ஓர் முக்கியமான சேஸ் ஸ்டடி படித்துக் கொண்டிருந்தான். அவனது மடியில் தலை வைத்து சோபா மீது கால் மடித்துப் படுத்துக் கொண்டிருந்தவள் அவனை அழைத்தாள்.
“ஹ்ம்ம்” என்று பதில் அளித்தவன் மீண்டும் ஜர்னலில் மூழ்கி விட்டிருந்தான்.
“ராம்” வர்ஷினி மீண்டும் அவனை அழைத்தாள்.
பொதுவாக கணேஷ் ராம் பணி முடித்து வீடு திரும்பியதும் இரவு உணவு முடித்து சோபாவில் அமர்ந்து சிறிது நேரம் பேசிக் கொண்டிருப்பர்.
கணேஷ் சில சமயம் மருத்துவம் தொடர்புடைய ஜர்னல்ஸ் படித்துக் கொண்டிருப்பான். அப்போது வர்ஷினி அவனை தொல்லை செய்யாமல் அவன் மடியில் தலை வைத்து ஹெட்போனில் பாட்டு கேட்டபடியே உறங்கிப் போவாள்.
ஆனால் அன்று மீண்டும் மீண்டும் கணவனை அழைத்தாள் அவள்.
படித்துக் கொண்டிருந்த ஜர்னலை மூடி வைத்து விட்டு மனைவியின் முகம் நோக்கினான்.
“சொல்லுங்க மிசஸ் ராம்” என்றான் சற்றே குறும்பு இழையோட.
அவளை அவன் அப்படி அழைக்கும் போதெல்லாம் அந்த நாள் ஞாபகம் நினைவிலே தாலாட்டி விட்டுச் செல்லும்.
ஆனால் அன்றோ வர்ஷினி ஏதோ தீவிர சிந்தனையில் இருந்தாள்.
“ராம் இன்னிக்கு அண்ணியை பார்க்க போனேன். அண்ணி ரொம்ப இளைச்சு போய்டாங்க. சாப்பிடவே முடியலையாம். தலை எல்லாம் சுத்துதாம்”
“அது இப்போ தானே ஸ்டார்டிங். கொஞ்ச நாளைக்கு அப்படி தான் இருக்கும், அப்புறம் சரி ஆகிடும்”
“அப்போ நமக்கு பாப்பா வந்தா எனக்கும் இப்படி தான் மயக்கமா வருமா. அது சின்ன வயதில் எனக்கு வருமே அது போல இருக்குமா இல்ல இது வேறயா ராம்”
அவள் முகபாவனைகள் வெகு தீவிரமாக இருந்ததை கவனிக்கத் தவறவில்லை அவன்.
அவள் அவ்வாறு கேட்கவும் அவளை அப்படியே வாரி அணைத்துக் கொண்டான்.
மறுநாள் காலையில் முதல் வேலையாக தனது பெற்றோரிடம் முக்கியமான விஷயம் குறித்து பேச வேண்டும் என்றான்.
“நாங்க ஓர் குழந்தையை தத்து எடுத்துக் கொள்ளலாம்ன்னு இருக்கோம்”
“நல்ல விஷயம் தான். என்ன மித்ரா” தந்தை சம்மதம் கூறிய போதும் தாய் முகத்தைப் பார்த்தான்.
“கண்டிப்பா நல்ல விஷயம் ஆனா உங்களுக்கு குழந்தை பிறக்கும் போது சேர்த்தே தத்து எடுத்துக் கொள்ள போறீங்களா. இல்லை இரண்டாவது குழந்தையாகவா” சுமித்ரா கேட்கவும் ரவிசங்கருக்கு ஒன்றும் புரியவில்லை.
கணவன் முகத்தைப் பார்த்தே அதைக் கண்டுகொண்ட சுமித்ரா மகனை நோக்கினார்.
“இல்ல மா. எங்களுக்கு குழந்தை வேண்டாம்”
“ஏன்டா”
“அது வந்து மா. அவ கஷ்டப்படுவா மா” தலையைக் குனிந்து கொண்டு மகன் சொல்லவும் ரவிசங்கர் இப்போது மேலும் புரியாமல் மனைவியைப் பார்க்க சுமித்ராவோ அலுத்துக் கொண்டார்.
“ஏன்டா நீ ஒரு டாக்டர் மாதிரியா பேசுற”
“அது மத்தவங்களுக்கு. அர்ஷுக்கு நான் அவளோட கணவன் மட்டும் தான்”
“அப்போ ஒழுங்கா லட்சணமா கணவனா மட்டும் இரு. அவளுக்கு டாக்டரா நான் பார்த்துக்கிறேன்” அன்னை கூறியதும் பதில் ஏதும் பேசாமல் சென்று விட்டான்.
காயத்ரியின் மேடிட்ட வயிற்றை ஆசையோடு வருடினாள் வர்ஷினி. குழந்தை அசையவும் அதை உணர்ந்தவள் சிலிர்த்துப் போனாள். ஐந்து மாதங்கள் ஆகியிருந்த நிலையில் காயத்ரியின் தாய்மை மிளிர்வைக் கண்டு பூரித்துப் போனாள்.
தினம் மாலை சிறிது நேரம் காயத்ரியுடனே கழித்தாள்.
அதுவும் ஒரு முறை ஸ்கேன் செய்ய சென்ற போது வர்ஷினியையும் உடன் அழைத்துச் சென்றிருந்தாள் காயத்ரி.
அப்போது குழந்தையை ஸ்கேனில் பார்த்த போது ஆச்சரியம் அடைந்தாள்.
“அண்ணி பாப்பா!!! மூக்கு மட்டும் அப்படியே வருண் அண்ணா மாதிரி” என்று அணுஅணுவாய் ரசித்துப் பூரித்தாள்.
“ஹஸ்பன்ட் வைப் அதிகமா லவ் பண்ணா அம்மா மாதிரி பெண் குழந்தை பிறக்குமாம். அதே மனைவியை கணவன் அதிகமா நேசித்தால் அப்பா மாதிரி பையன் பிறப்பானாம், தெரியுமா உங்களுக்கு” என்று முன்பு விளையாட்டுக்காக கணேஷ் ராம் சொல்லியதை சொன்னாள்.
“அதெல்லாம் ஒன்னும் இல்ல ஜீன்ஸ் தான் தீர்மானம் செய்யுது” காயத்ரி சிரித்துக் கொண்டே சொன்னாள்.
வர்ஷினிக்கோ கற்பனையில் ராம் ஜடையில் பெண் குழந்தை தான் வந்து போனாள். ‘ராம் மாதிரி பாப்பா இருந்தா ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் அதிகமா லவ் செய்றோம்ன்னு தானே அர்த்தம்” என்று அவளாகவே விளக்கம் கூறிக் கொண்டாள்.
காயத்ரியின் வளைகாப்பின் போதும் எல்லாவற்றையும் முன்னின்று செய்தவள் வர்ஷினி தான்.