முதலில் தன் அன்னையிடம் பேச நினைத்து அவருக்கு அலைபேசியில் அழைப்பு விடுத்தான். அவரும் அவனது அழைப்பை எதிர்பார்த்திருந்ததால் உடனே அவனது அழைப்பை ஏற்றார். கோவிலிலிருந்து வீட்டுக்கு வந்ததுமே மகனிடம் நடந்ததை கூற தான் நினைத்தார். ஆனால் சுடர் மட்டும் தனியாக கோவிலுக்கு வந்ததிலேயே அவன் வேலைக்கு சென்றிருப்பான் என நினைத்து, அவனிடம் இப்போதே சொல்லி வருத்தப்பட வைக்க வேண்டாம்.. சுடரே அவனிடம நடந்ததை சொல்லுவாள் என்று விட்டுவிட்டார்.
இருந்தும் அப்போதே எதுவும் சொல்லி அவனை பரிதவிக்க விடாமல், வீட்டுக்கு வந்ததும் நடந்ததை சொல்லியதில் சுடரை நினைத்து ஒருப்பக்கம் அவருக்கு மகிழ்ச்சியாக இருந்தது.
“அம்மா என்னம்மா இது? சுடர் ஆசையா உங்கக்கிட்டல்லாம் பேச வந்திருக்கா.. ஆனா அவக்கிட்ட போய்.. ஏன்ம்மா..?”
“உனக்கு பாட்டியையும் அத்தையையும் பத்தி தெரியாதா? அந்த நேரம் அவங்களை அடக்க தான் சுடர்க்கிட்ட அப்படி பேசினேன் டா..”
“எனக்கு அது தெரியும் ம்மா.. ஆனா சுடர் சின்னதா அவளை ஹர்ட் பண்ணா கூட அதை அவளால் தாங்கிக்க முடியாது.. அது தெரிஞ்சும் நீங்க இப்படி பேசிட்டீங்களே..” என்று ஆதங்கப்பட்டவனிடம் அவர் நிறைய பேசி சமாதானப்படுத்திவிட்டு தான் அலைபேசியை வைத்தார்.
மகி தன் அன்னையிடம் பேசிக் கொண்டிருந்த அதே நேரம், சுடர் தன்னுடைய டைரியை எடுத்து தன் தந்தைக்கு கடிதம் எழுதினாள். இங்கு வந்து தன் தந்தையை பார்த்ததிலிருந்து அவள் இப்படி கடிதம் எழுதுவதில்லை. ஆனால் இன்று ஏனோ தோன்றியது.
அப்பா நீங்க ஏன்ப்பா என்கிட்ட பேசல.. நான் உங்களை பார்க்க தானே இங்க வந்தேன்.. நீங்க மட்டும் என்கிட்ட பேசியிருந்தா நான் ரெண்டே நாளில் திரும்ப போயிருப்பேன். ஆனா நீங்க பேசணும்னு எதிர்பார்த்து தான் இங்கேயே இருந்து அதன்பிறகு மகிழ் மேல் காதல் வந்து இப்போ என்னல்லாம் நடந்து போச்சு.. இப்போ உங்களுக்கும் நான் வேதனையும் அவமானத்தையும் தான் கொடுத்திருக்கேன் ப்பா.. நான் இங்கே வந்திருக்கவே கூடாது.. அப்படி மட்டும் இருந்தா எல்லாமே சரியாக நடந்திருக்கும் என்று எழுதி முடித்தவள் டைரியை மூடி வைத்துவிட்டு அப்படியே அதில் படுத்து கண்ணீர் வடித்தாள்.
சுடர் பசியோடு இருப்பாள் என்பதை உணர்ந்து எளிதாக சமையலை முடித்தவன், உள்ளே வந்து பார்த்தால் சுடர் கட்டிலில் உட்கார்ந்தப்படியே முழங்காலில் முகம் புதைத்திருந்தவள் அப்படியே உறங்கிவிட்டிருந்தாள்.
மதியமே சாப்பிட்டாளோ.. இல்லையோ.. இப்போதும் சாப்பிடாமல் உறங்கிவிட்டாள் என்னாவது.. என்ன பிரச்சனை என்றாலும் இரவு மட்டும் சாப்பிடாமல் படுக்க கூடாது என்று பூங்கொடி எப்போதும் சொல்வார். தன்னிடமோ தன் சகோதரி மலர்க்கொடி மட்டும் இல்லாமல் அனைவரையுமே இரவு சாப்பிடாமல் படுக்க அவர் அனுமதிக்கவே மாட்டார். ஆனால் எத்தனையோ நாள் இப்படி சாப்பிடாமல் படுப்பது சுடருக்கு பழக்கம் தான். அது அவனுக்கும் தெரியும்.. ஆனாலும் அப்படியே விட்டுவிட மனமில்லாமல் ஒரு தட்டில் கொஞ்சம் சாதம் போட்டு குழம்பு ஊற்றி கொண்டு வந்து கட்டிலின் அருகில் நாற்காலியை இழுத்துப் போட்டு அதில் தட்டை வைத்தவன் அவள் அருகில் உட்கார்ந்தவன் அவளை எழுப்பினான்.
ஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள்
அரை தூக்கத்தில் சிணுங்கியவள் “அப்பா..” என்று அழைத்தப்படியே அவன் மீது சாய்ந்துக் கொண்டாள். கையில் டைரியை பார்த்தான்.. அதை எடுத்து கட்டிலின் மீது வைத்தவன், அப்படியே அவளுக்கு சாப்பாடு ஊட்டிவிட்டான். சிணுங்கியப்படியே வாயை திறந்து உணவை வாங்கியவள் அமைதியாக சாப்பிட்டாள். பின் “அப்பா போதும்..” என்று தூக்கத்தில் உளறினாள். அவள் அப்பா ஊட்டுவதாக நினைத்துக் கொண்டாளா? இருந்தாலும் அதில் புன்னகைத்துக் கொண்டவன், “இன்னும் கொஞ்சம் சாப்பிடு..” என்று வற்புறுத்தி ஊட்டி தண்ணீரை புகட்டியவன், அவளை சரியாக கட்டிலில் படுக்க வைத்தான்.
அவளது டைரியை எடுத்து வைக்கப் போகும் போது நடுவில் பேனா இருந்ததால் டைரி திறந்துக் கொள்ள, அதில் எழுதியிருந்ததை வாசித்தான். எதனால் அவள் அப்பாவை அழைத்தாள் என்பது புரிந்து அவள் தலையை கோதியவன், அவனும் சாப்பிட்டுவிட்டு, வரவேற்பறையில் படுப்பதற்காக தன் படுக்கையை எடுக்க உள்ளே வந்தான். அப்போது சுடர் “அப்பா.. அப்பா..” என்று தூக்கத்தில் முனகி கொண்டிருந்தாள்.
“சுடர்.. அப்பா உன் கூட தான் இருக்காரு தூங்கு” என்று அவள் அருகில் உட்கார, அவளோ அவனை நெருங்கியப்படி வந்து படுத்துக் கொண்டாள்.. இந்த நேரம் அவளை தனியாக விட மனமில்லாமல் அவளது அருகிலேயே அவளை அணைத்தப்படி படுத்துக் கொண்டான். அவளும் அவனது நெஞ்சில் முகம் புதைத்துக் கொண்டு ஆழ்ந்த உறக்கத்திற்குச் சென்றாள்.
ஆனால் அவனுக்கு தான் அத்தனை சீக்கிரத்தில் உறக்கம் வரவில்லை. அவன் சிந்தனை முழுதும் அவள் தான் ஆக்கிரமித்திருந்தாள். அவள் முதன்முதலாக இங்கு வருகிறாள் என்று தெரிந்த போது, அவள் வரக் கூடாது என்று முதல் போர்க் கொடியை தூக்கியவனே அவன் தான். வந்தவளை ஓட ஓட விரட்ட வேண்டும் என்று நினைத்தவனும் அவன் தான். அப்படிப்பட்டவள் இன்று அவன் மனதிற்கு நெருக்கமானவளாக மாறியிருப்பதை நினைத்து வியப்பாக இருந்தது. அதேபோல் இதோ நெஞ்சில் முகம் புதைத்து உறங்குபவள், தன் உறவாலே தன்னோடு கலப்பது எப்போது? மனதில் கேள்விக் கேட்டுக் கொண்டவனது மனம் அவளுடன் இருந்த பழைய நினைவுகளை அசைப் போட்டது.
உறவு வளரும்...
Go to Nenchodu kalanthidu uravale story main page
{kunena_discuss:1155}