தொடர்கதை - வெள்ளை பூக்கள் இதயம் எங்கும் மலர்கவே – 05 - புவனேஸ்வரி
மித்ரனே,
சொல்லி பகிர்ந்த சந்தோசங்களைவிட வார்த்தையின்றி
சொல்லாமல் பகிர்ந்த சோகங்களில் உணர்கிறேன்!
மௌனத்தில் நாம், உரையாடலில் நட்பென!
கோயம்புத்தூர்!
மாடு மெய்க்கும் கண்ணே
நீ போக வேண்டாம் சொன்னேன்!
காய்ச்சின பாலு தரேன்;
கல்கண்டு சீனி தரேன்!
கைநிறைய வெண்ணெய் தரேன்!
வெயிலிலே போக வேண்டாம்!
அந்த பாடலில் தன்னையே மூழகடித்து கொண்டிருந்தார் அந்த பெண். அருமையான பாடல் அது. பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் குழந்தை பருவத்தில் இருந்தே அவரை கொள்வதற்கு கம்பசனால் பல இன்னைல்கள் உருவாக்கப்பட்டது.அன்னை யசோதா கண்ணனின்மீது எல்லை கடந்த அன்பை பொழிபவர். கண்ணனின் பாதுகாப்புக்காக அவரைத் தன் கண் பார்வையிலேயே வைத்துக்கொள்ள நினைத்தார்.
அன்னையின் பார்வையில் இருக்கும் மதுசூதனனால் எப்படி மாயங்களை நிகழ்த்தி காட்டிட முடியும்?அதனால் யசோதா அன்னைக்கு தெரியாமல் அவ்வப்போது வெளியேறிவிடுவாராம். ஒருநாள் தன்னை அப்படி வெளியேற விடாமல் தடுக்கும் அன்னையப் பார்த்து மாடு மெய்க்க கானகம் செல்ல வேண்டும் என கண்ணன் அனுமதி கேட்டிட புதல்வனை தடுக்க அன்னை யசோதா பாடும் பாடல் அது.
வெவ்வேறு காரணங்களை அடுக்கி அவர் தடுக்க மாதவனோ,
“போக வேண்டும் தாயே
தடை சொல்லாதே நீயே!” என கெஞ்சி கொஞ்சுவதாக அமைந்திருக்கும் பாடல் அது. அந்த பாடலில் பிரதிபலிக்கும் அன்னையின் பரிதவிப்பையும் கண்ணனின் குறும்பையும் உணர்ந்தவராக அந்த பாட்டில் இலயித்திருந்தார் அவர்.
“லீலாம்மா..என்ன பையன் ஞாபகம் வந்துருச்சா?” மனைவியின் கேசத்தை வருடியப்படி அருகில் அமர்ந்தார் ரவிந்திரன்.
“எப்போ மறந்தேன்ங்க?”என்று ஏக்கமாக வினவிய லீலாவதி சேலைதலைப்பில் கண்ணீரை துடைத்துக் கொண்டார்.
“என்னம்மா நீ? சொன்னா கேட்கவே மாட்டியா? எங்க இருந்தாலும், எப்படி இருந்தாலும் அவன் உன் பையனாச்சே.. நீ நினைக்கிற மாதிரி உன்னை அவனும் நினைச்சிட்டுதான் இருப்பான்”
“இதைத்தான் நானும் காலம் காலமா சொல்லிட்டு இருக்கேன்..ஸ்கூல் படிக்கிறப்போ சொல்ல ஆரம்பிச்ச வசனம் ..இப்போ நானே காலேஜ் போயி ஒரு வருஷம் ஆகுது.. இன்னமும் என் பேச்சு உங்களுக்கு புரியலயாம்மா?” என்று வழக்கம் போலவே படபடப்புடன் பேசியப்படி அங்கு வந்தாள் சந்திரமதி. அந்த வீட்டின் கடைக்குட்டி.
“வந்துட்டா பெரிய மனுஷி.. இதுக்குமேலஇந்த சீன்ல எனக்கு வரவேண்டிய டைலாக்கையும் சேர்த்து இவளே பேசிடுவா பாரேன்” என்று ரவிசந்திரன் நொடித்துக்கொள்ள அவரைப் பார்த்து கழுத்தை வெட்டிக்கொண்டு திரும்பினாள் சந்திரமதி.
“என்னை வம்பிளுக்கலன்னா அப்பாவுக்கு தூக்கமே வராதாம்மா? நீங்களும் எல்லாத்தையும் பார்த்தட்டு சும்மா இருக்கீங்க!” என்று இளையவள் வாதிடவும் விழிகளை அகல விரித்து பெருமூச்சு விட்டார் லீலாவதி. பொதுவாகவே மகளென்றால் அப்பாக்களுக்கு கண்ணின்மணியாக இருப்பார்கள், அன்னையிடமே சண்டை பிடிப்பார்கள் என்ற சட்ட்தையே மாற்றி அமைக்கும் இருவர் இவர்களே. ரவிச்சந்திரன் எதை சொன்னாலும் அதை எதிர்த்து துடுக்குத்தனமாக பதில் கொடுக்கும் சந்திரமதி, மகளின் பேச்சை சீண்டி வெறுப்பேற்றும் தந்தை என் இருவருமே சரமாரியான எதிராளிகள்தான்!
“பிரபு நம்மளயே நினைச்சிட்டு இருப்பான் என்பதுல எனக்கும் சந்தேகம் இல்லம்மா.. இருந்தாலும் அதுவே எனக்கு மனத்தாங்களாக கஷ்டமா இருக்கு. அவன் சரியான கள்ளன்.. எதை சொல்லனும் எதை மறைக்கனும்னு ப்ளான் போட்டு நடப்பான்.. அவன் மனசை புரிஞ்சுக்குற மாதிரி யாராவது அங்க இருக்கனும்.. தினமும் அதுதான் என் ஆசை” என்று லீலாவதி சொன்ன நேரம்,
(சென்னை)
இதழில் மென்னகையை படரவிட்டு கண்களை திறந்தாள் பிரசன்னலீலா! புது இடம், பயம், கவலைகள், சிந்தனைகள், திடீரென்ற சத்தமென்றும் பல காரணங்களினால் அவள் உறங்கவே தாமதமானது. அதனால் அவள் தாமதமாகவே எழுந்தாள். தூரத்திலிருந்து சுப்ரபாதம் ஒலிப்பதைக் கேட்டதும் மீண்டும் இதழில் புன்னகையை தவழவிட்டாள். பொதுவாக அவளின் வீட்டிலுமே ஒவ்வொரு நாளும் இப்படித்தான் விடியும்..
“இனி வரும் நாளாச்சும் எல்லாருக்கும் சந்தோஷத்தை தரணும் கிருஷ்ணா” என்று வாய்விட்டே சொன்னவளுக்கு நேற்றைய இரவு கேட்ட அந்த சத்தம் ஞாபகத்திற்கு வந்தது.