத் தவிர. மீண்டும் இப்படி நடந்துகொள்ளாதே" என்று கூறி சில அடிகள் முன்னே வைத்தான்.
"உங்கள் அறிவுரையை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. என்ன செய்து விடுவீர்கள்?"
ரவிவர்மன் அவளைத் திரும்பிப் பார்க்காமல் "கோபத்தின் எல்லைகளை பார்க்க விரும்புகிறாயா?" என்று சற்றுக் கடுமையாகக் கேட்டான்.
"ம்ம்ம்...அப்படியா? எங்கே காட்டுங்களேன் பார்க்கலாம்."
இளவரசன் கோபம் கொப்பளிக்க அவள் முன்னால் வந்து, "என்னிடம் திமிராகப் பேசாதே" என்றான்.
சகுந்தலை சாந்தமாக, "பேசினால்...." என்றாள்.
"பெண்ணென்று கூட பார்க்கமாட்டேன்" என்று கூறி வாளை உருவினான்.
"இதற்கெல்லாம் நான் பயப்படமாட்டேன்"
இருவரும் பார்வையாலேயே யுத்தம் செய்தனர். இப்படியே சில நொடிகள் கடந்தன. அனல் கக்கிய பார்வைகள் மறைந்து இருவரின் இதழ்களிலும் புன்முறுவல் அரும்பியது.
"காதலர்கள் இப்படியா சண்டையிட்டுக்கொள்வது" என்று பூங்கொடி பொய்யான சினத்தோடு கூறியதைக் கேட்டு இருவரின் புன்முறுவலும் வெடிச் சிரிப்பாக மாறியது.
தொடரும்...
{kunena_discuss:1135}