33. என் சிப்பிக்குள் நீ முத்து - தமிழ் தென்றல்
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்
அந்த செல்வம் என்னிடத்தில் எப்போதுமே குறைவுதான். அதனால் ஏற்பட்ட கால தாமதத்திற்கு மன்னிக்கவும் மக்களே!
சிறு வயதிலிருந்து கேட்டிருந்த நீதிக்கதைகள். எல்லா சமயத்திலும் நெறித்தவராது நல்வழி நடக்க வேண்டுமென அப்பா சொல்லியிருந்த போதனைகளென, எப்போதும் நல்லதை மட்டுமே யோசிப்பதும் செய்வதுமாக இருக்க பழகியிருந்தாள் சரயூ. அவளுடை அன்பான குடும்பத்தின் பாசமும் அது கொடுத்த தைரியமும் சேர்ந்துகொள்ள கண்ணெதிரே நடக்கும் தவறுகளை தட்டிக் கேட்க வைத்திருந்தது. நேர்மைக்கே உரிய துணிச்சல், பின்விளைவுகளை யோசிக்காது அவளை செயல்படுத்தியது.
உடன் பிறந்த குறும்போடு ஓயாது பேசி எல்லோரையும் கவர்ந்துவிடுபவளின் ஆனந்த வாழ்க்கையில் முதல் இடறாக அமைந்தது, கிரணுடைய இவள் மீதான விருப்பமும், மறுத்தவளிடத்தில் அவன் நடந்து கொண்ட முறையும். அதையும் ஜெய்யின் உதவியோடு பெரிய பாதிப்பேதுமின்றி கடந்துவிட்ட சரயூவிற்கு கூர்கின் நிகழ்வு வலியையும் வேதனையையும் அறிமுகபடுத்தியது.
கிரணின் அத்துமீறலும், இரத்தம் வழிய அகோரமாய் காட்சியளித்த முகமும், சிறு வயதில் கேட்டிருந்த கதைகளின் அரக்கனை நினைவுபடுத்த.... அரக்கனிடமிருந்து தன்னையும் மக்களையும் காப்பாற்ற அவனை வதைப்பதும் வெற்றி வாகை சூடுவதும் தான் நியாயச் செயல் என்றிருந்த கதைகள் ஒரு புறமும், ஒரு உயிரைக் கொல்வது வெற்றியாகாது, அன்பால் அவ்வுயிரை வெல்வதே உண்மையான வெற்றியென்று ரவிகுமார் சொன்னது மறுபுறமென சற்று குழம்பினாலும் அப்பாவின் சொற்படி அந்த இக்கட்டான நிலையிலும் கிரணிடம் பேசினாள். அவன் மனதை மாற்றிட முயற்சியும் செய்தாள். அதையும் தாண்டி வெளிப்பட்ட அரக்கனை கண்டு வெகுண்டெழுந்த கோபம், தன்னை தற்காத்துக்கொள்ள அவனை தாக்க முடிவெடுத்து. மின்னலென திட்டமிட்டவள் அவன் கழுத்தை கீறிவிட்டு அங்கிருந்து ஓடினாள்.
அவனுடைய அரக்கத்தனமும் அதிலிருந்து தப்பிப்பதும் முக்கியமாக பட்ட சமயத்தில் அப்பா சொன்ன உண்மையான வெற்றியை மறந்துவிட்டாளோ? ஒரு உயிரைப் பறிக்கும் உரிமையை அவளுக்கு யார் கொடுத்தது? தன்னை போல அவனுக்குமொரு குடும்பம் இருக்குமே...மகனை இழந்த பெற்றோரின் நிலை என்னாகும்? கணநேரக் கோபம் கண்ணை மறைத்ததுதான் தன்னுடைய செயலுக்குக் காரணமாகிவிட்டதோ என்று மனம் குற்றவுணர்வில் தவித்தது.
ஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள்
அதே நேரத்தில், இன்னும் அருவருப்பை உணரவைத்த அவன் தொட்ட இடங்கள், கிரணுக்கு இத்தண்டனை நியாயமே. அரக்கனுக்கு கிடைக்க வேண்டிய முடிவுதான் என்று தோன்ற.... மற்றவரை துன்புறுத்துவது அரக்க குணம்! எனில் அவனைக் கொன்ற தன் செயல் எக்குணம்? அவனுக்கும் தனக்கும் பெரிய வித்தியாசமில்லையோ?!
தவறான செயல்கள் மோசமான பின்விளைவுகளை தருமே! என்றால் தன்னுடைய செயலுக்கான எதிர்வினை? யோசிக்க யோசிக்க மனம் திடுக்கிட்டது. இவள் செய்த கொலை உலகிற்கு தெரியும் போது என்னாகும்? இவளிருந்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு சட்டம் இவளுக்கு விடுதலை அளித்திடலாம். ஆனால் சொந்தங்களும் சமுதாயமும் இதை எப்படி பார்க்கும்? புறம்பேசுவோரும், இவளைப் பின்தொடரும் கேலிக் குரல்களும், சொந்தங்களின் முன்னிலையில் பெற்றோரின் தலைக்குனிவு என பல பல கேள்விகளும் எண்ணங்களும் மலையென மனதை அழுத்த பாரம் தாளாமல் சோர்ந்திருந்த வேளையில் தான் அந்த காரில் மோதி விழுந்தாள்.
மனிதர்களின் இன்னொரு முகத்தை எண்ணி பயந்திருந்தவள் வேதிக் மற்றும் யஷ்விதாவை கண்டு மிரண்டுவிட்டாள். இவர்களிடமிருந்து ஆரம்பித்து இன்னும் எத்தனையெத்தனை பேருக்கு நடந்ததை சொல்ல வேண்டியிருக்குமோ? கேட்பவர்களின் கண்களில் பரிதாபம், கருணை, அருவருப்பு, அகங்காரம், குற்றமென எதையெல்லாம் காணபாளோ? இதற்கிடையில் வேதிக்கை பார்த்ததும் அவளையுமறியாமல் உடலின் அனைத்து செல்களையும் அணைத்த பயம் வேறு. நடந்தவற்றை மாற்றியமைக்க வாய்ப்பிருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால் சாத்தியமில்லாத யோசனையும், தன்னை சுற்றியிருக்கும் சமுதாய பூதத்தையும் நினைக்கையில் அழுவதை தவிர்த்து வேறுவழியில்லையோ என்று அயர்ந்து போனாள் சரயூ.
இருந்தும் அவளைத் தேற்றிய யஷ்விதாவிடம், காவல் துறையில் தன்னை ஒப்படைக்கக் கேட்டாளே...அங்கு அந்த நொடியில்தான் ரவிகுமார் கற்பித்திருந்த நியாய தர்மங்கள் புத்துணர்வோடும் கர்வத்தோடும் தலைத்தூக்கி நின்றன. விதியின் பலனோ அல்லது வேதிக்கின் செயலோ பெண்மையைக் காத்துகொண்டாலும் சரயூவின் நிலையில் யாரிருந்தாலும் இந்த முடிவை எடுத்திருக்க முடியுமோ? தெரியாது! நேர்மைக்கு மட்டுமே இருக்கும் துணிச்சல் கம்பீரமாக எழுந்துநின்றது.
சரயூவின் வார்த்தகளை பெரிதாகக் கொள்ளாது யஷ்விதா அவளை ரிசாட்டிற்கு அழைத்து சென்றுவிட்டாள். பாதி இடிந்து விட்டிருந்த அவளின் நம்பிக்கையை மொத்தமாக அழித்தது வேதிக் காட்டிய காணொலி.