(Reading time: 22 - 43 minutes)

எங்கே திரும்ப அவளை கட்டாயப்படுத்திகிறோமோ என்று மனதில் இருந்த உறுத்தல் மறைந்து கலை நிறைவாக உணர்ந்தார். மற்றவர்களுமே அவர்களின் நிச்சயதார்த்தம் நடந்த  அன்றைய தினத்தை விட இன்று தான் அதிகம் மகிழ்ந்தனர். ஆனந்தி ஒருபடி மேலே சென்று இருவரையும் கட்டி அணைத்து கன்னத்தில் முத்தமிட்டு தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

இவர்களுக்கே இப்படி என்றால், அருள் திருமணத்திற்கு சம்மதித்ததிலிருந்தே குற்ற உணர்வில் தவித்த மகி இப்போது எவ்வளவு நிம்மதியடைந்தான் என்று அவனுக்கே தெரியாது. மனம் முழுவதும் மகிழ்ச்சியில் நிறைந்திருக்க, ஒரு ஓரமாய் அவனுமே சுடரிடம் இன்னும் தன் மனதை முழுமையாக சொல்லாததை நினைவு கூர்ந்தான். விரைவிலேயே சுடரிடம் தன் காதலை சொல்லிவிட துடித்தான்.

மகி சுடரை நினைத்துக் கொண்ட அந்த நேரம், அருளை சுற்றி இருந்த கூட்டத்தை பார்த்த அமுதனுக்கு, எல்லாம் நல்லப்படியாக நடந்திருந்தால், இன்று சுடர் அவன் அருகில் நின்று இதே போல் மகிழ்ச்சியடைந்திருப்பாள் என்று நினைத்து பார்க்காமல் இருக்க முடியவில்லை.

பின் அனைவரும் விருந்து சாப்பிட ஆரம்பிக்க, அத்தனை பேர் முன்பும் இப்படி ஒரு யோசனை கூறிய இலக்கியாவிற்கும், அதை கூட இருந்து நிறைவேற்றிக் கொடுத்த மகி, அறிவுக்கும் அமுதன் நன்றி கூறினான். அவன் செய்ததையெல்லாம் மறந்து அவனுக்கு அவர்கள் உதவி செய்ததில் அவன் நெகிழ்ச்சியாக உணரவும்,

“இப்போ இந்த நேரம் நீ அருளை காதலிச்சு தான் கல்யாணம் செஞ்சுக்கப் போற.. அதனால் பழைசையெல்லாம் மறந்திடு.. நாங்களும் மறந்துட்டோம்..” என்று மகி கூற, அதை மற்றவர்களும் ஆமோதித்தனர்.

அடுத்து அனைவரும் கிளம்பும் நேரம் வந்ததும், அமுதன் அருளை அழைத்துக் கொண்டு கலையரசி முன்பு சென்று நின்றவன்,

“ஆன்ட்டி இந்த நாள் எங்க ரெண்டுப்பேருக்கும் எவ்வளவு ஸ்பெஷல்னு உங்களுக்கே தெரியும்.. கொஞ்ச நேரமாவது ரெண்டுப்பேரும் தனியா பேசணும்னு நான் இங்க வந்த நாளிலிருந்து எதிர்பார்த்துட்டு இருக்கேன் ஆன்ட்டி.. ஜஸ்ட் ஒரு அரைமணி நேரம் தான் மொழியை நான் கூட்டிட்டு போகட்டுமா? கொஞ்ச நேரம் பேச தான் ஆன்ட்டி.. “ என்று கேட்டான்.

இந்த மகிழ்ச்சியான தருணத்தில் கலையால் அதை மறுக்க முடியவில்லை. “சரி போயிட்டு வாங்க.. ஆனா மணி இப்பவே எட்டாகப் போகுது.. அதனால் கொஞ்ச நேரத்திலேயே அவளை கூட்டிட்டு வந்து விட்ருங்க..” என்று சொல்ல,

தன் அன்னையின் முன் நின்று வெளியில் கூட்டிச் செல்ல அவன் அனுமதி கேட்பான் என்று எதிர்பார்க்காத அருள் அன்னையின் சம்மதித்ததில் மகிழ்ச்சி அடைந்தாள். இருந்தும் தயக்கத்தோடு, “அம்மா..” என்று அவள் இழுக்க,

“உங்க ரெண்டுப்பேர் மேலேயும் எனக்கு நம்பிக்கை இருக்கு.. அதான் போயிட்டு வாங்கன்னு சொல்றேன்..” என்றதும் முகத்தில் மகிழ்ச்சியை காட்டியப்படியே தலையசைத்தாள்.

அமுதன் கலையிடம் அனுமதி கேட்டதை பார்த்துக் கொண்டிருந்த ஆனந்தி, “அமுதா அம்மாக்கிட்டேயும் பர்மிஷன் கேக்கணும்னு உனக்கு தோனலையாடா..” என்று கேலியாக கேட்க,

“என் ஸ்வீட் அம்மா இதுக்கெல்லாம் நோ சொல்ல மாட்டாங்கன்னு எனக்கு தெரியுமே..” என்று அவர் கன்னத்தை கிள்ளி முத்தமிட்டு கூற,

“போடா..” என்று அவர் சிரித்துக் கொண்டார்.

“ஆன்ட்டி அப்போ நாங்க போகட்டுமா?” என்று அருள் ஆனந்தியிடம் அனுமதி கேட்க,

“தாராளமா போயிட்டு வாங்க..” என்று அனுமதி அளித்தார்.

அமுதன் அருளை அழைத்துக் கொண்டு சென்றதால், ஆனந்தியை வீட்டில் கொண்டு போய் விடும் பொறுப்பை கதிரவனும் எழிலும் ஏற்றுக் கொண்டனர்.

அவர்களின் மகன் தமிழ் புகழேந்தி வீட்டில் இரவு தங்கப் போவதாக கூற, மூவர் மட்டும் கதிரவனின் காரில் ஆனந்தியின் வீட்டை நோக்கி புறப்பட்டனர்.

முதன் அருள்மொழியை நேராக கடற்கரைக்கு கூட்டிச் சென்றான். அது தேய்பிறை காலம் என்பதால் 8.30 மணிக்கே நடுநிசி போல் இருந்தது. வெயில் தணிந்திருந்ததால் சில்லென்ற காற்று வீச, அங்கங்கே ஒன்று இரண்டு பேர் அமர்ந்திருக்க, இருவரும் கடற்கரை மணலில் நடந்தார்கள்.

“இப்போ நீ சந்தோஷமா இருக்கியா அருள்..”

“ம்ம் இதை தான் நான் எதிர்பார்த்திருக்கேன் போல.. இதுநாள் வரை என்னோட மனசுல நிறைய குழப்பம் இருந்துச்சு.. ஆனா இப்போ தான் தெளிவா இருக்கேன்.. உங்களோட இந்த ஏற்பாடை பார்த்து அசந்து போயிட்டேன்.. இன்னைக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கேன்..”

“இதுக்கெல்லாம் இலக்கியாவுக்கு எத்தனை முறை நன்றி சொன்னாலும் பத்தாது.. அன்னைக்கு நீ கோபமா பேசினப்போ எனக்கு ஒன்னும் புரியல.. இலக்கியா மட்டும் உன்னோட நிலையை எனக்கு புரிய வைக்கலன்னா, உனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்லை போலன்னு ரொம்ப ஃபீல் பண்ணியிருப்பேன்.. மனசளவுல உடைஞ்சும் போயிருப்பேன்..”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

பத்மினியின் "உன்னை விட மாட்டேன் என்னுயிரே..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

“சாரி அன்னைக்கு உங்களை ரொம்பவே கஷ்டப்படுத்தறது போல பேசிட்டேன்.. ஆனா உங்களை நான் எவ்வளவு காதலிக்கிறேன்னு இன்னைக்கு தான் புரிஞ்சிக்கிட்டேன்.. இந்த நேரம் நீங்களும் சந்தோஷமா தானே இருக்கீங்க.. இல்லை நான் அன்னைக்கு பேசினதை நினைச்சு இன்னும் வருத்தமா இருக்கீங்களா?”

“எனக்கு எந்த வருத்தமும் இல்லை மொழி.. உனக்கு என்கிட்ட எல்லா உரிமையும் இருக்கு.. உன்னோட உணர்வுகளை அப்படியே என்கிட்ட நீ காட்டலாம்.. அதை நான் தப்பா எடுத்துக்க மாட்டேன்.. புரிஞ்சிக்க தான் முயற்சி செய்வேன்..

ஆனா அன்னைக்கு நீ சுடர்க்கிட்ட பேசினது தான் எனக்கு இன்னும் வருத்தமா இருக்கு..” என்றதும் நடந்துக் கொண்டிருந்தவள், அப்படியே நின்றுவிட்டாள்.

அன்று சுடரை கொஞ்சம் அதிகப்படியாக தான் அவள் பேசிவிட்டாள். ஆனால் அதற்காக அவள் வருத்தபடவில்லை. என்னவோ சுடரை ஆரம்பித்திலிருந்தே அவளுக்கு பிடிக்கவில்லை, விலகியே இருந்தாள். ஆனால் சுடர் மகியை திருமணம் செய்துக் கொள்ள அவளை வைத்து திட்டம் தீட்டியதில் அவளுக்கு சுடர் மீது இன்னும் அதிகமாக கோபம் வந்தது.

இப்போது அமுதன் மீது இருக்கும் கோபம் குறைந்திருந்தாலும், சுடர் மீது இருக்கும் கோபம் அவளுக்கு போகவில்லை, இவள் வாழ்க்கையை தீர்மானிக்க சுடர் யார்? எதற்காக இப்படியெல்லாம் அவள் செய்ய வேண்டும், இன்று பிரச்சனை சுமூகமானது சரி தான், ஆனால் வேறு மாதிரி ஏதும் விபரீதம் நிகழ்ந்தால், இவள் எதிர்காலம் என்னாவாது? என்ற கேள்வி அருள் மனதில் இருக்க, அதை அப்படியே அமுதனிடம் அவள் கேட்டாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.