தாத்தாவின் உபயத்தில் கடற்கரையோரம் இருந்த மீனவ சிறுவர்களின் உதவியில் கடல் அலைகளிலும் அழகாய் நீந்த கற்றுக் கொண்டிருந்தாள் தேன்மொழி.
ஒவ்வொரு படப்பிடிப்பின் பூஜையின் போதும் தேன்மொழியை ரெடி ஸ்டார்ட் கேமரா என்று சொல்ல வைத்து ஆரம்பிப்பதை வழக்கமாய் கொண்டிருந்தார் முத்துக்குமரன்.
இந்திய அளவில் மிக வெற்றிகரமான இயக்குனராகவும் தாயாரிப்பாளராகவும் விளங்கினார்.
நகரத்தில் தனியாக பெரிய அளவில் அலுவலகம் வைத்திருந்த போதும் அவர்கள் குடியிருந்த வீட்டை மாற்றவில்லை.
“அம்மா எனக்கு மியுசிக் ப்ரோக்ராம் இருக்கு, நான் வரலை” கோவாவிற்கு வர முடியாது என்று மறுத்தான் இளமாறன்.
“எனக்கும் எக்ஸாம் இருக்கு. பாப்பா அண்ணாக்கு பேனா எடுத்து வச்சுட்டு போ” இளங்கோ வரவில்லை என்று சொன்னதுடன், “இவ சும்மா தானே இருக்கா. பாப்பாவை பார்த்துக்க துணைக்கு கூட்டிட்டு போங்க” வானதியைப் பார்த்து சொல்லி வைத்தான்.
இளங்கோவைப் பார்த்து பழிப்புக் காட்டிய வானதி அதெல்லாம் போக முடியாது என்று வேண்டுமென்றே மறுத்த போதும் அக்கா நீயும் வர மாட்டியா என்று தேன்மொழி கேட்கவும் உடனேயே சம்மதம் தெரிவித்தாள்.
“உங்க அண்ணாவை எக்ஸாம் முடிச்சிட்டு வர சொல்லு. எக்ஸாம் வெள்ளிக்கிழமை முடிஞ்சிரும். அப்புறம் மாறனையும் ப்ரோக்ராம் முடிச்சிட்டு வரச் சொல்லு. ரெண்டு தடியன்களும் தனியா இங்க இருந்து என்ன செய்ய ப்ளான் போடுறாங்களாம்” தேன்மொழி காதில் ரகசியம் பேசினாள் வானதி.
குடும்பத்தினர் அனைவரும் கோவாவில் உற்சாகமாக பொழுதைக் கழிக்க படப்பிடிப்பிற்கு வந்த தேன்மொழி அணிந்திருந்த ஆடையைக் கண்ட ஹிந்தி பட உலகின் பிரபல ஆடை வடிவமைப்பாளர் அந்த உடை எங்கே வாங்கியது என்று கேட்டறிந்தார்.
தனது மனைவி தைத்த ஆடை என்று முத்துக்குமரன் தெரிவிக்க கயல்விழியை சந்திக்க அனுமதி கேட்டார் அந்த ஆடை வடிவமைப்பாளர்.
“நீங்கள் பயன்படுத்தியிருக்கும் கலர்ஸ், இந்த டிசைன். அற்புதமா இருக்கு. இது ரொம்ப தனித்துவமா இருக்கு. ஏன் நீங்க ஆடை வடிவமைப்பதில் கவனம் செலுத்தக் கூடாது” கயல்விழியிடம் வினவினார்.
“என் பொண்ணுக்கு மட்டும் தான் இதுவரை தைத்திருக்கிறேன். ஆடை வடிவமைப்பு பற்றி எல்லாம் எனக்கு தெரியாது” கயல்விழி சொல்ல அந்த ஆடை வடிவமைப்பாளர் சில அடிப்படைகளைக் கூறினார்.
கயல் ப்ரொடக்ஷன்ஸ் தயாரித்த குழந்தைகள் படம் ஒன்றிற்கு கயல்விழி ஆடை வடிவமைப்பு செய்தார்.
ஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள்
“அவர் பிராண்ட் லோகோ எல்லாம் பதிவு செய்யணும்ன்னு சொல்லிக் கொடுத்தார்” கணவரிடம் கூறினார்.
“பாப்பா அம்மா ட்ரஸ் டிசைன் செய்தா என்ன பேர் வைக்கலாம்” மகளிடம் கேட்டார் முத்துகுமரன்.
“கயல்” யோசிக்காமல் மகள் சொல்ல அதையே வைக்க முடிவு செய்தனர்.
“பாப்பா ட்ரஸ்ல இருக்க மாதிரியே நீ டிசைன் செய்யும் ட்ரஸ்லேயும் தங்க மீன் முத்து வச்சிடலாமா” என்று முத்துக்குமரன் மனைவியிடம் கேட்க அவர்கள் பேசியது என்னவென்று தேன்மொழிக்கு சரியாகப் புரியவில்லை.
வானதி அவளிடம் விளக்கிச் சொல்ல தன் அன்னையிடம் சென்று மறுத்தாள்.
“அம்மாவும் அப்பாவும் பாப்பாக்கு மட்டும் தான் வேணும்” என்று தன் ஆடையில் இருந்த மீன் மற்றும் முத்தைக் காட்டி சொல்லவும் குழந்தையின் மனதில் மீன் முத்து என்றில்லாமல் அன்னை தந்தை என்று பதிந்து போயிருப்பதை உணர்ந்தனர்.
அப்போது முடிவு செய்தார் கயல்விழி. அவர் டிசைன் செய்யும் உடைகள் அனைத்திலும் தனது மகளின் அடையாளமாக சிறிய தங்க மீன் லோகோவைப் பதிப்பது என்று தீர்மானித்தார்.
விஷுவல் கம்யுனிகேஷன் படிப்பை முடித்து தந்தைக்கு உதவியாக தயாரிப்பு நிர்வாகத்தில் கவனம் செலுத்தினான் இளங்கோ.
சென்னை மியுசிக் அகாடமியில் இசையைப் பாடமாக எடுத்துப் படித்தான் இளமாறன்.
வானதி பேஷன் டிசைன் படிக்க ஆசைபப்ட வள்ளி மறுத்தார்.
“அவ்வளவு செலவு செய்து படிக்க வைக்க என்னால முடியாது வானதி. இங்கேயே இளங்கோ தம்பி மாதிரி டிகிரி படி” என்று கூற அதை அறிந்த இளங்கோ தன் பெற்றோரிடம் ஆலோசித்து வானதியை புனேவில் பேஷன் டிசைனில் சேர்க்க ஏற்பாடு செய்தான்.
“தாங்க்ஸ் இளங்கோ” முதன்முறை அவனைப் பார்த்து முறைக்காமல் தலையைக் குனிந்த வண்ணம் சொன்னாள் வானதி.
“நோ மென்ஷன் அத்தைப் பொண்ணே” மென்மையாக அவன் குரல் ஒலிக்க நிமிர்ந்த பெண்ணவள் நயனங்கள் வெட்கம் என்றும் ஸ்வரத்தை மீட்டியது.
அதை அழகாய் படம் பிடித்து மனதில் பதிய வைத்துக் கொண்டான் அவள் மன்னன்.
நாட்கள் அழகானதாகவும் வேகமானதாகவும் நகர தேன்மொழியின் பத்தாம் பிறந்தநாள் வந்தது.
அவள் கேட்ட பிறந்த நாள் பரிசைக் கேட்டு மொத்தக் குடும்பத்தினரும் அதிர்ச்சி அடைந்தனர் ஒருவரைத் தவிர.
தொடரும்
Go to Senthamizh thenmozhiyaal story main page
{kunena_discuss:1218}