தொடர்கதை - தித்திக்கும் புது காதலே!!! - 05 - கார்த்திகா கார்த்திகேயன்
"இங்க கிளைமேட் செமையா இருக்கு. உனக்கு பிடிச்சிருக்கா?", என்று பேச்சை ஆரம்பித்தான் சூர்யா.
அவனை பார்க்காமல், எங்கோ பார்த்த படி நின்றிருந்தவள் "ம்ம்", என்றாள்.
அப்போது தான் அவளை திரும்பி பார்த்த சூர்யா "கலை", என்று ஆழ்ந்த குரலில் அழைத்தான்.
"ஹ்ம்ம்", என்ற படி அவன் முகம் பார்த்தாள் கலைமதி.
"என்ன அமைதியா இருக்க?"
"ஒன்னும் இல்லையே"
"எதுனாலும் மனசு விட்டு பேசலாம்ல? இனி கடைசி வரைக்கும் நாம ஒண்ணா தான் இருக்க போறோம். என்கிட்டே தயங்கலாமா?"
"நானா தயங்குறேன்? வாய தொறந்தா வார்த்தை வர மாட்டிக்கு. என்ன செய்ய?", என்று நினைத்து கொண்டு அமைதியாய் நின்றாள்.
அவள் அமைதியை கண்டு ஒரு பெருமூச்சு வந்தது சூர்யாவுக்கு.
"கண்டிப்பா அவளா வாயை திறக்க மாட்டா", என்று நினைத்து கொண்டு "காலைல கேட்டதுக்கு நீ பதிலே சொல்லலை?", என்று ஆரம்பித்தான்.
அந்த கேள்வியில் தடுமாறினாள் கலைமதி.
பகல் முழுவதும் காவ்யா சொன்ன படியே பேச மனப்பாடம் செய்திருந்தவள், அவன் கேக்க வில்லை என்றவுடன் அதை பத்தி யோசிக்காமல் விட்டுவிட்டாள். இப்ப மறுபடியும் அவன் கேட்டால் அவளும் தான் என்ன செய்வாள்?
"என்ன கலை அமைதியா இருக்க? காலைல என்னை பிடிக்குமான்னு கேட்டேன் தான? இப்பவும் அமைதியா இருக்க? உனக்கு என்னை பிடிக்கலையா?"
"ஐயோ அத்தான் அப்படி எல்லாம் இல்லை", என்று அவசரமாக பதில் சொன்னாள் கலை.
"அப்ப பிடிச்சிருக்கா?", என்று உல்லாசமாக கேட்டான் சூர்யா.
அமைதியாக தலை குனிந்து கொண்டாள்.
"அப்ப உனக்கு பிடிக்கலைல என்னை?"
"ஐயோ அத்தான் நிஜமாவே பிடிச்சிருக்கு போதுமா?"
"ஹா ஹா சரி ஏன் பிடிக்கும்?"
"இதுக்கு என்ன பதில் சொல்ல?", என்று தெரியாமல் முழித்தாள்.
அவன் பதிலுக்காக காத்திருப்பதை பார்த்து அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
"என்ன கலை?"
"இல்லை அது வந்து..."
"என்ன மா? எதுனாலும் சொல்லு"
"நீங்க அந்த பொண்ணை விரும்புனீங்களா?"
"எந்த பொண்ணு?"
"அதான், ஓடி போச்சுல்ல அந்த பொண்ணு"
அவன் முகத்தில் இறுக்கம் வந்தது. அன்றைய அவமானம் இப்போது வந்தது போல் துடித்து கண்களை இறுக மூடினான்.
அதை பார்த்தவளுக்கு தன் தவறு உரைத்தது.
"சந்தோசமா இருந்தவனை மூட் அவுட் பண்ணிட்டேன்", என்று நினைத்து கொண்டு "சாரி அத்தான். கஷ்ட பட வச்சிட்டேன்னா? உங்களை காய படுத்தணும்னு கேக்கலை. உங்க மனசுல அந்த பொண்ணு மேல விருப்பம் இருந்துச்சுன்னா, மறக்க கஷ்ட படுவீங்களேன்னு தான் கேட்டேன்", என்றாள்.
கண்களை திறந்து அவளை பார்த்தவன் "ஆமா அவளை விரும்புனேன்னு சொன்னா என்ன செய்வ?", என்று கேட்டான்.
இப்போது அவள் முகம் கூம்பி போனது.
அதை பார்த்தவனுக்கு வேதனையின் சுவடுகள் மறைந்து போனது. மனதில் உல்லாசம் மறுபடியும் வந்து ஒட்டி கொண்டது.
"கலை"
"ம்ம்"
"அம்மா, கல்யாணம் பண்ணதுக்கு சம்மதமான்னு கேட்டாங்க. நான் சரின்னு சொன்னேன். மத்த படி வேற எதுவுமே யோசிக்கலை. கல்யாணம் அப்படிங்குற எந்த உற்சாகமும் என் மனசுல இல்லை. ஏன்னா, அந்த பொண்ணு வேற ஒரு பையனை விரும்புவது எனக்கு முன்னாடியே தெரியும்"
"அத்தான்?"
"ஆமா, ஒரு நாள் அவளையும், அந்த பையனையும் சேர்த்து பார்த்தேன். ஆனா சந்தேக படலை. அவளுக்கு அண்ணன் கிடையாது. ஒரு வேளை நண்பனா கூட இருக்கலாம்ன்னு நினைச்சேன். அதை அப்படியே விட்டுட்டேன். மறுபடியும் ஒரு நாள் பாத்தேன். அப்ப அவங்க ரெண்டு பேரும் கை கோர்த்து நெருக்கமா நடந்து போனாங்க. அப்ப மனசுக்குள்ள ஏதோ வித்தியாசமா பட்டது. அப்ப கூட அவ இன்னொரு பையன் கூட போறா அப்படினு பொறாமை எனக்கு வரவே இல்லை. கல்யாணம்ன்னு சொன்னப்பறம் இவ ஏன் அப்படி பண்றா அப்படிங்குற வெறுப்பு தான் வந்தது. நேரடியா கேட்கலாம்னு நினைச்சு, அம்மா கிட்ட போன் நம்பர் வாங்கி கால் பண்ணேன்"