அங்கே புகழேந்தி வீட்டிலோ மகள் வாழ்க்கை பாழாகிவிட்டதே, அவளை யார் திருமணம் செய்து கொள்வார்கள் என்பது போல் கலை எப்போதும் அழுதுக் கொண்டே இருக்க, அவளை எப்படி தேற்றுவது என்று யாருக்கும் தெரியவில்லை.
அருளும் ஒரு ஆழ்ந்த அமைதியோடு உலாவிக் கொண்டிருந்தாள். சிறிது நாட்கள் இங்கு இருக்க வந்த இலக்கியா ஊருக்கு கிளம்ப இருக்க, அருள்மொழியையும் உடன் அழைத்தாள். ஆனால் அவள் இங்கேயே இருந்து கொள்வதாக கூறி அவளை மட்டும் அனுப்பினாள்.
சுடரை நினைத்தும் சுடருக்காக பேசிய எழிலை நினைத்தும் யோசித்த பாட்டி, கலையின் வேதனையை முன்னிருத்தி இந்த முறை மகி தான் அருளை திருமணம் செய்ய வேண்டும், இல்லையென்றால் அருளை நினைத்து கலை வேதனையோடு தான் இருப்பாள் என்று புகழேந்தியிடம் பேசி பேசி அவர் மனதை மாற்றினார்.
கலையும் தன் மகளின் எதிர்காலத்தை குறித்த கவலையில் இந்த முடிவுக்கு சம்மதம் கூறினார். புகழேந்தி எப்போதும் போல இருவரின் சம்மதத்தை கேட்க, ஒருப்பக்கம் வீட்டினர் எடுத்த முடிவு தான் என் முடிவு என்பது போல மகியை திருமணம் செய்ய அருள் சம்மதம் சொன்னாலும், இன்னொருப்பக்கம் சுடர், அமுதன் மீது ஏற்பட்ட கோபமும் அவள் சம்மதம் சொன்னதற்கு அவளை அறியாமலே ஒரு காரணமாக அமைந்தது.
அருளின் எதிர்காலம், கலையின் வேதனை என்று மகியிடம் சொல்லி அவன் சம்மதத்தை கேட்டால் அவன் என்ன சொல்வான்.. இந்த சூழ்நிலையில் சுடரின் மீது இருக்கும் நேசத்தை சொல்லவும் முடியாததால் ஒருவிதத்தில் அவள் மீது கோபமும், இன்னொருபுறம் அவளை சேர முடியாத கவலையுமாக அருளை திருமணம் செய்ய சம்மதித்தான்.
பாட்டியின் பேச்சால் கதிரவனும் எழிலும் அதன்பின் வீட்டுக்கு வரவுமில்லை. வீட்டில் யாரோடும் பேசவுமில்லை. எனவே பாட்டியே இருவரிடம் தொலைபேசி வழியாக பேசி, கதிரவனிடம் மன்னிப்பு கேட்டு, அவர்களிடம் மகி, அருள் திருமணம் முடிவாகிவிட்டதையும் நிச்சயத்திற்கு தேதி குறித்ததையும் சொல்லி அவர்களை அழைத்தார். அவர்களும் வர சம்மதித்தனர்.
அந்த நாளுக்கு பிறகு அறையிலேயே அடைந்து கிடந்த சுடர் மகிக்கு மட்டும் அவ்வபோது அலைபேசியில் தொடர்புக் கொண்டாள். ஆனால் அவன் அவளது அழைப்பை ஏற்கவில்லை. முதலில் கோபத்தில் ஏற்காதவன், அடுத்து அருளை திருமணம் செய்ய ஒத்துக் கொண்டதால்.குற்ற உணர்வில் ஏற்காமல் இருந்தான்.
எழிலும் சுடரிடம் அவர்களின் திருமண நிச்சயத்தை பற்றி சொல்லாமல் மறைத்திருந்தாள். ஆனால் புவி மூலமாக நிச்சயத்தன்று காலையில் தான் அவளுக்கு அந்த விஷயம் தெரிய வந்து, அதை ஏற்றுக் கொள்ள முடியாதவளாக, எழிலிடம் மகிக்கு அவளை திருமணம் செய்து வைக்கும்படி கெஞ்சினாள்.
ஆனால் எழிலால் ஒன்றும் செய்ய முடியாது என்ற நிலைமையில் சுடர் மகியை மறக்க வேண்டுமென்று சொல்ல, அது முடியாதவளாக,
“மகிழ் எனக்கு தான், மகிழை நான் தான் கல்யாணம் செஞ்சுக்கணும்.. வேற யாருக்கும் மகிழை விட்டுத்தரமாட்டேன்..” என்று சுடர் உணர்ச்சிவசப்பட்டு பேசினாள்.
அருள்மொழிக்கு நல்லப்படியாக திருமணம் முடிந்தால், அப்போது மகிக்கு சுடரை திருமணம் செய்து கொடுப்பது பற்றி தன் அண்ணனிடம் பேசலாம் என்று எழில் ஏற்கனவே நினைத்திருந்தாள். இதில் சுடர் செய்த காரியத்தால் எல்லாம் கைமீறி போனது.
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
மஹாவின் "எனதுயிரே..." - காதல் கலந்த தொடர்கதை...
படிக்கத் தவறாதீர்கள்..
இப்போது உணர்ச்சிவசப்பட்டு திரும்பவும் மகி வேண்டுமென்று சுடர் ஏதாவது செய்யப் பார்ப்பாளோ என பயந்த எழில்,
“இதுக்கு தான் நீ லண்டனில் இருந்து வந்தீயா? எல்லாம் எதிர்த்தும் உன்னை கூட்டிட்டு வந்ததுக்கு எனக்கு எல்லோரிடமும் கெட்டப் பேர் வாங்கிக் கொடுக்கப் போறீயா? இப்படியெல்லாம் எனக்கு கஷ்டத்தை கொடுக்கிறதுக்கு நீ லண்டனுக்கே போய்விடு..” என்று எழில் கோபமாக பேசிவிட்டு நிச்சயத்திற்கு கிளம்ப, அந்த நொடி சுடரும் போய்விட முடிவெடுத்தாள். ஆனால் நாட்டை விட்டு அல்ல, இந்த உலகத்தை விட்டே..
அதன்பிறகு என்னென்னவோ நடந்து, கடைசியில் மகி சுடர் கழுத்தில் அவளது அனுமதி கேட்காமல் கூட தாலியை கட்டிவிட்டான். கண்டிப்பாக இதை சரியென்று நியாயப்படுத்த முடியாது.
ஒருப்பக்கம் அவள் மீது உள்ள கோபத்தில் அருள்மொழியை திருமணம் செய்ய ஒத்துக் கொண்டவன், இன்னொருப்பக்கம் சுடருக்கு தாலிக்கட்டி இப்படி அவன் குடும்பத்தில் உள்ளவர்கள் அவளை வெறுக்கும் நிலையை உருவாக்கி, கிட்டத்தட்ட இரண்டு பெண்களுக்கு தீங்கு செய்துவிட்டான்.
சுடரொளியை அணைத்தப்படி இதையெல்லாம் சிந்தித்துக் கொண்டிருந்தவன், இனியாவது பிரச்சனைகளை சரிப்படுத்தும் முயற்சியில் இறங்க வேண்டும் என்று முடிவெடுத்தவனாக உறங்க தயாரானான்.