தொடர்கதை - காணாய் கண்ணே - 01 - தேவி
ஹாய் பிரெண்ட்ஸ்,
எல்லோரும் பொங்கல் மகிழ்ச்சியா கொண்டாடி இருப்பீங்க. சில்சியில் என்னோட ஆறாவது கதையான காதலான நேசமோ உங்கள் அனைவரின் சப்போர்ட்டால் முடிச்சுட்டேன். கதைக்கு அத்தனை அத்தியாயங்களுக்கும் தொடர்ந்து கமெண்ட் செய்து ஆதரவு அளித்த ஆதர்வ் ஜோ, ஸ்ரீ வி, மதுமதி, மகி நாகராஜ், சாரு, சாஜூ, சாஹித்யா, அஞ்சனா, பிரியா , தேன்மொழி, பிந்துஜி அனைவருக்கும் மிகுந்த நன்றிகள். முகநூல் மூலம் கமெண்ட் செய்த காந்திமதி, க்ரிபன்யா, ஐஸ்வர்யா, துரை செல்வி இவர்களுக்கும் நன்றிகள். எமொஜிஸ் கொடுத்து லைக் கொடுத்தவர்களுக்கும் நன்றிகள். வாசித்த அனைவருக்கும் நன்றிகள்.
இதோ என்னுடைய ஏழாவது தொடர் ஆரம்பம். இதற்கும் உங்கள் ஆதரவையும், கருத்துக்களையும் தொடர்ந்து எதிர்பார்த்து காத்து இருக்கிறேன் பிரெண்ட்ஸ்.
**** Contest alert **** Chillzee 2019 Contest # 01 - தேவியின் 'காணாய் கண்ணே' கதை போட்டியில் பங்குப்பெற தவறாதீர்கள் ***
காலை மணி ஆறு. கிருஹா இல்லத்தில் கீழே பூஜை அறையில் சுப்ரபாதம் ஒலிக்க, பிரதாப் ருத்ரன் பூஜை செய்து கொண்டு இருந்தார். உடன் அவரின் தம்பி சக்தி ருத்ரன் அமர்ந்து இருக்க, சக்தியின் மனைவி துர்காவும் அமர்ந்து இருந்தார்.
துர்காவின் கண்கள் பூஜை அறை வாசலை நொடிக்கொரு தரம் பார்த்துக் கொண்டு இருந்தது. பிரதாப் பூஜை முடிக்க இன்னும் சில நிமிடங்களே இருக்க, தங்கள் மகள் இன்னும் வந்து நிற்கவில்லையே என்று படபடப்போடு பார்த்துக் கொண்டு இருந்தார்.
அவர் யாரை எதிர்பார்த்துக் கொண்டு இருந்தாரோ, அந்த மேடம் தன் அறையில் குப்புறப் படுத்துக் கொண்டு இருந்தாள். அவளின் கனவில் விஜய்தேவர கொண்டா ராயல் என்பீல்ட்டில்
“இன்கேம் இன்கேம் காவலா” என்று பாடிக் கொண்டு இருக்க, பில்லியனில் ரஷ்மிகாவிற்கு பதில் நம்ம மேடம் அமர்ந்து விஜயை முறைக்க என்று அழகான அந்தக் கனவில் லயித்து இருந்தாள்.
அதைக் கலைக்கும் விதமாக
“பேட்டோ ராப்.. பேட்டோ ராப் “ என்ற சத்தம் காதை கிழிக்க, யாருடா அது நம்ம பாட்டுக்கு எசப் பாட்டு பாடுறது என்றுக் கண்ணைத் திறந்தால் , அங்கே அவளின் செல் போன் அலறிக் கொண்டு இருந்தது.
எழுந்து அதை எடுத்துப் பார்த்த பின் அது அலாரம் என்று புரிந்து மணியைப் பார்த்தாள்.
சின்ன முள் பெரிய முள் இரண்டும் ஆறை நோக்கிப் பயணிக்க, “ஐயோ” என்று அலறியடித்துக் கொண்டு பெட்டில் இருந்து குதித்து இறங்கினாள்.
வேகமாக தன் நைட் டிரெஸ்ஸை மாற்றி , வேறு சல்வார் ஒன்று அணிந்து கொண்டு, வெளியில் கிளம்பப் போனவள், தன் தலையைக் கண்ணாடியில் பார்க்க, அது பழைய பேய் படத்தில் வருவது போல், நாலு பக்கமும் தொங்கிக் கொண்டு இருந்தது.
அதைக் கவனித்து, சரி செய்ய முயற்சி செய்தவள், முடியாமல், வேகமாக ஜக்கில் இருந்து தண்ணீரை எடுத்து தலையில் தடவி, முடியை படிய விட்டு, மேலே ஒரு கிராப் கிளிப் போட்டுக் கொண்டாள்.
அறை வாசலில் காலை வைக்கப் போனவள், மீண்டும் நினைவு வந்தவளாக, வேகமாக பல் தேய்த்து விட்டு வந்தாள்.
கீழே பிரதாப் பூஜை முடித்து மணி அடிக்கும் போது வேகமாக வந்து அவள் அம்மாவின் அருகில் அமர்ந்து கொண்டாள்.
அவள் அம்மா துர்கா அவளை முறைக்க, அவளோ சற்று முன் கனவில் விஜய் தேவார கொண்டா செய்தது போல் கண் அடித்தாள்.
அவன் செய்தால் அது க்யுட்டாக இருக்க, நம்ம மேடம் செய்ததோ அவள் அம்மாவிற்கு கொலை காண்டாக்கியது.
அவரின் முறைப்பில், ஹி..ஹி என்று அசடு வழிந்து விட்டு, நல்ல பிள்ளையாக சாமியப் பார்த்துத் திரும்பிக் கொண்டாள்.
பிரதாப் பூஜை முடித்து எல்லோருக்கும் பிராசதம் கொடுத்தார். தன் தம்பி, மனைவி இருவருக்கும் கொடுத்து விட்டு, தம்பி மகளின் அருகில் வர, அவளும் பவ்யமாய் தன் கையை நீட்டினாள்.
“எத்தனை மணிக்கு எழுந்த?” என்று வினவினார்.
“ஐஞ்சு மணிக்கு பெரியப்பா?
“பொய் சொல்லாத? “
“நிஜமாவே பெரியப்பா. ஐஞ்சு மணிக்கு எழுந்து குளிச்சு, கொஞ்ச நேரம் படிச்சுட்டு இருந்தேன். நீங்க பூஜையில் உட்கார்ந்ததும் நானும் வந்துட்டேன் பெரியப்பா”
“ஹ்ம்ம். நீ குளிச்ச? “
“ஆமாம். பாருங்க தலையில் எல்லாம் தண்ணி”
“தலையில் தண்ணி சரி. அது முகத்தில் படலையோ
அவள் முழிக்க “நேற்றைக்கு போட்ட காஜல் கண்ணுலேர்ந்து காது வரைக்கும் இழுத்துட்டு இருக்கே .. ?” என்று பிரதாப் கேள்வியாக முடித்தார்.
“ஆஹா.. மண்டை மேலே இருக்கிற கொண்டைய மறந்துட்டோமே” என்ற வடிவேலுவின் டயலாக்கை மனதிற்குள் பேசியவள், பெரியப்பாவிடம் அசடு வழிந்தாள்.