தொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே!! - 06 - சித்ரா. வெ
மலர்கொடி, மணிமொழியின் கணவன்மார்களும், அவர்களின் புகுந்த வீட்டினரும் வந்திருக்கவே வீடு பரப்பரப்பாக இருந்தது.. அவர்களை வரவேற்க, இடம் பார்த்து அமர வைக்க, உபசரிக்க என்று அனைவரும் பரபரப்போடு காணப்பட்டனர். ஆனால் எழில் மட்டும் அதில் கலந்துக் கொள்ளாமல் ஒரு ஓரமாக நின்றிருந்தாள். கதிர் அவளை கண்காணித்தப்படி இருந்தார். கொஞ்சம் பரபரப்பு அடங்கி அனைவரும் பேசிக் கொண்டிருந்த போது, எழிலின் அருகில் வந்தவர், கொஞ்சம் மெல்லிய குரலில் அவளிடம் பேச ஆரம்பித்தார்.
“எழில்.. கொஞ்சம் முன்ன நல்லா தான இருந்த.. இப்போ திரும்ப என்னாச்சு.. மகி உன்கிட்ட என்ன சொன்னான்..”
“அதெல்லாம் ஒன்னுமில்ல.. சும்மா தான் கூப்பிட்டான்..”
“என்கிட்ட மறைக்க நினைக்காத.. உன்னோட முகமே ஏதோ பிரச்சனைன்னு காட்டிக் கொடுக்குதே!! என்னன்னு சொல்லு..”
“ சொல்லுன்னா.. என்ன சொல்ல? இப்போ இதைப்பத்தி உங்கக்கிட்ட பேசறதால ஒன்னும் ஆகப் போறதில்ல.. அப்புறம் எதுக்கு சொல்லனும்?”
“அப்படி என்ன விஷயம்?”
“இங்கப்பாருங்க..” சுடரொளி புவியிடம் கொடுத்து அனுப்பியிருந்த கடிதத்தை எடுத்து காட்டினாள். அதை வாங்கி படித்துக் கொண்டிருந்த கதிரவனின் முகத்தை வைத்து அவர் மனதில் என்ன ஓடுகிறது? என்பதை எழிலரசியால் கண்டுப்பிடிக்க முடியவில்லை. படித்து முடித்தவர் திரும்ப எழிலிடம் கடிதத்தை கொடுத்தவர்,
“முன்ன சொன்னதை தான் இப்பவும் சொல்றேன்.. அவ இப்போ லண்டனுக்கு போறது தான் நல்லது.. அவ நல்ல முடிவு தான் எடுத்திருக்கா.. நீ அவளை பத்தி கவலைப்பட்டுக்கிட்டு இருக்காத, அப்புறம் எல்லோரும் என்ன ஏதுன்னு கேப்பாங்க.. ஒரு நல்லது நடக்கறப்போ, முகத்தை உம்முன்னு வச்சிருப்பது நல்லாவா இருக்கு.. நம்மலால இந்த பங்க்ஷன்ல எந்த பிரச்சனையும் வந்துடக் கூடாது.. நான் போய் ஆனந்திக்கிட்ட பேசிட்டு வரேன்.. சுடர் அங்க தான் வரான்னு சொல்லிட்டு வரேன்..” என்று வெளியே சென்றார்..
“பரவாயில்ல.. பொண்ணு மேல இந்த அளவுக்காவது அக்கறை இருக்கே.. அதுவே அதிசயம் தான்..” என்று பெருமூச்சு விட்டுக் கொண்டாள். “ கதிர் சொல்வது போல், சுடர் இப்போதைக்கு லண்டனுக்கு செல்வது தான் நல்லது..” என்று தன் மனதை சமாதானப்படுத்திக் கொண்டாள். சில நிமிடங்கள் கழித்து அவளின் அருகில் வந்தவர், “ஆனந்திக்கு போன் போகல.. பங்க்ஷன் முடிஞ்சதும் திரும்ப பண்ணி பார்க்கலாம்” என்றார்.
சுடரொளி விமான நிலையம் வந்து சேர்ந்த போது, விமானம் கிளம்புவதற்கான நேரம் நிறையவே இருந்தது.. இன்னும் போர்டிங்க்கான அழைப்பு கூட அறிவிக்கப்படவில்லை.. அவள் எடுத்த முடிவை செயல்படுத்துவதற்கான நேரம் அதிகமாகவே இருந்தது. அவளை பொறுத்தவரை அவள் சாக வேண்டுமென்று முடிவெடுத்துவிட்டாள். ஆனால் அவள் முடிவால் யாருக்கும் எந்த விதத்திலும் சிரமம் ஏற்பட்டு விடக் கூடாதென்பது தான் அவளது எண்ணம்.
அவள் இறந்த செய்தி கூட யாரின் காதுக்கும் எட்டாமல் போய்விட வேண்டுமென்று நினைத்தாள். அவள் இறந்துவிட்டது தெரிந்து அதனால் யார் மனதையும் வருத்தப்பட வைக்கக் கூடாது.. வீட்டிலிருந்து கிளம்பும் போது ஒருவேளை மகிழ் பதில் தான் நினைத்ததற்கு எதிரானதாக இருந்தால், செக்கிங்கிற்காக உள்ளே செல்வதற்கு முன் விஷத்தை குடித்து விடவேண்டும்.. அவள் இங்கிருந்து போகும்போதே அவள் உயிர் பிரிந்துவிட வேண்டும் என்பது தான் அவள் சிந்தனையாக இருந்தது.. அங்கே வீட்டில் இருளில் அமர்ந்து அதை தான் சிந்தித்துக் கொண்டிருந்தாள்.
ஆனால் இப்போதோ அவள் நினைத்தது எந்த அளவிற்கு சாத்தியமாகும் என்று தான் தெரியவில்லை.. இப்போது இவள் இறந்து போனது, விமானத்தில் உள்ளவர்களுக்கு தெரியவந்தால், இவளது பாஸ்போர்ட், விசா எல்லாம் வைத்து இவளைப் பற்றி அறிந்துக் கொள்வார்கள்.. அதன்பின் தானாகவே இவள் இறந்த செய்தி வீட்டுக்கு தெரிய வரும்.. இன்று அனைவரும் மகிழ், அருள்மொழிக்கு நடக்கப் போகும் நிச்சயாதார்த்த மகிழ்ச்சியில் இருப்பார்கள். நாளை இவள் இறந்த செய்தி அவர்கள் காதுக்கு எட்ட வேண்டுமா? பேசாமல் வேறெங்காவது கண் காணாத தூரத்திற்கு சென்றுவிட்டாள் என்ன? அங்கே சென்று தற்கொலை செய்துக் கொண்டால், யாருக்கும் அவள் இறந்த செய்தி தெரியாமலேயே போய்விடும்,
ஆனால் அவள் லண்டன் செல்லவில்லையென்றால், உடனே ஆனந்தி ஆன்ட்டி மூலம் அதை தெரிந்துக் கொள்வார்கள். எப்படியும் அவளை தேட முயற்சிப்பார்கள்.. பேசாமல் லண்டன் சென்று அங்கே செத்துவிடலாமா? என்றால், அங்கேயும் ஆனந்தி ஆன்ட்டி இருக்கிறார்களே! ஆனால் அதற்காக அவள் தற்கொலை திட்டத்தை கைவிடவும் தயாராக இல்லை.. சுடரொளி என்ற ஒருத்தி இருந்தால் என்ன? இல்லை இல்லாமல் போனால் என்ன? என்ற சுய இரக்கத்தில் தவித்துக் கொண்டிருந்தாள்..
ஒருப்பக்கம் இவள் மரணத்தால் யாருக்கும் மன வேதனையை தரக் கூடாதென்று நினைத்தாலும், இன்னொரு பக்கமோ, இவள் இறந்த செய்தி அறிந்தாலாவது, இவளின் அப்பா இவளை கட்டிக் கொண்டு அழுவாரே! இறந்த பிறகாவது அந்த கொடுப்பினை கிடைக்கட்டுமே!
மகிழ்வேந்தனும் தான் காதலிக்கவில்லை என்று சொன்னதால் தானே இவள் இந்த முடிவை தேடிக் கொண்டாள், என்ற வருத்தத்தில் பேருக்காகவாவது உன்னை காதலித்தேன் சுடர் என்று இவளது உயிரற்ற சடலத்தை பார்த்து சொல்லமாட்டானா! சத்தமாக வாய்விட்டு இல்லையென்றாலும், மனதிற்குள்ளாவது சொல்லி தன் வருத்தத்தை காண்பிக்கமாட்டானா? என்று மனம் எதிர்பார்த்தது.. அதற்காகவே அவள் மரணிக்க வேண்டும் என்று நினைத்தாள். அதனால் முதலில் தான் நினைத்தப்படியே, செக்கிங்கிற்கு உள்ளே செல்வதற்கு முன் விஷத்தை குடிக்க வேண்டுமென்று மனதில் உறுதி எடுத்துக் கொண்டாள்.