தொடர்கதை - காதல் இளவரசி – 10 - லதா சரவணன்
பத்மினியின் சமாதானப் பேச்சுக்கள் எதையும் உத்ரா காதில் வாங்கிக் கொள்ளவில்லை. போர்ட்ப்ளேயரில் இவர்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட இடத்தில் தங்கவைக்கப்படும் போதே பத்மினி தோழியின் அருகில் நின்று ஒதுக்கத்திற்கான காரணத்தை கேட்டாள். மனதில் எதையும் மறையாமல் நேரடியாகவே பேசும் பத்மினிக்கு உத்ராவின் கோபத்திற்கான காரணம் புரியவில்லை
உத்ரா நீயேன் இங்கே இவங்க கூட தங்கியிருக்க ? நமக்கெல்லாம் வேற சூட் போட்டு இருக்காங்க, நமக்கும் ரொம்பவே கன்வீனியன்ட்டா இருக்கும் வாயேன் தோழியின் கையைப் பற்றி இழுத்த பத்மினியின் பிடியை மெதுவாய் தளர்த்திய உத்ரா எனக்கு இந்த இடம் போதும் இருக்கிறது பத்மினி நீ வேணுன்னா அங்கே போயேன் உனக்கும் மிஸ்டர். பரத்தை சந்திக்க ஏதுவாக இருக்குமே ?!
தோழியின் முகத்தில் தோன்றியது வேதனையா இல்லை பொறாமையா என்று தெரியவில்லை அதற்குக் காரணம் தானும் பரத்தும் மாடியில் இருந்தது என்பதை கண நேரத்தில் யூகித்த பத்மினி சிரிப்புடன் நேற்று நீ மாடிக்கு வந்ததை நானும் பார்த்தேன், ஜஸ்ட் நான் பேசிகிட்டுத்தான் இருந்தேன். எங்களுக்குள்ளே எந்த...
நான் அதையெல்லாம் இப்போ உன்கிட்டே கேட்கவே இல்லையே ? அதிலும் உன் சொந்த விஷயங்களுக்கு எனக்கு ஏன் அநாவசிய விளக்கங்கள் இன்றைய பணிவிவரங்களைப் பற்றிப் பேசிட பிரியன் இன்னும் அரைமணியில் இங்கே வந்துவிடுவார் நான் அதற்குள் கிளம்பவேண்டும் நீயும்.....
ஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள்
பத்மினியின் முகத்தில் அடிபட்டதைப் போல ஒரு வேதனையின் சாயல் சற்றே சங்கடப்பட வைத்தாலும் நேற்று உத்ராவும் தானே சங்கடப்பட்டு இருப்பாள் அப்படியாவது பரத்தும் அவளும் இணைந்திருப்பது உத்ராவிற்கு பிடிக்கவில்லை என்பதை அவள் உணர்ந்து கொள்ளட்டுமே நட்புதான் முக்கியமெனில் இனி பரத்தை அவள் தவிர்க்கட்டும் பிரியன் சொல்லியதைப் போல போனமுறை பணிக்கு வந்த பெண்ணிற்கு ஏற்பட்ட நிலைமை இவளுக்கும் ஏற்படாமல் இருக்கும், மற்றபடி பரத்தைப் பற்றி அவளுக்குத்தான் எந்தவித அக்கறையும் இல்லையே ?! பனிப்பாறைகளின் செயற்கைத் திட்டுக்களை அமைக்கும் இடம் தேர்வு செய்ய இன்று அவர்கள் ராஸ் தீவுக்கு செல்கிறார்கள்.
இன்றிலிருந்து இரண்டு அல்லது மூன்று நாட்கள் அங்கு தங்கிட வேண்டும் என்றும் அதற்குள் இங்குள்ளவர்களுக்கு பயிற்சிகள் தரப்படும் என்பதையும் பிரியன் சொல்லியிருந்ததால், பெண்கள் பிரிவில் ஒவ்வொருவருக்கும் ஆடைகளையும், தண்ணீரில் எந்தளவிற்கு மூழ்க வேண்டும் ஆக்ஸிஜன் மாஸ்க்கின் பயன்பாடு, எதிர்பாராத ஆபத்துக்கள் வந்தால் எப்படி சமாளிப்பது நட்சத்திர மீன்களை கொல்வது எப்படி என்பதைப் பற்றியெல்லாம் அவள் உரைத்துவிட்டு வரும் நேரம் மதியம் மூன்றினைத் தொட்டு இருந்தது. பசி மறத்துப் போயிருந்தாலும் மேற்கொண்டு செய்யப்படவேண்டிய அலுவல்களை மனதில் கொண்டு சாப்பாட்டு அறைக்குச் சென்றாள்.
அறையில் பரத்தைக் கண்டதும் உள்ளே செல்லலாமா வேண்டாமா என்ற எண்ணம் விநாடியில் தோன்றி மறைந்தது எல்லாப் பெண்களையும் போல இவனைக் கண்டதும் நான் ஏன் முகம் சுருங்க வேண்டும். வெகு இயல்பாய் உணவுகளை எடுத்துக்கொண்டு அவனுக்கு நேரெதில் அமர்ந்து கொண்டு பரத் என்ற ஒருவன் இருப்பதே அவள் கண்களுக்கு தெரியாததைப் போல சாப்பிடுவதிலேயே கண்ணும் கருத்துமாய் இருந்தாள் ஆனால் சாப்பாடும் உள்ளே இறங்க மறுத்து சண்டித்தனம் செய்தது. என்னதான் அலட்சியம் செய்தாலும் பரத் தன்னையே பார்த்துக்கொண்டு இருப்பதை அவளின் உள்ளுணர்வு சொல்லத்தான் செய்தது.
அத்தனை பசியா உத்ரா சாப்பாட்டுத் தட்டையே விழுங்கிவிடுவாய் போலிருக்கிறதே, நிமிர்ந்து பார்க்கவேண்டும் அட்லீஸ்ட் அருகில் ஒருவன் உட்கார்ந்து கொண்டு இருக்கிறானே ஒரு வார்த்தைக்காவது நீ சாப்பிட்டுவிட்டாயா என்று கேட்டிருக்கலாம். ஆனால் பாவம் நீயும் காலையில் இருந்தே அமரக் கூட நேரம் இல்லாமல் பணி செய்து கொண்டு இருந்தாய். அங்கே உன்னைத் தொந்தரவு செய்ய மனமில்லாமல் தான் இங்கே காத்திருந்தேன். புதிய இடம் சூழ்நிலை நேரங்கழித்து எடுத்துக் கொள்ளும் உணவு சற்று ஜீரணிக்கப்படுவது கஷ்டம் இனி உணவு நேரத்தைத் தள்ளிப்பபோடாதே உத்ரா வெகு அக்கறையோடு சொன்னவனை
என்னுடைய தேவைகள் எனக்குத் தெரியும் ஸார்.... அதனால் எதுவும் பாதிக்காது கவலைப்பட ஆயிரம் இருக்கும்போது என்னைப் பற்றிய சிந்தனைகள் உங்களுக்கு ஏன் ?! தட்டை அலம்பிவிட்டு மேசையின் மேல் வைத்துவிட்டு அவ்வளவுதான் பேச வேண்டியது என்பதைப் போல வெளியேறியவளை நிறுத்தினான்.
என்னை மட்டும் ஏன் அவாய்ட் பண்றே உத்ரா நான் உனக்கு ஒண்ணும் கெடுதல் பண்ணலையே நல்லது தானே பண்ணேன். நேற்று பரத் இன்று ஸார் ஆகிப்போனதன் காரணம் அறியலாமா ?
உங்கள் உதவியை நான் எப்போதும் மறப்பதாயில்ல ஆனால் அடிக்கடி அதை நினைவு படுத்திக்கொண்டே தாங்கள் இருப்பது எதற்கு என்று எனக்குத் தெரியவில்லை, பணிபுரியும் இடத்தில் பெயர் சொல்லி அழைக்கச்சொல்லி சொல்லுவது உங்கள் பெருந்தன்மையைக் காட்டலாம் ஆனால் எனக்கு அது அதிகப்பிரத்தனம். நீங்கள் செய்த உதவியை அடிக்கடி சொல்லிக்காட்டிக்கொண்டே இருப்பீர்களா ? வலதுகை கொடுப்பது இடக்கைக்கு தெரியக்கூடாது என்று வாழ்ந்த கடையேழு வள்ளல்கள் வாழ்ந்த நாடு இது நீங்க என்னடான்னா.... சரி எனக்காக பிரியன் காத்திருப்பார் நான் வருகிறேன்