ஆமா, உன்னை விட ஏஏ..ஏ.. ஏழு மாசம் சின்னவ… அனியை விட ஒன்றரை மாசம் சின்னவ… ரொம்ப பெரிய வித்தியாசம்தான்.
சரி சரி இப்ப திவிக்குட்டி சாந்தமான மூடுக்கு மாறிட்டு இருக்காளாம். நான் சொல்லுறதைக் கவனமா கேட்பாளாம்.
ம்ம் சொல்லுங்க…
மறுபடி அவளிடம் மரியாதைப் பன்மை வந்திருக்க இப்போது சிரித்தால் பொலிப் போட்டு விடுவாள் எனப் புரிந்ததால் தன்னை அடக்கிக் கொண்டான்.
இந்த வருஷமே நம்ம மேரேஜ் இருக்கும் திவ், நீ சொல்ற மாதிரி மத்த பேங்க் லோன்கள் எல்லாம் பெரிய பிரச்சனையே இல்ல. இந்த டெண்டரும் கிடைச்சிடுச்சு. முதல் முறை நமக்கு இவங்க வேலை தர்றதினால கொஞ்சம் இவங்க ஹெட் ஆபீஸ் போய் சில ப்ரொசீஜர்கள் முடிக்க வேண்டி இருக்கு அவ்வளவு தான். உடனே வேலை ஆரம்பிச்சிடலாம்.
ம்ம்…
ஆனா, இன்னும் ஒரு அஞ்சாறு மாசம் கழிச்சு நம்ம மேரேஜ் வச்சுப்போம். இந்த கான்டிராக்ட் ப்ரொசீஜர் முடிஞ்சதும் அடுத்த மாசமே வீட்ல சொல்லி ஏற்பாடு செஞ்சிடலாம். நான் ஏற்கெனவே அம்மாக்கிட்ட இதைப் பத்தி பேசிட்டேன்.
ம்ம்…
எதுக்கு அஞ்சாறு மாசம் சொன்னேன்னு நீ கேட்கலியே?
அம்மா எதுவும் காரணமா சொல்லியிருப்பாங்க..
இல்ல அம்மா ஒன்னும் சொல்லலை, அம்மா இந்த வருஷ ஆரம்பத்திலயே கல்யாணம் வச்சிக்க சொல்லி இருந்தாங்க… நான் தான் தள்ளிப் போட்டேன்.
தான் தன் குடும்பத்தினரால் எத்தகைய நெருக்கடியில் இருக்கிறோம் என்று தெரிந்தும் கூட ஜீவன் தங்கள் திருமணத்தை தானே தள்ளிப் போட்டதாகச் சொன்னதைக் கேட்டதும் அவளுக்கு மிகவாக வலித்தது. வீட்டினருக்கே பிரச்சனை இல்லையென்றால் இவனுக்கென்னவாம்?
வயசு கூடிட்டே போகுது இப்ப கல்யாணம் கட்டி எப்ப புள்ளை பெத்துக்குவா உங்க மக? தான் உயிராக நினைத்த சாவித்திரி அக்காவின் வாயிலிருந்தே எத்தனை முறை இதைக் கேட்டுத் துடித்திருப்பாள் இவள்.
அவளது எண்ணப் போக்கை உணராமலேயே ஜீவன் தொடர்ந்தான்,
ரூபன் அண்ணாவுக்கு உறவிலயே சொந்த அத்தை மகளையே திருமணம் செஞ்சது மனசுக்குள்ளேயே கொஞ்சம் பயம். பிறக்கப் போற குழந்தைக்கு எந்த குறையும் இருந்திறக் கூடாதுன்னு எத்தனையோ மருத்துவ பரிசோதனை முடிச்சு இப்பதான் அனி கன்சீவ் ஆனா, நாம இன்னும் கொஞ்ச மாசம் அவ டெலிவரி வரைக்கும் மேரேஜ் செஞ்சுக்காம இருந்தா, அண்ணாக்கு ஒரு உதவி தேவைன்னா சட்டுன்னு போய் நிக்கலாம். நானும் இப்ப மேரேஜ் செஞ்சுக்கிட்டேன்னா என் கவனம் அங்கே இல்லாம போயிடும், அதனாலத்தான்… மனதில் இருந்ததை அவளோடு கள்ளமில்லாமல் பகிர்ந்துக் கொண்டிருந்தான் ஜீவன்.
ஏன் ஜீவா உனக்கு என் மேல அவ்வளவு தான் நம்பிக்கையா? திருமணம் ஆனா நான் உன்னை உன் அண்ணாக்கும் உயிர் தோழிக்கும் உதவியா போகிறதை தடுத்திருவேனா? உன்னோட குடும்பத்தில் ஒருத்தியா ஆனதுக்கு அப்புறம் உன் அண்ணனும் அண்ணியும் எனக்கு மட்டும் வேற்று ஆளா? நான் அவங்களுக்கு உதவியா இருக்க மாட்டேனா? உனக்கு எப்பவுமே அனிக்கா தான் பெரிசுன்னு தெரிஞ்சும் நான் உன் கிட்டே எதிர்பார்த்தது தப்புத்தான் மனதிற்குள்ளாக இரணப்பட்டுப் போனாள் திவ்யா.
ஒரு வேளை அவள் தன் எண்ணவோட்டங்களை ஜீவனிடம் சொல்லி இருந்தால், ஜீவன் தன்னுடைய தரப்பு விளக்கங்களை ஒருவேளை சொல்லியிருக்கக் கூடும். ஆனால், தன்னுடைய காதலனின் மனதில் முதல் இடத்தில் அவன் குடும்பமும், தோழியும் இருக்க இரண்டாவதோ இன்னும் சொல்லப் போனால் இன்னும் கீழே எத்தனையாவதோ இடத்தில் தன்னை வைத்திருக்கும் உண்மை நிலையை உணர்ந்தவளாக, தன் காதலுக்காக எட்டிக்காயாய் விழுங்கினாள். அது கூடிய விரைவில் எரிமலையாய் தன்னை மீறி வெளிவரும் என்றறியாதவளாக அல்லவோ அவள் இருந்தாள்.
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
சித்ரா வெயின் "நெஞ்சோடு கலந்திடு உறவாலே..." - காதல் கலந்த குடும்பத் தொடர்கதை...
படிக்கத் தவறாதீர்கள்..
திவ் அந்த ஹெட் ஆபீஸ் போகிறதுக்கு தோதான தேதி, நேரம் பார்த்து நாம ரெண்டு பேருக்கும் டெல்லிக்கு ப்ளைட் டிக்கெட் புக் பண்ணிடேன், கடைசி நேரம் நாம டிக்கெட் கிடைக்காம முழிக்கிற மாதிரி ஆகக் கூடாது.
நானா? நாம ரெண்டு பேரா போகணும்? அம்மா விட மாட்டாங்க ஜீவா?
ஒரு நாள் வேலைதான்மா ப்ளீஸ், வேணும்னா நான் அத்தைக்கிட்ட பேசறேன். அந்த டெண்டர் எல்லாம் தயாரிச்சவ நீதானே. மை லக்கி சார்ம்… அவள் புறங்கையில் முத்தமிட்டான்.
உன் அருகாமைக்காக என்றுச் சொல்லாமல் உன் அதிர்ஷ்டத்துக்காகத்தான் கூடவே வரச் சொல்கிறேன் எனச் சொல்லி மறுபடி ஒருமுறை தன்னறியாமலே அவள் மனதைக் காயப் படுத்தினான் ஜீவன்.
புன்னகை மாறாமலேயே திவ்யா அங்கிருந்து சென்று தன் கணிணி முன் அமர்ந்தாள்.கைகள் தன்னிச்சையாக வேலையில் ஈடுபட மனதில் பல்வேறு எண்ணங்கள்.