ஜெய் கொடுத்திருந்த போலி காணொலியின் மேல் விசாரணை தொடங்கிய போது, அதில் சொல்லப்பட்டிருந்த தேர்வைக் குறித்து சேகரித்த தகவலில் கால்க்குலேடர் பயன்படுத்தி மாணவன் மாட்டிகொண்டது தெரிய வந்தது. அந்த மாணவனை பற்றி மேலும் விசாரிக்கையில் தான் அவன் பெயர் வசந்த வர்மன் என்றும் அவனுடைய முன்னோர், அந்த காலத்து சிற்றரசர்களென்றும் அவன் மறைவுக்கு பிறகு எல்லா சொத்துக்களும் அவர்களிடம் வருடக் கணக்கில் தோட்ட வேலை பார்த்தவரின் மகனுக்கு சேர்ந்ததாகவும், அவன் தான் வேதிக் என்ற செய்தி ரூபினுக்கு அதிர்ச்சியை கொடுத்தது. அப்படியானால் கல்லூரி நாட்களில் நண்பனாக பழகியதெல்லாம் வேஷம். அவனுடைய நோக்கம் சரயூ! அவளை பழிவாங்குவதென்பது புரிந்தாலும்... கால்லூரி நாட்களுக்கு பிறகு அவன் தன்னையை மற்றவர்களிடமிருந்து மறைத்து வைத்திருப்பது மர்மமாக தோன்றியது.
ஒருமுறை ஜெய் சரயூவின் ஃபோனில் வேதிக்கின் மெஸ்ஸெஜ்கள் இருந்ததை பார்த்ததாக சொன்னது நினைவுக்கு வரவும், வேதிக் இன்னமும் ஓயவில்லை என்பது புரிந்தது. ஒரு வேளை கிரணுக்கும் அவனுக்கும் ஏதாவது தொடர்பிருக்குமோ? உடனடியாக கிரணைப் பற்றி விசாரிக்க தொடங்கினான். சில தினங்களில் அவனை கைது செய்யப்பட்டான். அவனிடம் விசாரித்ததிலிருந்து நடந்தவைகளை தெரிந்துகொண்டதை அடுத்து வேதிக்கை கண்காணித்ததில் அவன் வெளிநாடு செல்லவிருப்பதும் தெரியவந்தது.
இதுவரையிலும் ரூபினின் யூகப்படியே தான் ஓரளவுக்கு வேதிக்கின் நடவடிக்கைகள் இருந்திருக்க, இப்போதும் அவன் சரயூவை சந்திக்காது வெளிநாடு செல்லமாட்டான் என்று நம்பினான். சட்டென சிலவற்றை திட்டமிட்டவன் உடனடியாக ஜெய்யை அழைத்து எல்லாவற்றையும் சொன்னான். சரயூவும் வேதிக்கும் சந்திக்க வேண்டும். அதுதான் இன்னும் பதில் தெரியாத பல கேள்விகளுக்கு விடையளிக்குமென்று நிறுத்தி கொண்டவனின் மனதில் நண்பனின் காதல் ஜெயிக்க வேண்டுமெனில் சரயூவிற்கு உண்மைகள் தெரிய வேண்டுமென்ற நினைப்புமிருந்தது. இதற்கு மறுத்த ஜெய்யிடம் ஏதேதோ பேசி சம்மதம் வாங்கிவிட்டிருந்தான்.
சரயூ வீட்டிலிருந்து கிளம்பியதிலிருந்து ரூபினும் ஜெய்யும் அவளை பின்தொடர்ந்து வந்திருந்தனர். அரண்மனைக்குச் செல்லும் வழியில் வேதிக்கின் கார் செல்லவும் காவல்படையினரை அவனுக்கு முன்பாக அங்கு குவித்திருந்தான் ரூபின். எல்லாம் அவன் நினைத்தது போல் தான் நடந்தது. ஆனால் சரயூ மயங்கியதும்,
“சோர்வா தானே இருக்கனும்... அப்படிதானே இருக்கு? கையைக் காலை அசைக்க முடியாதே... ஹூம்..அப்படிதா இருக்கும்... ஏன்னா நீ குடிச்ச காஃபி அப்படி! ஆனா உன்னால பேச முடியும். கடைசியா ஏதாவது சொல்ல ஆசைப்படுறியா?”
வேதிக்கின் இவ்வார்த்தைகளும் அவன் சற்றும் எதிர்பாராக் கோணத்தில் எல்லாம் நகர்ந்து கொண்டிருப்பதை புரிய வைத்தது. சரயூவிற்கு கொடுத்தது விஷமாக இருக்குமோ என்ற சந்தேகத்தோடு அவசரமாக சமையலறையை ஆராய ஏதோ ஒரு சிறு பாட்டில் கிடைத்தது. அதிலிருந்த ‘வஜ்ரா ஆயுர்வேதிக்’ என்ற பெயரைத் தவிர வேறேதும் இருக்கவில்லை. அப்பாட்டிலில் இருந்தது என்னென்றும் தெரியவில்லை. அதைதான் சரயூவிற்கு கொடுத்தானா என்றும் தெரியவில்லை. இருப்பினும் அதை கையோடு எடுத்துகொண்டு ஓடிவந்தவன் கண்டது, இன்னமும் சரயூவை ஆராய்ந்தபடி அமர்ந்திருந்த ஜெய்யை தான்.
“சரயூவை தூக்கு சஞ்சய். அவள் மயங்கிட்டா பாரு, ஹாஸ்பிடல் போகனும். எழுந்திரு சஞ்சய்!” என்று இவன் கத்தியபோது தான் சுயநினைவுக்கு வந்தான் ஜெய். சட்டென மனைவியைக் கைகளில் ஏந்தியவன் காரை நோக்கி விரைந்தான்.
இன்னமும் வளர்ச்சியடைந்திடாத அந்த பகுதியில் பெயருக்கும் ஒரு மருத்துவமனையைக் காணமுடியவில்லை. சரயூவிற்கு ஒன்றென்றால் துடித்து போகும் நண்பன், இன்றோ, அசைய மறந்து வெறித்துக் கொண்டிருக்கும் கண்களும், உணர்ச்சிகளை துடைத்திருந்த முகமுமாக உட்கார்ந்திருப்பதை பார்க்க சகிக்கவில்லை. சரயூவிற்கு என்னாவாகி விடுமோ என்ற பயம் ஒருபுறமெனில் ஜெய்யின் இத்தோற்றம் மறுபுறமென ரூபின் தத்தளிக்க, மருத்துவமனையை கண்டுபிடிக்கவும் முடியவில்லை. சுற்றும் முற்றும் ஆராய்ந்தவனின் கண்களில் விழுந்தது, ‘வஜ்ரா ஆயுர்வேதிக்’. அது ஒரு இயற்கை வழி வைத்திய மையம்.
காரை நிறுத்திவிட்டு, அந்த பாட்டிலை காட்டி விசாரிக்கையில் வேதிக்கின் குரூர எண்ணம் புரிந்தது. அந்த ஆயுர்வேதிக் செண்டரிலேயே சரயூவை அனுமதித்தனர்.
“உனக்கு கொஞ்சமாவது அறிவிருக்கா? ஏன்டா இப்படி செய்த? உன்னோட போலீஸ்கார புத்திய காட்டுற விஷயமாடா இது? சஞ்சயைப் பாரு...இடிஞ்சு போயிட்டா!” என்று பொரிந்தவள் அழவும்...
முதலே குழப்பத்திலிருந்தவனுக்கு மனைவியின் கண்ணீர், நெஞ்சின் நெருடலுக்கு தூபமிட, “சௌமி... நான் சொல்றத கொஞ்ச கேளே! எனக்கு மட்டும், வேதிக் லூசுத்தனமா இப்படி செய்வானு தெரியுமா...என்ன? சஞ்சய் முதல்ல இதுக்கு ஒத்துக்கவே இல்லை. நான்தா பேசி அவனை சம்மதிக்க வச்ச... ப்ளீஸ் சௌமி! அவங்கிட்ட பேசு... ப்ளீஸ்!” அவன் கெஞ்சலில் கரைந்தாலும், நண்பனின் காதலை பக்கத்திலிருந்துப் பார்த்தவளுக்கு அவனைத் தேற்றுவது சுலபமான காரிமாயிராதென்றுத் தெளிவாகப் புரிந்தது.
“நானெப்படி பேசுவ? அவனுக்கு சரயூதா உலகம்னு தெரியுமே... என்ன சொல்லி அவனை தேற்ற? சரயூவோட இந்த நிலைக்கு நீதானே காரணம், நீயே போயி பேசுடா” எனும்போது வார்த்தையோடு அவள் கண்களின் கனலும் ரூபினைக் குற்றம் சாட்டியது.
மனைவியின் வாதத்தின் உண்மை உறைத்தாலும் ஜெய்யின் நலம்தான் முக்கியமாகியிருந்தது.