முதுகு காட்டி படுத்த சூர்யாவையே பார்த்த கலை அவன் எப்போது திரும்புவான் என்று காத்திருந்தாள். அவனோ அவள் பக்கம் திரும்பினாலே வம்பு என்று நினைத்து கொண்டு படுத்திருந்தான்.
அவன் அவள் புறம் திரும்பவே இல்லை. அதுக்கு மேல் பொறுக்க முடியாமல் "அத்தான் ", என்று அழைத்தாள். அவள் புறம் திரும்பாமலே "ம்ம்", என்று சத்தம் கொடுத்தான் சூர்யா.
"உங்க முகத்தை எனக்கு காட்டிட்டே தூங்குங்களேன்", என்று கலக்கமாக ஒலித்தது கலையின் குரல். அந்த குரலில் இருந்த கலக்கத்தில் தன் உணர்வுகளை அனைத்தும் மறந்து விட்டு படக்கென்று திரும்பினான் சூர்யா.
"என்ன ஆச்சு டா?", என்று கேட்டு கொண்டே அவள் தலையை வருடி விட்டான்.
"இல்லை என்னோட அம்மா முகம் எனக்கு தெரியாதா. இத்தனை நாள் உங்க முகத்தை பாத்துட்டு தூங்குவேன். கண்ணு முழிச்சா கூட உங்க முகம் தெரியும். உங்க பக்கத்துல படுத்துட்டு உங்க முகத்தை பாத்துட்டே இருக்குறது எனக்கு எங்க அம்மா கூட இருக்குற மாதிரி இருக்கு. அதான் அத்தான்", என்று அவள் கூறிய அடுத்த நொடி அவளை இழுத்து அணைத்து தன் மார்பின் மீது போட்டு கொண்டான் சூர்யா.
அவனுடன் ஒண்டி கொண்டவளுக்கு எண்ணற்ற ஆறுதல் கிடைத்தது. அவள் கலக்கத்தை உணர்ந்த அவனும் அவளை அப்படியே தட்டி கொடுத்த படியே தூங்க வைத்தான். அவள் மீது கொண்டிருந்த மோகம் அவனை விட்டு விலகி சென்றிருந்தது. அம்மா என்ற வார்த்தையில் அவனை தாயாக்கி அவன் மனைவி அவனின் சேயானாள்.
எல்லை இல்லா காதல் மட்டுமே கொண்டு தன் மனைவியை அணைத்த படியே உறங்க ஆரம்பித்தான் சூர்யா.
காலையில் கண் விழிக்கும் போதும் அவள் அவன் நெஞ்சில் தான் முகம் புதைத்திருந்தாள். தான் எழுந்து சென்று விட்டால் அவள் கண் விழிக்கும் போது என்னை பாக்க முடியாமல் தவிப்பாள் என்று நினைத்து அவனும் அவளையே பார்த்த படி படுத்திருந்தான்.
சிறிது நேரத்திலே கண் விழித்த கலைமதியும் அவனை பார்த்து அழகாய் புன்னகைத்தாள். அவளை பார்த்து அவனும் சிரித்து கொண்டே "என்னோட மகாராணிக்கு விடிஞ்சிருச்சு போல?", என்று கேட்டான்.
"முன்னாடியே முழிச்சிடீங்களா அத்தான்"
"ம்ம்"
"அப்புறம் ஏன் எந்திக்கல?"
"கண் முழிச்ச அப்புறம் நீ என்னை தேட கூடாதுல்ல அதான்", என்று சிரித்து விட்டே எழுந்து சென்று விட்டான்.
அவன் பதிலில் அப்படியே உறைந்து கிடந்தாள் கலைமதி. பல லட்சம் செலவு செய்து இந்த உலகத்திலே அழகான இடத்துக்கு அவளை கூட்டி சென்று உன்னை காதலிக்கிறேன் என்று அவன் கூறி இருந்தால் கூட அவளுக்கு சந்தோசம் கிடைத்திருக்காது. ஆனால் அதை விட தெளிவாக காதலை சொல்லி சென்ற அவன் போன திசையையே பார்த்து கொண்டு படுத்திருந்தாள்.
புரிந்து கொள்ளும் உறவுகள் கிடைத்தால் வரம் என்று அவள் அறிந்ததே. ஆனால் அந்த சொந்தத்தை அவன் மூலமாக தான் அனுபவிக்கிறாள் மதி.
கணவன் என்று அல்லாமல் காதலனாகவே அவள் மனதில் பச்சை குத்தியது போல பதிந்து போனான் சூர்யா.
அவனை பற்றியே நினைத்து கொண்டு மூடி இருந்த போர்வையை எடுத்து மடித்து வைத்தாள். அவளுடைய உதடுகள் புன்னகையை தாங்கி இருந்தது.
"என்ன இன்னைக்கு மேடம் ஒரே சிரிப்பழகியா இருக்காங்க?", என்று கேட்டு கொண்டே குளித்து முடித்து துண்டுடன் வந்தான் சூர்யா.
அவனை திரும்பி பார்த்தவள், அவனுடைய தோற்றத்தில் வெட்கம் கொண்டு தலை குனிந்து கொண்டாள். அவள் வெட்கத்தை ரசித்தவன் "என்ன டி பதில் சொல்ல மாட்டியா?", என்று கேட்டு வம்பிழுத்தான்.
"பாத் ரூம்குள்ளேயே டிரெஸ் மாத்திட்டு வரலாம்ல அத்தான்?", என்று ஒரு வழியாக தயக்கத்தை உதறி கூறி விட்டாள்.
வந்த சிரிப்பை அடக்கி கொண்டு "எதுக்காம்?", என்று கேட்டான்.
"என்ன எதுக்கு? அடுத்தவங்க முன்னடியா டிரெஸ் மாத்துவாங்க? நான்லாம் உள்ள வச்சு தான மாத்துறேன்?", என்று அவள் கேள்வி கேட்டு முடிக்கும் முன் அவளை நெருங்கி வந்து விட்டான் சூர்யா.
தோற்றதை பார்த்தே தடுமாறி நின்றவள் அருகில் வந்ததும் திகைத்து விட்டாள். ஆங்காங்கே நீர்துளிகளுடன் நின்றிருந்தான் சூர்யா.
அங்கிருந்து நகர பார்த்தவளின் கையை பிடித்தான். "அத்தான் கையை விடுங்க", என்று பலவீனமாக ஒலித்தது அவளுடைய குரல்.
"நீ கேட்ட கேள்விக்கு பதில் வேண்டாமா?"
"பதில் வேண்டாம். இனி உள்ள வச்சு மாத்திட்டு வாங்க"
"எதுக்கு?"