“நீ இப்படியே சாமியார் வேஷம் போட்டு சுத்து, ருத்ராவே உனக்கு தாலி கட்ட போறா” என்று மீண்டும் வாரினான் கார்முகிலன். இப்படி கிண்டலடித்தாவது நண்பனின் மனதில் சலனத்தை ஏற்படுத்திவிடலாம் என்று நினைத்தான் கார்கி. கார்கியும் கதிரும் ஒருவரை ஒருவரை வம்பளந்து கொண்டிருந்தாலும் தூரத்தில் ஃபோனில் உரையாடிக் கொண்டிருந்த பிரபஞ்சனை கவனிக்க தவறவில்லை.
முதலில் உற்சாகமாக பேசத் தொடங்கியவனின் முகத்தில், அதிர்ச்சி, சந்தேகம், கவலை அனைத்தும் வந்து போனது. அவன் ஃபோனை வைத்துவிட்டு மற்ற இருவரின் இடையிலும் அமர்ந்து கொண்டான்.
“பிரபா என்னடா நடக்குது?”
“மச்சான் நீங்க ரெண்டு பேரும் அந்த பொண்ணு பேரைக் கேட்டு பேசிட்டு இருந்தப்போவே நானும் எல்லாத்தையும்கேட்டுட்டு இருந்தேன்டா. உடனே நம்ம ப்ரண்ட்ஸ் சில பேருக்கிட்ட சாக்கு சொல்லி விசாரிக்க சொன்னேன்டா.”
“என்னச்சுடா?”
“அவ பொய் சொல்லுறான்னு தான் நினைச்சேண்டா.. ஆனா எதுவுமே பொய் இல்லை மச்சான். காலையில அவளுக்கு கல்யாணம் நடக்கவேண்டியது நின்னு போயி அப்பறமா அவ தங்க்ச்சிக்கு கல்யாணம் பண்ணி வெச்சுட்டாங்க..” என்று பிரபஞ்சன் சொல்லி முடிக்கவும்,
“இப்போ என்னடா பண்ணுறது?” என்றான் கதிரவன்.
“டேய் அவ பேச்சும் தைரியமும் பார்த்துட்டு பொய் சொல்லுறான்னு நினைச்சேன்டா. அதை ப்ரூவ் பண்ணி அவளை அனுப்பிடலாம்னு நினைச்சேன்.. இப்போ என்னடா பண்ணுறது?” என்று பிரபாவும் வினவ,
“டேய் நம்ம பிரச்சனைனு மட்டும் பார்க்காமல் கொஞ்சம் அந்த பொண்ணை பத்தியும் யோசிங்கடா.. பாவம்ல? தைரியமான பொண்ணா இருந்தாலும், யாரு கடத்தினாங்க எதுக்கு பண்ணாங்கனு கூட தெரியல..” என்றான் கார்முகிலன்.
“அதுக்கு நாம என்னடா பண்ண முடியும்?”- பிரபா.
“நம்மனால முடிஞ்சத பண்ணலாம்” கதிரவன் சொன்னான். பொதுவாகவே அந்த வீட்டில் கதிரவனின் வார்த்தையே கடைசி வார்த்தையாக அமையும். அவன் எதையும் பலமுறை யோசித்தே முடிவை சொல்லும் குணம் கொண்டவன் என்பதினால் மற்ற இருவரும் அவனது பேச்சையே கேட்பார்கள். கார்முகிலன் ஏற்கனவே லீலாவுக்கு உதவும் நோக்கத்தில் இருக்க, கதிரும் தன் முடிவை சொல்லிட பிரபாவும் இரு மனதுடன் சம்மதித்தான்.
அதன்பின் அவளை அவுட் ஹவுசில் தங்க வைக்கலாமா என ஆலோசித்து அது சரி வராது என்ற முடிவையும் எடுத்து இறுதியாக அவளை தங்களோடு இருக்க ஏற்பாடு செய்தனர்.
“மச்சான் அவங்க எப்போ வேணும்னாலும் வந்துருவாங்க.. அவளுக்கு தெரிய கூடாதுனு நினைக்கிற விஷயங்களை எல்லாம் மாத்துங்க கொஞ்சம்” என்று பிரபா உத்தரவு பிறப்பிக்க, அடுத்த அரைமணி நேரத்தில் வீட்டில் சில மாற்றங்களை ஏற்படுத்தினர்.
“ பிரபா, கதிர் இங்க வாங்கடா..அவகிட்ட நம்மள பத்தி என்ன சொல்ல போறோம்?” என கார்முகிலன் கேட்க, கதிரும் பிரபாவும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக் கொண்டு சத்தமாகவே சிரித்தனர்.
“டேய் ருத்ராவோட லொடலொட வாய் இந்நேரம் நம்மள பத்தி உளற ஆரம்பிச்சிருக்கும்” என்றான் பிரபஞ்சன். (ஆக இங்க இவங்களை தனியா விட்டுட்டு நம்ம ஹீரோஸ் பத்தி தெரிஞ்சிப்போம் வாங்க.. )
காரில், ருத்ராவிடம் நன்றாக பேசத் தொடங்கியிருந்தாள் லீலா. ருத்ராவிற்குமே லீலாவின் சுபாவம் பிடித்திருந்தது. அவர்கள் மூவரையும் தொந்தரவு செய்துவிடும் அளவிற்கு லீலா இருக்க மாட்டாள் என நம்பினாள் அவள். மேலும் அவர்களைப் பற்றி பேசினால் நிச்சயம் லீலாவின் மனதினை மாற்றிவிட முடியுமென நம்பினாள். அதற்கான வாய்ப்பினை லீலாவே ஏற்படுத்தி தந்தாள்.
“அவங்க மூணு பேரையும் உங்களுக்கு எப்படி தெரியும்?”-லீலா
“நாங்க எல்லாம் ஒரே காலேஜ்..”
“அவங்களும் டாக்டர்ஸ் ஆ?”
“ஹா ஹா .. இந்த நாடு தாங்காது லீலா.. எங்க காலேஜ் மெடி அண்ட் இஞ்ஜினியரிங் கொலாப்..”
“அப்படின்னா, உங்களுக்கு அவங்கள பத்தி தெரியுமா?”
“உனகென்ன தெரியனும்?”
“அவங்களுக்கு அப்பா அம்மா இல்லையா? ஏன் தனியா இருக்காங்க? அவங்கல்லாம் என்ன பண்ணுறாங்க?”
“ஹ்ம்ம் எனக்கும் அவங்க லைஃப் பத்தி ரொம்ப டீப்பா தெரியாது.. தெரிஞ்சவரை சொல்லுறேன்..”
“கதிர், பிரபா, கார்கி மூணு பேருமே ஒரே போர்டிங் ஸ்கூலில் படிச்சவங்கதான். அப்போ ஆரம்பிச்சு காலேஜ் லைஃப், அதுக்கு அப்பறம் இப்போவரை இதே மாதிரிதான் இருக்காங்க..”
“ காலேஜ் ஜாய்ன் பண்ணும்போது தான் மூணு பேரும் இன்னும் க்ளோஸ் ஆனாங்க.. கொஞ்சம் கொஞ்சமா அவங்கவங்க குடும்பத்தோட ஒரு விரிசல் இருந்த மாதிரி கேள்வி பட்டேன். கதிருக்கு ஃபேமிலினு யாரும் இல்ல. கார்கியும் பிரபாவும்தான் அவன் படிப்புக்கும் பொறுப்பு ஆனாங்க..”