“தம்பி.. எதுக்கு அந்த பொண்ணுக்கிட்ட பிரச்சனை பண்ற.. அந்த பொண்ணு தான் உன் கூட வர மாட்டேன்னு சொல்லுதே, பேசாம விட்டுட்டு போப்பா..” என்று ஒருவர் சொல்ல,
“எந்த இடத்திலேயும் பொண்ணுங்களுக்கு பாதுகாப்பே இல்லை.. ஒருத்தன் ரயில்வே ஸ்டேஷன் தேடி போய் பொண்ணை வெட்டினான். இப்போ ஏர்ப்போர்ட்டையும் விட்டு வைக்கறதில்ல” என்று இன்னொருவர் பேசினார்.
“பார்க்க டீசண்டா தெரியுறாங்க.. ஆனா நடந்துக்கிறதெல்லாம் எப்படி இருக்கு பாருங்க..” இன்னொருத்தர் பேச, சில பேர் அதையெல்லாம் தங்கள் அலைபேசி கேமராவில் பதிவு செய்தப்படி இருந்தனர்.
நிலைமை வேறு மாதிரி சென்றுவிட்டதை உணர்ந்த அறிவழகனோ மகியின் அருகே சென்று, “ஹே என்னடா பண்ற.. கும்பல் கூடிடுச்சு, பேசாம விட்டிட்டு வாடா.. அவ லண்டனுக்கு தானடா போறா.. சாகவா போறா, அவ இவ்வளவு நாள் இருந்த இடம் தானடா அது.. அப்புறம் என்ன?” என்று சொல்லிக் கொண்டிருந்தான். சுடரொளியோ இன்னும் அவன் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள போராடிக் கொண்டிருந்தாள்.
மகியும் அங்கிருந்த சூழ்நிலையை உணர்ந்து இறுக்கி பிடித்திருந்த அவள் கைகளை விடுவித்தான். அவன் பிடித்த இடம் வலிக்கவே, கைகளை மென்மையாக தடவிக் கொண்டவள், தன் உடைமைகளை எடுத்துக் கொண்டு அங்கிருந்து செல்ல முயற்சிக்க, “நீ போகக் கூடாது சுடர்..” என்று திரும்ப அதையே கூறினான்.
“நான் போகத்தான் போறேன், லண்டனுக்கு போறேனோ, இல்லை சாகப் போறேனோ, அதைப்பத்தி நீ கவலைப்பட வேண்டாம் என்று சொல்லிவிட்டு இரண்டு அடி நடந்திருப்பாள். அவனோ திரும்ப அவள் கைகளை பிடித்து தன் அருகே இழுத்து, தன் பான்ட் பாக்கெட்டில் வைத்திருந்த, மஞ்சள் கிழங்கோடு இருந்த அந்த மஞ்சள் கயிற்றை அவள் கழுத்தில் கட்டினான்.
அவன் திரும்ப பிடித்து இழுப்பான் என எதிர்பார்க்காமல் நிலை தடுமாறியவள், ஒரு நிலைக்கு வரவே சில நொடிகள் பிடித்தது.. பின்பு தான் அவன் செய்த காரியத்தை அவள் உணர ஆரம்பித்தாள். ஆனால் அதற்குள்ளேயே அவன் முடிச்சுப் போட ஆரம்பித்திருந்தான். கூடியிருந்தவர்களோ திடிரென அவன் செயலில் வியந்து போய் பார்க்க, அந்த காட்சியை அவர்கள் இன்னும் தீவிரமாக படம் பிடித்திருந்தனர். அறிவழகனோ மகியின் செயலை அதிர்ந்து போய் பார்த்திருந்தான்.
மூன்று முடிச்சு போட்டதும் அவன் அவளை விட்டு கொஞ்சம் விலகி நிற்க, அவளோ அவன் இப்படி செய்வான் என்று கனவிலும் நினைத்து பார்க்கததால், அந்த நொடி அவன் செயலில் கோபம் கொண்டவள் பளாரென்று அவன் கன்னத்தில் ஒரு அறை விட்டாள். அங்கிருந்த அனைவரும் அதிர்ந்து போய் பார்த்தனர்.
“ஏண்டா இப்படி செஞ்ச? என்னோட ஃபீலிங்ஸோட விளையாட்றியா? எதுக்குடா என் கழுத்துல இந்த மஞ்ச கயிறை கட்ன?” அவன் சட்டையை பிடித்துக் கொண்டு கோபத்தோடு கேட்டுக் கொண்டிருந்தாள்.
“நீ லண்டனுக்கு போகக் கூடாது.. உன்னை தடுக்க எனக்கு வேற வழி தெரியல.. அதான்..” தலை கவிழ்ந்து பதில் கூறினான்.
“நீ தாலிக் கட்ட்டிடா நான் லண்டனுக்கு போக மாட்டேனா? இது கல்யாணமே கிடையாது.. கழுத்துல ஒரு மஞ்சக் கயிறு கட்டிட்டா அது கல்யாணம் ஆயிடாது.. இந்த கழட்டி குப்பைல தூக்கி போட்டுட்டு போயிட்டே இருப்பேன்..”
“பரவாயில்ல கழட்டப் போறியா.. கழட்டிட்டு போ.. நீ போறதுக்கு முன்ன நீ கேட்டத நான் கொடுத்துட்டேன்னு மனநிறைவாவது இருக்கட்டும்.. உன்னை தடுக்க முடியலன்னும் போது, இதை நினைச்சி திருப்தி பட்டுக்கிறேன்..”
“நீ இப்படியெல்லாம் பேசினா, இதை நான் கழட்ட மாட்டேன்னு நினைக்கிறியா? இதை கழட்டி போட ஒரு நொடி போதும்..” என்று அந்த கயிறில் கைவக்கப் போக, அவளுக்கே அந்த கை இயங்க மறுத்தது. அதற்குள் அங்கே அருகில் நின்றிருந்த ஒரு பெண்மணியோ, “அய்யோ தாலியை இப்படியெல்லாம் அவமதிக்கக் கூடாதும்மா.. தம்பி மேல என்ன கோபம் இருந்தாலும், அதை இதுல காட்டதம்மா..” என்றார்.
“அவங்க சொல்றத கேர் பண்ணாத சுடர்.. போ, இதை கழட்டி போட்றதா இருந்தா போட்டுட்டு போ.. இனி நான் உன்னை தடுக்க மாட்டேன்..” என்று ஒரு உறுதியோடு கூறினான்.
அவன் காதலை வாய் திறந்து சொல்லமாட்டானா? என்று எதிர்பார்த்து, அது இல்லை என்றதும் உயிரை விடவே துணிந்தவள், இப்போதும் அவன் காதலை சொல்லியிருந்தால், அவனோடு சென்றிருப்பாள். ஆனால் அதை விட்டு அவன் இப்படி செய்ததால், இதுவரை கோபத்துடன் இருந்தவர்களின் வெறுப்பை சம்பாதிக்கும் சூழல் வருமோ! என்று மனதிற்குள் பயந்தாலும், அவன் கையால் தன் கழுத்தில் ஏறிய தாலியை கழட்ட அவளுக்கு மனம் வரவில்லை.. அதை அவனிடம் வெளிப்படையாக காட்டவும் அவளால் முடியவில்லை.
அவன் கழுத்தை நெறிப்பது போல் கையை அவன் கழுத்து அருகே கொண்டு சென்றவள், “போடா..” என்று சொல்லிவிட்டு, தன் உடமைகளை எடுத்துக் கொண்டு விமான நிலையத்தை விட்டு வெளியேறினாள்.
அவள் வெளியில் தான் செல்கிறாள் என்று தெரிந்ததுமே அங்கே கூடியிருந்தவர்களில் சில இளைஞர்கள் மகியின் அருகில் வந்து, “செம பாஸ்.. கலக்கிட்டீங்க.. வாழ்த்துக்கள்..” என்று கைகுலுக்கினர். சில பெரியவர்களோ, “பொண்ணு கோபமா போகுது.. சீக்கிரம் சமாதானப்படுத்தி, அப்பா, அம்மா சம்மதத்தோட கல்யாணம் செஞ்சுக்கோங்க..” என்றனர், சிலரோ “காலம் கெட்டுப் போச்சு, இதுங்களையெல்லாம் என்னன்னு சொல்றது..” என்று புலம்பியப்படி சென்றனர்.