கண்களை மெல்ல திறப்பதுவும் மூடுவதுமாய் குட்டிக் கண்ணனைப் பார்க்க தெவிட்டவில்லை வர்ஷினிக்கு.
அதுவும் குழந்தையை கையில் ஏந்திய போது அவளுக்குள் தாய்மை சுரந்தது.
அன்று மாலை வீடு திரும்பியதும் கணவனின் தோளில் சலுகையாய் சாய்ந்து கொண்டாள்.
“ராம் நாமளும் பாப்பா பெற்றுக் கொள்ளலாம்”
“நாம குழந்தை அடாப்ட் செய்துக்கலாம் அர்ஷுமா”
“சரி அப்போ பாய் பேபி அடாப்ட் பண்ணலாம்” என்று அவள் சொல்ல அவள் நெற்றியில் முத்தமிட்டவன் “சரி பையன் அடாப்ட் பண்ணிக்கலாம்” என்றான்.
“குட்டி அர்ஷு நாம பெற்றுக் கொள்ளலாம்” என்றாள் அவள்.
முதன்முதலில் காதலை உணர்த்திய அன்றே குட்டி அர்ஷுவை கற்பனை செய்தவன் தானே கணேஷ் .
“வேணும்னா கேர்ள் பேபி அடாப்ட் செய்துக்கலாம் அர்ஷுமா” என்று மீண்டும் அதே பிடியில் இருந்தான்.
இனி இவனிடம் சொன்னால் சரி வராது என்று சுமித்ராவிடம் சென்றாள்.
சுமித்ரா ராமிற்கு ஒரு மணி நேரம் க்ளாஸ் எடுத்தார்.
“நீ என்ன தான்டா நினச்சுட்டு இருக்க. நான் கூட அவ தான் பயந்து ஏதோ சொல்லிருக்கான்னு பார்த்தேன். அவ அவ்வளவு ஆசையா இருக்கா”
“இல்ல மா. அவளுக்கு கஷ்டமா இருக்கும். அவளுக்கு வலிக்கும்மா”
ஹவுஸ் சர்ஜன் படிக்கும் போது டெலிவரி மேற்கொண்ட அனுபவம். அப்போது பெண்கள் வலியில் துடிப்பது எல்லாம் அறிந்தவன்.
“இதோ பார். இயற்கையை நீ மாற்ற முயற்சிக்காதே. குழந்தையை தத்து எடுத்துக் கொள்வது என்பது நல்ல சிந்தனை. கண்டிப்பா செய்வோம். ஆனால் வர்ஷினிக்கு தாய்மை அனுபவங்களை மறுப்பது தப்பு. எத்தனையோ பெண்கள் குழந்தை இல்லை என்று தவம் இருக்கிறார்கள். அவர்களுக்கு இயற்கை தடையை இருக்கிறது. ஆனால் இங்க நீ வர்ஷினிக்கு தடையா இருக்க”
சுமித்ரா சற்று அழுத்தமாய் சொல்லவும் கணேஷ் ராம் தயக்கத்துடனே தலை ஆட்டினான்.
இதோ வர்ஷினி இப்போது தாய்மை அடைந்து இருக்கிறாள்.
வர்ஷினிக்கு பொதுவாக ஆரம்ப காலங்களில் வரும் உபாதைகள் அவ்வளவாக இல்லை எனும் போதும் சிறுசிறு விஷயங்களையும் ராம் மிகவும் கவனித்து செயல்பட்டான்.
நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக குட்டி அர்ஷு வளர வளர வர்ஷினி ராம் இருவரும் ஒவ்வொரு நொடியையும் ரசித்தனர்.
முக்கியமான சர்ஜரி மட்டும் ஒப்புக் கொண்டு மனைவியுடனே அதிக நேரம் செலவழித்தான்.
சீரும் சிறப்புமாக சீமந்தம் முடிந்த நிலையில் லக்ஷ்மி வர்ஷினியை தங்கள் வீட்டிற்கு அழைத்துச் செல்ல வேண்டினார்.
“ப்ளீஸ் அவள் இங்கேயே இருக்கட்டுமே” ராம் அவர்களிடம் கெஞ்சிக் கேட்க என்ன சொல்வது என்று தெரியாமல் விழித்தனர் ராமசந்திரன் லக்ஷ்மி தம்பதியினர்.
“அம்மா அப்பா அம்மு இங்கேயே இருக்கட்டும். சுமித்ரா அத்தை கூட இருப்பது தான் அம்முவுக்கு நல்லது” வருண் எடுத்துச் சொல்லவும் ஒப்புக் கொண்டனர்.
அன்று பத்தே நிமிடங்களில் வர்ஷினியின் பயத்தைப் போக்கி அவளை திருமணத்திற்கு சம்மதிக்க வைத்தவர் அல்லவா. மேலும் அவரும் மகப்பேறு மருத்துவர் என்பதால் வர்ஷினிக்கு இங்கே இருப்பதே சரி என்று தீர்மானித்தான் வருண்.
குழந்தை பிறக்க இருக்கும் தேதி நெருங்க நெருங்க வர்ஷினி ராமின் தோளிலும் மார்பிலுமே சாய்ந்திருந்தாள்.
“ராம் நீங்க பாப்பா கிட்ட பாசமா இருக்கிற மாதிரி நான் என் அம்மா வயிற்றுக்குள் இருந்த போது என் அப்பாவும் என் மேல் பாசமாக தான் இருந்திருப்பார் இல்லையா”
“என்னை அப்பா ஒரு முறை கூட பார்க்கவே இல்லையா ராம்”
அதுவும் தினம் தினம் லக்ஷ்மி ராமச்சந்திரன், காயத்ரி, வருண் எல்லோரும் வந்து அவளை சீராட்டி விட்டு செல்வர். கணேஷ் ராமோ கேட்கவே வேண்டாம். தன் உள்ளங்கையில் வைத்து தாங்கினான். சுமித்ரா ரவிசங்கர் இருவருமே அவளை இமைக்குள் வைத்து பாதுகாத்தனர்.
“அத்தை எனக்கு நீங்க எல்லோரும் எவ்வளவு பார்த்து பார்த்து செய்றீங்க. அம்மாக்கு எல்லாமே அப்பா தான் செய்திருப்பார் இல்லையா”
ஏனோ வர்ஷினி இப்போதெல்லாம் இவ்வாறே சொல்லிக் கொண்டிருந்தாள்.
“அவளுக்கு மனசில் பயம் வந்திருச்சு. அது அவ்வளவு நல்லது இல்ல ராம். நீ அவளோட டெலிவரி போதும் கூடவே இருப்பது நல்லது” என்று மகனையும் தயார் படுத்தினார் சுமித்ரா.
ஒன்பதாம் மாதத்தின் போது ராமிற்கு ஓர் போன் வந்தது.
“செர்ரி... பாஸ் சொல்லுங்க”
“..............”