‘எனக்காக அவள் இருக்கிறாள்!’
உயிர் பிரியும் நேரத்தில், தனக்காகவும் ஓருயிர் துடிக்கிறது என்பதே பெரும் சாதனை எனயெண்ணி, காதலனாக பூரித்தான் சங்கர். மறுபுறமோ சுமித்ராவை சூழ்ந்திருக்கும் மரணத்திலிருந்து அவளை அப்புறபடுத்திடும் காவலனாக, தன்னிடமிருந்து அவளை தள்ளி நிறுத்த முயன்றான்.
கடலலைகளின் ஆரவாரம், வானத்தின் இடிமுழக்கம், திரையின் உட்பொருட்களின் கிறீச்சிடு, மக்களின் அபயக் குரலென அனைத்தும் போட்டியிட்டதில் இவன் வார்த்தைகள் அவள் செவியை எட்டாமல் தோற்றது. ஆயினும் அவனுடைய துடிப்பும் கலக்கமும் கையசைவும் புரியாமல் போகுமோ சுமித்ராவுக்கு! புரியதான் செய்தது! உயிர்த்துடிக்கும் தருணம்..தன்னவன் இன்னுயிர் பிரிவதை பார்க்கவிருக்கும் அவலம்! எல்லாம் முடிந்துவிட்டது என்று பாலைவனத்தின் கடைசி நீர்த்துளியாக நம்பிக்கை காய்ந்து போன போது நிகழ்ந்தது அந்த அதிசயம். சுமித்ராவின் கண்கள் வியப்பில் விரிய, கால்களின் ஓட்டத்தோடு சேர்ந்து இருதய துடிப்பும் சில கணங்கள் உறைந்து போயின.
சுமித்ராவிடம் தெரிந்த மாற்றத்தில், கால்கள் ஓட்டத்தை தொடர்ந்தாலும் சங்கர் தலையை மட்டும் திருப்பி தனக்கு பின்னால் நடப்பதை ஆராய்ந்தான். சரிந்து கொண்டிருந்த திரையும் அதன் தூண்களும் கொஞ்சம் கொஞ்சமாக நிமிர தொடங்கியிருந்தன.
சற்று நேரத்திற்கெல்லாம் மக்களிடையே ஆச்சரிய குரல்களும், ஆரவாரமும், மகிழ்ச்சியை வெளிப்படுத்திய ஆட்டமாக சிலரும், வேறு சிலரோ திரைக்குப் பின்னால் நடக்கும் அதிசயத்தை தெரிந்துகொள்ளும் ஆவலோடு திரையின் மறுபுறமாக நகரத் துவங்கி இருந்தனர்.
மக்களின் அண்ணாந்த பார்வையனைத்தும் வேகனிடத்தில் மையம் பெற்றிருந்தன.
உடலின் பாகுத்தன்மையின் துணை கொண்டு, மாருதன், திரையை தன்னோடு ஒட்டி இருந்தான். பலமனைத்தையும் ஒன்று திரட்டி பறக்க முயன்றான். திரையும் தூண்களும் அவன் இழுப்புக்கு சென்றன. விளைவாக சிறிது சிறிதாக திரை நிமிர்ந்து கொண்டிருந்தது.
திடீரென யாருமே எதிர்பார்க்காத வகையில் மாருதனின் உடல் திரையிலிருந்து பிரிந்திட, இமைக்கும் நொடியில் அவனுருவம் மறைந்திருந்தது.
“ஹோ.....” என்ற சிலரின் கைநழுவி போன வாய்ப்புக்கான எதிரொலி.
“எங்க? மாருதன் எங்க?” ஆச்சரிய குரல்கள் பல.
மறுபடியும் திரை நிலத்தை நோக்கி சரிந்தது.
“அய்யோ....”
“காப்பாத்துங்க!”
“என் குழந்தையை காணோமே...”
“அம்மா....” குழந்தைகளின் அழுகுரலென,
திரைக்கடியிலிருந்து இன்னமும் முழுதாக நகராதிருந்தவர்களின் அபயக்குரல்கள் முழுமை பெறும் முன்னரே, மின்னல் வேகத்தில் திரும்பியிருந்தான் மாருதன். அந்த வேகத்தில் அவன் வந்த திசையைக் கூட யாராலும் கணிக்க முடியாமல் போயிருந்தது.
மக்களிடையில் சற்று முன் மடிந்திருந்த உற்சாகம் உயிர்த்தெழுந்தது.
இதுவரை வேகனின் செயலை, ‘அவன் சக்திக்கு, இது மிகச் சாதாரணம்’ நினைத்திருந்த எல்லோரும் நடந்துவிட்ட அசம்பாவிதத்தில், கவனமாக அவன் செயலை கூர்ந்தனர்.
பொதுவான பாகு போலல்லாது அவனுடலின் பாகு வேறுபட்டிருந்தது. பார்வைக்கு இரண்டும் ஒன்று போல் தோற்றம் பெற்றிருந்தாலும், இந்த பாகோடு எதுவும் சுலபமாக ஒட்டிக்கொள்ளாது.
அடிக்கும் காற்றினால் கிளம்பியிருந்த தூசியும் கடற்கரையின் மணலும் கூட அவனுடலில் படியவில்லையே என்பது இப்போது தான் யோசிக்க வைத்தது.
பிறகெப்படி திரை மட்டும் வேகனின் உடலோடு ஒட்டிக்கொண்டது?!
அவன் நினைத்தால் மட்டுமே உடலின் பாகானாது மற்ற பொருளை தன்னோடு சேர்த்துகொள்ள முடியும்.
மாருதனின் கவனம் பறப்பதில் திரும்பிய அந்த கணத்தில், பாகு இயல்பு நிலைக்கு திரும்பிவிட திரையிலிருந்து பிரிந்து கொண்டது. வலிமையனைத்தையும் அவன் உபயோகித்திருக்க, அதிவேகத்தில் வெகு தூரம் பறந்திருந்தான். அது பார்த்திருந்தவருக்கு மாருதன் மறைந்ததாகவே தோன்றியது.
மறுபடியும் திரையோடு ஒட்டிக்கொண்டு, வலிமையை ஒன்று திரட்டி பறக்க முயன்றான்.
அப்போது அமைதியாக அவனை வேடிக்கை பார்த்திருந்த மக்கள்,
“அப்படிதான்.... இன்னும் கொஞ்சம்”
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
ராசுவின் "நீயிருந்தால் நானிருப்பேன்" - காதல் கலந்த தொடர்கதை...
படிக்கத் தவறாதீர்கள்..
“சரியா போயிட்டு இருக்கு மாருதா! இன்னும் கொஞ்சம்...”
“உன்னால முடியும்!”
மக்களின் ஊக்கம் அவனை உற்சாகத்தோடு செயல்படத் தூண்டியது.
இடியால் நடந்துவிட்டிருந்த துரதிர்ஷ்டத்திலும், அதிர்ஷ்ட வசமாக திரை இன்னமும் தூணோடு பிணைந்திருந்தது.
அவனோடு திரையும் அதோடு தூண்களும் நிமிர்ந்து கொள்ள, எண்ணற்ற உயிர்களை மரணத்தின் பிடியிலிருந்து மீட்டெடுத்தான் நகரத்து நாயகன்.