“எனக்கு அருளை பொண்ணு பார்க்க வராங்கங்கிற விஷயமே தெரியாது அத்தை.. மகிக்கும் அருள்க்கும் கல்யாணம் பேசறாங்கன்னு தெரிஞ்சப்ப கஷ்டமா இருந்துச்சு.. அப்போ பார்த்து அருள்க்கு கல்யாணத்துல இஷ்டமில்ல, அவளை கட்டாயப்படுத்தாதீங்கன்னு கலை பெரியம்மாக்கிட்ட இலக்கியா பேசறதை கேட்டு தான்,
ஞாயிற்றுக் கிழமை அவக்கிட்ட பேசி அவளை வற்புறுத்தி கல்யாணம் செஞ்சு வச்சிடுவாங்களோன்னு தான் அப்படி செஞ்சேன்.. அதுக்குப்பிறகு தான் எனக்கு இந்த விஷயம் தெரிய வந்துச்சு அப்போ அதை தடுக்க தான் பார்த்தேன்.. ஆனா சார்லிக்கு போன் போகவே இல்லை..”
“என்ன இருந்தாலும் நீ செஞ்சது தப்பு தான் சுடர்.. கலைக்கு இதெல்லாம் பிடிக்காதுன்னு உன்கிட்ட சொல்லியும் நீ இப்படி செஞ்சிருக்கேன்னா என்ன நான் சொல்றது..” என்றார் பூங்கொடி,
“ப்ளீஸ் அத்தை.. விஷயம் இவ்வளவு சீரியஸா ஆகும்னு எனக்கு தெரியாது.. என்னை மன்னிச்சிடுங்க அத்தை..” என்று கெஞ்சினாள்.
“அத்தை, பெரியம்மா, பாட்டி, மாமான்னு உறவு முறை கொண்டாடி என்னம்மா நாடகம் போட்ற.. இதெல்லாம் எங்க இருந்து கத்துக்கிட்ட.. இப்படி நல்லவ மாதிரி நடிச்சா நாங்க அதை நம்பி உன்னை இந்த வீட்டு மருமகளாக ஏத்துப்போம்னு பார்த்தீயா? அது நடக்கவே நடக்காது.. ஏதோ என் பொண்ணு இரக்கப்பட்டு உன்னை இங்க கூட்டிட்டு வந்து அடைக்கலம் கொடுத்து வச்சிருந்தா, உனக்கு இப்படிப்பட்ட ஆசையெல்லாம் இருக்கா..” என்று பாட்டி கோபமாக பேச,
உடனே எழிலோ, “அம்மா அவ பண்ணது தப்புதான் அதுக்காக இப்படியெல்லாம் பேசுறீங்க.. அவ ஒன்னும் யாரோ இல்லை.. ஏன் மகிக்கு அவ கல்யாணம் பண்ணிக்கிற முறை தானே, அவ ஆசைப்பட்றதுல என்ன தப்பு?” என்று எழில் கேட்க,
“இங்க பாரு உன்னோட வீட்ல அவளை கூட்டிட்டு வந்து வச்சிருக்கியா.. அதோட அதை விட்டிடு.. அதை விட்டுட்டு அவளை இந்த வீட்டு மருமகளாக்க நினைக்காத.. என்ன இருந்தாலும் புருஷனை விட்டுட்டு இன்னொருத்தன் கூட ஓடிப்போனவளுக்கு பிறந்தவ தானே இவ..” என்று பாட்டி கேட்க,
கதிரவனுக்கே தன் மாமியாரின் அதிகப்படி பேச்சில் கோபம் வர, உடனே எழுந்தார். மற்றவர்களுக்குமே பாட்டி இந்த அளவுக்கு பேசியிருக்க வேண்டாம் என்று தான் தோன்றியது. இதில் மருமகன் எழுந்ததும் முத்து பாட்டிக்கே மனதில் சிறு பயம் சூழ,
“நடந்த எல்லாத்துக்கும் என்னை சேர்ந்தவங்க தான் காரணம்.. நடந்த தப்பை எப்படி சரி செய்றதுன்னு தெரியல.. ஆனா இனி வேற எதுவும் தப்பா நடக்காது.. நடந்த தப்புக்கு அவங்க சார்பா நான் மன்னிப்பு கேட்டுக்கிறேன்..” என்று கதிரவன் பொதுவாக அனைவரிடமும் மன்னிப்பு கேட்க,
“அய்யோ விடுங்க கதிர் இதுக்கெல்லாம் நீங்க மன்னிப்பு கேட்டுக்கிட்டு.. அம்மா பேசனதை மனசுல வச்சிக்காதீங்க..” என்று புகழ் கதிரவனை சமாதானப்படுத்த முயற்சிக்க,
“பரவாயில்லை சார்.. எனக்கு யார் மேலேயும் எந்த கோபமுமில்ல.. அதே சமயம் நடந்த தப்புக்கு மன்னிப்பு கேட்பது தானே முறை..” என்றவர், அடுத்து புகழேந்தியோ மற்றவர்களோ பேசுவதற்கு முன்,
“எழில் அவளை கூட்டிக்கிட்டு வா வீட்டுக்கு போகலாம்..” என்றவர்,
“இதுக்குப்பிறகும் இங்க நிக்காம கிளம்பு அமுதா.. எதை செய்றதா இருந்தாலும் இனி யோசிச்சு செய்” என்று அவனிடமும் சொன்னவர், வீட்டை விட்டு வெளியேறினார்.
“என்னம்மா இது..” என்று புகழேந்தி பாட்டியிடம் கோபமாக கேட்க,
“அது ஏதோ கோபத்துல வந்துடுச்சுப்பா..” என்று கூறினார்.
அதற்கு அவரை எழில் முறைத்தப்படியே, “சுடர் வா வீட்டுக்கு போகலாம்..” என்று அவளை கூப்பிட,
அனைவரும் அவள் செய்த தவறுக்கு திட்டியது வருத்தமாக இருந்தாலும், இன்னும் மகிழ் எதுவும் சொல்லாததால், அவனாவது தன்னை புரிந்துக் கொள்வானா? என்ற எதிர்பார்ப்பில், அவனை பார்த்தாள்.
அவனை போலவே சுடரும் அவனை காதலிக்கிறாள் என்பதில் மகி மகிழ்ச்சி அடைந்தவன், அதன்பின் நடந்த அத்தனை பேச்சுவார்த்தைகளையும் கேட்டவனுக்கு என்ன செய்வது என்று தான் தெரியவில்லை.
அருளோடு அவனுக்கு திருமண பேச்சு நடந்தது அவனுக்கே தெரியாது. ஆனால் அது சுடருக்கு தெரிந்திருக்கிறது. அது தெரிந்தபின் அவனிடம் அந்த விஷயத்தை சொல்லி பேசாமல், அவள் என்ன என்னவோ செய்து வைத்ததை பார்க்கும்போது, கண்டிப்பாக அவள் அதனால் வரும் பின் விளைவுகளை தெரிந்தே செய்திருக்க மாட்டாள் என்பது தெரியும், ஆனால் செய்துவிட்டாளே,
இப்போது அருள் அதனால் பாதிப்படைந்திருக்கிறாள். இந்த நேரம் சுடருக்கு ஆதரவாக பேசினால் அனைவரின் கோபத்துக்கும் ஆளாக வேண்டும், அதே சமயம் இந்த நேரத்தில் அவனுக்கு சுடர் மீது ஏற்பட்டிருக்கும் நேசத்தை வெளியிலும் சொல்ல முடியாது. இப்படி ஒரு தர்ம சங்கடமான சூழ்நிலைக்கு தன்னை கொண்டு வந்து நிறுத்திய சுடரை நினைத்து மகிக்கு அந்த நேரம் கோபம் தான் வந்தது.
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
குருராஜனின் "எனக்கென ஏற்கனவே பிறந்தவன் இவனோ..." - காதல் கலந்த தொடர்கதை...
படிக்கத் தவறாதீர்கள்..
அதே சமயம் அவள் சொன்னால் என்பதற்காக, அதில் வரும் பின்விளைவுகளை பற்றி யோசிக்காமல் அவளுக்காக செய்துவிட்டு, அதன்பின் பிரச்சனை என்றதும் ஒதுங்க நினைத்து, அது வேறு இல்லாமல், சுடரையும் மாட்டிவிட்ட அமுதன் மீது அவனுக்கு அளவில்லாத கோபம் வந்தது.
எழில் கூப்பிட்டதை கூட பொருட்படுத்தாமல், மகியின் முன் நின்றவள், “மகிழ் நான் செஞ்சது தப்பு தான், ஆனால் அது தப்புன்னு தெரியாம தான் செஞ்சேன்.. ஆனா அது கூட உன்னை எங்க மிஸ் பண்ணிடுவேனோன்னு பயந்து தான் செஞ்சேன் மகிழ்.. நீயாவது என்னை புரிஞ்சிக்க ப்ளீஸ்.. நீ என்னை வெறுத்துடாத..” என்று அவன் முன் மன்றாட,
அந்த வீட்டின் ஒரே ஆண் வாரிசான அவன், வீட்டில் ஒரு பிரச்சனை என்று இருக்கும் போது அவன் மட்டும் சுயநலமாக நடந்துக் கொள்ள முடியுமா? அவன் என்ன பதில் சொல்லப் போகிறான் என்று அனைவரும் அவனையே பார்த்திருக்க,
“உனக்கு என்மேல காதல் இருக்குன்னு இஷ்டத்துக்கு என்னேன்னவோ செஞ்சுட்ட.. ஆனா அதே சமயம் என்னோட மனசுல என்ன இருக்குன்னு நீ தெரிஞ்சிக்கிட்டு தானே நடந்திருக்கணும்..” என்ற அவன் வார்த்தையே,
“நான் உன்னை காதலிக்கவில்லை என்பது போல் அர்த்தம் ஆவதால், அதை சுடர் புரிந்துக் கொண்டளோ இல்லையோ, அதை உணர்ந்துக் கொண்ட எழில், “வா சுடர்..” என்று அனைவரிடமும் செல்வதாக சொல்லிக் கொள்ளாமல் அவளை இழுத்துச் சென்றாள்.