தொடர்கதை - தாபப் பூவும் நான்தானே… பூவின் தாகம் நீதானே - 10 - மீரா ராம்
தீபனை முறைத்துக்கொண்டிருந்த சாரு, அடுத்து அவனை திட்ட முனைவதற்குள், தீபனின் கைபேசி ஒலித்திட, அவன் அதனை எடுத்து காதுக்கு கொடுத்தவாறு சாருவைப் பார்த்து சிரித்தபடியே பேச,
“நீ திரும்பி வருவல்ல… அப்போ உன்னைப் பேசிக்கிறேன்…” என்ற தோரணையில் அவளும் அவனை மிரட்டினாள்…
“ஆஹான்… அதையும் பார்த்துடலாம்…” என அவளிடம் வம்பிழுத்தவன், போனில் சொன்ன தகவலைக் கேட்டு சிரிப்பை நிறுத்தினான்…
காரசாரமான விவாதத்தைத் தொடர்ந்து அவன் சோபாவில் செல்போனை போட்டுவிட்டு அவளருகில் பொத்தென்று அமர, அவன் முகத்தை உற்றுநோக்கினாள் சாரு…
“தீபா…” பெயரை அழைத்தபடி தமையனின் தோளின் மீது அவள் கைவைத்திட,
“ம்ம்ம்ம்” என்றான் அவன்…
“என்னாச்சுடா?....”
அவள் வினவிட, “அந்த அனிதா விக்கிக்கு போன் போட்டு திட்டிருக்கா…” என்றான் அவன் யோசித்தபடியே…
“அவ ஏண்டா இவனை திட்டுறா?...”
“வேற எதுக்கு?... அட் சக்ஸஸ்புல்லா முடிச்சிட்டான்ல…. அதான்…”
“விக்கி அப்செட்டா இருக்குறானா?...”
“ம்ம்… கொஞ்சம்….”
“இன்னும் அவன் எதையும் மறக்கலையாடா?...”
“எப்படிக்கா முடியும்?... ஃபர்ஸ்ட் லவ்….. எப்படி ஈசியா மறக்க முடியும்?...”
“ம்ம்ம்ம்… நீ அவனுக்கு போன் பண்ணி கொடு… நான் பேசுறேன்…”
சாரு அமைதியாக சொல்ல, தீபன் அவளை பார்த்திட்டான் மெல்ல…
“போன் போட்டு கொடுன்னு சொல்லுறேன்லடா… கொடு….”
அவள் வார்த்தைக்கு செவிகொடுத்து அவனும் போன் செய்து கொடுத்தான்…
“விக்கி… நான் சாரு பேசுறேன்…”
“சொல்லுங்க அக்கா….”
“கங்கிராட்ஸ் விக்கி… அட் பார்த்தேன்… ரொம்ப நல்லா வந்திருக்கு… இந்த வெற்றி போதாது… சீக்கிரமே பிக் ஸ்க்ரீன்ல உன்னை பார்க்கணும் சரியா?...”
“கண்டிப்பாக்கா…” என்றவனின் குரலில் உறுதி இருந்திட்டாலும் அதனையும் மீறிய ஒரு சோகம் இருந்திட தான் செய்தது…
அதனை அவளாலும் புரிந்திட முடிந்திட்டது…
“ஒரு தோல்வி கிடைக்குறப்போ தான் விக்கி, வெற்றியோட அருமை நமக்கு தெரிய வரும்… எத்தனையோ நாள் இந்த ஒரு வாய்ப்புக்காகத்தான் நீ காத்திட்டிருந்த… இன்னைக்கு அந்த வாய்ப்பும் கிடைச்சு, நீ காலூன்றிருக்க… அதை நீ இப்போ உன்னோட கடந்த காலத்தால தொலைச்சுடக்கூடாதுன்னு தான் நான் நினைக்குறேன்…”
“நானும் அதை நினைக்க்க்கூடாதுன்னு தான் நினைக்குறேன்க்கா… ஆனாலும்….”
அவன் மேற்கொண்டு பேச முடியாது தடுமாறிட,
“விக்கி…. அன்னைக்கு அவ அட் பண்ண முடியாதுன்னு சொல்லிட்டு போனப்போ, உன்னோட மனசு அவளையா நினைச்சுச்சு?… இல்ல தான… அந்த அட் அ எப்படி முடிக்கணும்னு தான நினைச்ச?... அதே போல தான் இப்பவும், உன்னை எதுலயாவது ஈடுபடுத்திட்டே இரு,… சாதிக்கணுங்கிற வெறியை உனக்குள்ள கொண்டு வந்துகிட்டே இரு… அடுத்த கட்டத்துக்கு உன்னை நீ கொண்டு போகணும்… அது தான் எங்களோட விருப்பமும்…” என்றாள் அவள் எடுத்துரைத்தவண்ணம்…
“கண்டிப்பா உங்க எல்லாரோட விருப்பத்தை நிறைவேத்துவேன்க்கா…”
“குட்…. அவ பேசினதை எதையும் மனசுல வச்சிக்காத விக்கி...”
“நானும் அப்படித்தான் நினைக்குறேன்… ஆனா முடியலையே அக்கா…”
“அவளும் பாவம் தான விக்கி… அவ சைடுல இருந்தும் கொஞ்சம் யோசிச்சுப்பாரேன்…”
சாரு சொன்னதும், அவனுமே நடந்து முடிந்த நிகழ்வினை அவளிட்த்தில் இருந்து யோசித்துப்பார்த்திட்டான்…
விக்கியும் அனிதாவும் நட்பாகவே இருந்த போதிலும், அனிதாவிற்கு விக்கியின் நற்குணங்கள் பிடித்துப்போக, அது நட்பையும் தாண்டி வளர்ந்து காதலென அரும்பாக, அதை அவனிடத்தில் ஓர்நாள் அவளும் தெரியப்படுத்திட, தனக்கு அப்படி ஒருகாதல் வரவில்லை என்றும், தன் கனவுகள் இப்போது காதலில் இல்லை எனவும் அவன் கூறிட, அவளும் அவனின் வெற்றிக்காக காத்திருக்க தொடங்கினாள்…
அவ்வேளை, அனிதாவிற்கு சில வாய்ப்புகள் கிடைத்து, அவள் சற்று முன்னேற ஆரம்பித்திட, ஒருநாள் இருவரும் வெளியே செல்ல நினைத்திருந்தனர்…
ஹோட்டலில் அவளுக்காக அவன் பல மணி நேரம் காத்திருக்க நேரிட, வந்தவள், அவனிடம் சாரி கூட கேட்டிடாது, போன் பேசிக்கொண்டே வந்தபடி அமர்ந்து, அவனிடம் என்ன ஏது என்று கூட கேட்டிடாமல், ஆர்டரை குறித்துக்கொடுத்தாள்…
அவளின் புன்னகை உரையாடல் போனில் தொடர்ந்து கொண்டே இருக்க, அவன் இமை ஆடாது பார்த்துக்கொண்டே இருந்தான்… கடைசியில் ஆர்டரும் வர, அவன் பொறுமையிழந்தான்…