“கண்டிப்பா உனக்கு கெட்டது செய்யணும்னு சுடர் அப்படி செய்யல மொழி.. அவ மகியை கல்யாணம் செஞ்சுக்கணும்.. அதான் அப்படி யோசிச்சா.. அது கூட தனக்கு விருப்பமானதை அடைய என்ன வேணும்னாலும் செய்யும் திமிர் சுடருக்கு கிடையாது.. மகி எங்க அவளுக்கு கிடைக்காம போயிடுவானோன்னு பயம் தான் அவளுக்கு,
இங்க வந்து உங்கக் கூட சாதாரணமாக இருந்தவக்கிட்ட மகி உன்னை காதலிக்கிறான்.. நீ மட்டும் மகியை கல்யாணம் செஞ்சுக்கிட்டா உனக்கு அழகான குடும்பம் கிடைக்கும், உன்னோட அப்பா எப்போதும் உன்னோட பக்கத்தில் இருப்பாருன்னு நான் தான் அவளுக்கு ஆசைக் காட்டினேன்.. அதான் அவளுக்கு உதவணும்னு நானும் இப்படி செஞ்சுட்டேன்.. ஆனா நான் கூட அவளுக்கு கடைசி வரை சப்போர்ட்டா இல்லாம செல்ஃபிஷா நடந்துக்கிட்டதுக்கு ரொம்பவே வருத்தப்படுகிறேன்..
உனக்கு தெரியாது மொழி, சுடர் லண்டனுக்கு போய் வசதி வாய்ப்போட ரொம்ப சந்தோஷமா வாழ்ந்திருக்கான்னு தான் நீங்கல்லாம் நினைச்சிருப்பீங்க.. ஆனா அது உண்மை கிடையாது.. எனக்கு சுடரை சின்ன வயசில் இருந்தே தெரியும், அவள் எத்தனை கஷ்டம் பட்ருக்கான்னு உனக்கு சொன்னா தான் புரியும்.. இப்படி உட்காரு உனக்கு எல்லாம் சொல்றேன்..” என்று சொல்லி அவளோடு மணலில் அமர்ந்தான்.
ஆனந்தியை வாசலிலேயே இறக்கிவிட்டு அப்படியே கிளம்ப இருந்த கதிரவனை நிறுத்தி, “வந்தா காலில் சக்கரம் கட்டினது போலவே ஓட்றது.. நைட் டின்னர் கொஞ்சம் அதிகமா சாப்பிட்டேன் போல, அதான் மசாலா டீ குடிக்கப் போறேன்.. நீங்களும் எனக்கு கம்பெனி கொடுங்க..” என்று இருவரையும் வீட்டுக்குள் அழைத்துச் சென்றார்.
“நீங்க மட்டும் தனியாவா டீ போடப் போறீங்க.. இருங்க நானும் வரேன் என்று சொல்லி எழிலும் ஆனந்தியுடன் சமையலறைக்குச் செல்ல, சும்மா அமர்ந்துக் கொண்டிருக்க ஒருமாதிரி இருந்ததால், கதிர் எழுந்து அந்த வீட்டை ஒரு பார்வை பார்த்துக் கொண்டு வந்தார்.
ஆனந்திக்கு ஓவியங்களில் ஆர்வம் உண்டு என்பதால், நிறைய ஓவியங்களை வாங்கி சுவற்றில் மாட்டி வைத்திருக்க, அதையெல்லாம் பார்த்தவர், இன்னும் மாட்டாத சில ஓவியங்கள் அங்கு சுவரோடு சேர்ந்த அலமாரியில் இருக்கவும் அதையும் எடுத்து பார்த்துக் கொண்டிருந்தவர், ஒரு படத்தை பார்த்து கண்களில் வியப்பைக் காட்ட,
அந்த நேரம் மசாலா டீயோடு ஆனந்தியும் எழிலும் வர, “ஆனந்தி காலேஜ் டேஸ்ல ஓவியம் வரையறோம்ங்கிற பேர்ல நிறையவே கொடுமைப் படுத்தியிருக்கோம்.. ஆனா நீ எப்போ இவ்வளவு அழகா வரைய கத்துக்கிட்ட.. என்னை அப்படியே அச்சு அசலா வரைஞ்சிருக்க..” என்று அவரின் உருவம் ஓவியமாய் வரையப்பட்டிருந்ததை எடுத்துக் காட்ட,
அவரின் அருகில் வந்த எழில் அந்த ஓவியத்தை வாங்கிப் பார்த்து, “அட அச்சு அசலா இவரே தான்.. நீங்களா இவ்வளவு சூப்பரா வரைஞ்சது..” என்று வியப்பாய் கேட்டாள்.
“இந்தா டீ..” என்று கோப்பையை கதிர் கையில் கொடுத்த ஆனந்தி,
“நான் உன்னை ஓவியமா வரைஞ்சதை பார்த்தா அடுத்த நிமிஷமே உயிரை விட்றுவ கதிர்.. இது நான் வரைஞ்சது கிடையாது..” என்று கூறினார்.
“நீ வரையலையா? அப்போ யாரு இவ்வளவு அழகா என்னை வரைஞ்சது..” என்று கதிர் கேட்டார்.
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
சித்ராவின் "சுஷ்ருதா..." - வித்தியாசமான காதல் தொடர்கதை...
படிக்கத் தவறாதீர்கள்..
“இந்த ஓவியத்தை வரைஞ்சது வேற யாரும் இல்லை.. இதை வரைஞ்சது உன்னோட பொண்ணு சுடரொளி தான்.. அதுவும் இதை எப்போ வரைஞ்சா தெரியுமா? இந்தியா வந்து உன்னை பார்க்கிறதுக்கு முன்னாடியே, அவ தான் உன்னோட பொண்ணுன்னு எனக்கு தெரியறதுக்கு முன்னாடியே, சொல்லப்போனா இந்த ஓவியத்தை பார்த்து தான் நான் சுடர் உன்னோட பொண்ணுன்னே தெரிஞ்சிக்கிட்டேன்..” என்ற ஆனந்தியின் பேச்சை கதிர் நம்பமுடியாமல் பார்த்தார்.
இந்த ஓவியத்தை அவள் எதற்காக வரைந்தாள் என்பதை விளக்கமாக சொன்ன ஆனந்தி, “முதல்முறை உன்னோட பொண்ணை பார்த்ததா உனக்கு போன் செஞ்சேனே.. அப்போ சுடரும் என்கூட தான் இருந்தா.. போனை ஸ்பீக்கரில் தான் போட்டிருந்தேன்.. உன்கிட்ட அவளை பார்த்ததை சந்தோஷமா சொன்னப்போ, நீ அப்படி ஒரு உறவே எனக்கில்லைன்னு சொன்னப்போ சுடர் எப்படி துடிச்சு போனா தெரியுமா? அதுக்குப்பிறகு உன்கிட்ட அவளைப் பத்தி பேசவே கூடாதுன்னு என்கிட்ட சத்தியம் வாங்கிட்டா..
வெண்மதி மட்டும் சாகலன்னா நானும் உன்கிட்ட அதுக்குப்பிறகு அவளை பத்தி பேசாமலே இருந்திருப்பேன்.. இப்போதும் நீ இந்த ஓவியத்தை பார்க்கலன்னா இதெல்லாம் உன்கிட்ட சொல்லியிருக்க மாட்டேன்..
இந்த ஒரு ஓவியம் மட்டுமில்ல, இதுபோல உன்னை நிறைய வரைஞ்சு வச்சிருக்கா தெரியுமா? உன்னை விட்டு பிரிஞ்சதுல இருந்து உன்னையே நினைச்சுக்கிட்டு தான் இருந்திருக்கா.. இதெல்லாம் உன்கிட்ட சொல்லிக்கிட்டு இருக்கேன் பாரு.. அவளை நீ புரிஞ்சிக்கிட்டிருந்தா நீ ஏன் இப்படி இருக்கப் போற.. அவளை இங்க அனுப்பி தப்பு பண்ணிட்டேனோன்னு மனசுக்குள்ள உறுத்தலா இருக்கும்.. ஏதோ எழில், மகி இருக்கிறதால தான் அவ கொஞ்சமாவது சிரிச்சிக்கிட்டு இருக்கா.. ஆனா கூட அவளுக்குள்ள ஏதோ சோகம் இருக்கிறது போலவே எனக்கு தோனுது..” என்று ஆனந்தி கூற,
“ஆமாம் ஆனந்தி அமுதன் அருள் நிச்சயத்துல இருந்தே சுடர் ஒருமாதிரி இருக்கா.. என்னன்னு கேட்டா ஒன்னுமில்லன்னு சொல்றா..” என்று எழிலும் கூற, கதிர் ஏதோ யோசனையாகவே இருந்தார்.