ஜீவனின் இரண்டு அண்ணன்களும் அவனை தோள் அணைத்து நட்பாய் நடத்துவார்கள் எனினும் அவர்கள் மனதளவில் அவன் இன்னும் குட்டி தம்பிதான்.
மூத்த அண்ணன் தீபன் பிரபல சி ஏ வாக லட்சங்களில் சம்பளத்தை அள்ளிக் கொண்டிருக்கின்றான். மனைவி ப்ரீதா மற்றும் மகன் ராபினோடு அருகாமையிலுள்ள பிளாட் ஒன்றில் சில வருடங்கள் முன்பு குடி பெயர்ந்திருந்தான்.
இரண்டாவது அண்ணன் ரூபன், தன்னுடைய அத்தை மகளை மணந்துக் கொள்ளவென்று, தன் வாழ்க்கை தரத்தை உயர்த்த பிஸினஸ் எனும் முயற்சியை அறிந்தே இராத அந்த குடும்பத்தில் தன் வெறித்தனமான உழைப்பினால் கார்களின் சிறு சிறு பகுதிகளை தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று நிறுவியவன்.
தன்னை பொருளாதாரத்தில் அத்தை கணவர் மதிக்கும் விதமாக ஸ்திரப்படுத்தி, தன் நேசத்திற்குறிய அத்தை மகள் அனிக்காவையும் மணந்துக் கொண்டு, தற்போது கர்ப்பிணியாக இருக்கும் அவளோடு கூட சில நாட்கள் தான் புதிதாக கட்டி இருக்கும் வீடு, அல்ல அல்ல அந்த மாளிகையிலும், மீதி பல நாட்கள் தங்களுக்கென அப்பா இழைத்து இழைத்துக் கட்டி இருக்கும் மூன்று அறைகள் கொண்ட அவர்கள் அன்பு இல்லத்திலும் கழித்துக் கொண்டிருந்தனர். ரூபனுக்கும் அனிக்காவிற்கும் குழந்தை பிறந்து, கொஞ்சம் வளரும் வரையிலும் பெரியவர்கள் கண்காணிப்பில் இருக்கவென்றே இங்குமங்குமான அவர்கள் இருப்பும் , பயணமும்.
மொத்தத்தில் பெரியவர்களை மதிக்கும் சிறியவர்கள் என அன்பு பேணும் நற்குடும்பம் அவர்களுடையது.
தன் அண்ணன் ரூபன் தன்னை ஒரு தொழிலதிபனாய் நிலை நாட்ட வெறித்தனமாக உழைத்துக் கொண்டிருந்த நாட்களில் தானும் அதே தொழிலால் கவரப்பட்டு அதற்கான படிப்பையே கற்று, எந்த ஒரு எதிர் நோக்கும் இன்றி ஜீவன் அவனுக்கு தோள் கொடுத்திருந்தான்.
ரூபனுக்கான ஜீவனது இரவு பகல் பாராத உழைப்பானது அண்ணனுக்காக மட்டுமானதல்ல, அவனது உயிர்த்தோழி அனிக்காவுக்கானதும் தான். முதலில் தன் அண்ணன் தன் தோழி அனிக்காவை காதலிப்பதை அறிந்து அது சரி வராது என எதிர்ப்பாய் நின்றான் தான். ஆனால், என்று தன் அண்ணனின் காதலை உணர்ந்தானோ அன்றே அவன் காதல் வெற்றிப் பெற அத்தனையிலும் உதவிட முன் நின்றான்.
ஜீவனிடமிருந்த எந்த ஒரு வேலையாயினும் அதில் அவன் காட்டும் அர்ப்பணிப்பையும்,அத்தனையையும் திறமையாய் நடத்தும் ஆளுமைகளையும் அறிந்துக் கொண்டு அவனுக்கு என்றே ஒரு தொழிற்சாலை அமைய கிட்டத்தட்ட சில வருடங்களாக தோள் கொடுத்து நின்றான் அண்ணன் ரூபன். அங்கே ஒருவருக்காக ஒருவர் என்று தோள் கொடுக்கும் உடன் பிறப்புகளால் குடும்பமே வளர்ச்சியை அடைந்துக் கொண்டது.
அதிகாலை புத்துணர்ச்சியோடு முன் வாயிலை நோக்கி பயணித்தான் ஜீவன். செக்யூரிட்டியின் காலை வணக்கத்திற்கு, பதில் வணக்கம் சொல்லி, செக்யூரிட்டி திறந்துக் கொண்டு நின்றிருந்த கதவின் வழியாக உள்ளே நுழைந்தான். ஜீவன். ம்ஹா… மெஷினரிகளின் வாசனையும் கூட அவன் உதிரத்தோடு கலந்து விட்டிருந்தன போல, அதனை சுவாசித்து மருபடி ஒருமுறை புத்துணர்வுக் கொண்டான்.
ஒவ்வொரு எந்திரமும் அவனோடு உரையாடும் போலொரு உனர்வு பிணைப்பு அவனுக்கு உண்டு. ஆசையாய் கற்றுக் கொண்ட தொழிலோ, வேலையோ எத்தனை பேருக்கு அமையும். அந்த அளவில் அவன் மிகவும் அதிர்ஷ்டத்திற்கு உரியவனே. ஒவ்வொன்றாய் அருகே சென்று
கவனிக்காதது போல மேலோட்டமாய் கவனித்து வந்து தன் இடத்தில் அமர்ந்தான்.
முதலாளியின் நேர் கவனிப்பு இருக்க அங்கு சுணக்கம் தான் ஏது? நேரத்திற்கு மெஷின்கள் இயங்க துவங்கின, அந்த பகுதியில் ஓரத்தில் சின்ன தடுப்பின் பின்னே இருந்து தன் வேலைகளை கவனித்துக் கொண்டிருந்தான் ஜீவன். ஆண்டிறுதிக்கான கணக்குகளில் சிலவற்றை சரிபார்க்கச் சொல்லி தீபன் அனுப்பி இருந்தான். ஆம், தம்பிகளின் நிறுவனத்திற்கு தணிக்கை செய்ய வேறு ஒருவர் இருந்தாலும் தான் அவற்றில் தலையை நுழைக்காமல் இருக்க மாட்டான். உரிய ஆலோசனைகளை சொல்லி அவர்களை வழி நடத்துவான்.
வேலை மும்முரத்திலும் கூட மனதிற்குள் அவனவளை மிக தேடினான்.
எங்கே போய்விட்டாள் திவ்யா?
அவள் இருந்தால் இன்னும் சீக்கிரமாக இந்த வேலைகளை முடிக்கலாமே? …
என மனதிற்குள் எண்ணிக் கொண்டான். வேலைகளுக்காக தான் அவளை தேடுகின்றானா? அல்லது கடந்த ஒருவாரமாக அவளை காணாத ஏக்கத்தின் காரணமாக தேடிக் கொண்டிருக்கின்றானா? என்பது கடவுளுக்கே வெளிச்சம்.
திவ்யா வேறு யாருமல்ல அவனுடைய ஃபியான்சி. பல்வேறு பிரச்சனைகளை தாண்டி நிச்சயதார்த்தம் முடித்து, அவர்கள் தங்கள் திருமணத்திற்காக காத்திருக்கின்றனர்.
பிறர் காண பொது வெளியில் தங்கள் காதலை இவர்கள் அவ்வளவாய் காட்டிக் கொள்ளாத போதும், அவர்களுக்கு இடையேயான பிணைப்பு அது மிகவும் ஆத்மார்த்தமானது.
சில முக்கியமான டாகுமெண்ட்களை பார்வையிட வேண்டுமென எண்ணியவன் தொழிற்சாலை பகுதியில் இருந்து எழுந்து லேப்டாப்பை கையோடு தூக்கிக் கொண்டு கேபினுக்குள் செல்ல ஆரம்பித்தான்.