தொடர்கதை - இதயச் சிறையில் ஆயுள் கைதி - 25 - சுபஸ்ரீ
“சுவாதி நீ கொலை செய்யலைமா . . கவலைப்படாத” என ராமமூர்த்தி ஆறுதல் அளித்தாலும் அவரின் அடுத்த வார்த்தைகள் ஆகாஷ் சாரு சுவாதி மூவரையும் குழப்பதான் செய்தன.
“அப்ப இது துரையோட லீலையா?” ஆகாஷ் சந்தேகமாக கேட்க
அதுவே என்பதைப் போல தலையசைத்த அவன் அப்பா “சுவாதி அந்த ஆளை கீழ தள்ளின இடம் பாதாளம் இல்ல . . ரெண்டு ஆள் நிக்கும் அளவு இடம் இருக்கு . . அதுவுமில்லாம சுவாதியோட உடல் வலிமையும் கணக்குல எடுத்துகணும். சுவாதி அவனை தள்ளின அடுத்த நொடி துரை ஆளுங்க அவனைப் பிடிச்சிக் கொன்னுட்டாங்க”
“இதுக்கு பூரூப் இருந்தா நல்லா இருக்குமே” என சிந்தனை வசப்பட்டவனாய் பேசினான்.
“இருக்கு . . . அதை பத்ரிநாத் வீடியோ எடுத்திருக்கார்”
“வாவ் . .இது போதும்” . . என்ற ஆகாஷ் மீண்டும் “ பத்ரிநாத் அங்கிள் அந்த டைம்ல எப்படி அங்க கரெக்டா போனாரு?” என தன் தந்தையை ஆழ்ந்து நோக்கினான்.
“சுவாதிக்கு துணையா அவரு இங்கதான் எப்பவும் இருப்பாரு”.
இதைக் கேட்ட சுவாதி ஆச்சரியமாய் அவரை பார்த்தாள். செல்வன் அவசரப்படாமல் பொறுமையாக இருந்திருக்கலாம் என அவளாள் நினைக்காலும் இருக்க முடியவில்லை.
“அந்த தங்க ஊசி பத்தி அவங்களுக்கு தெரிஞ்சிருக்குமா?” சாரு கேட்க. .
“இல்ல அதுக்கு வாய்ப்பு இல்ல” என்றார் தீர்மானமாக ராமமூர்த்தி.
ஆகாஷ் கட்டளைப்படி சாரு மீண்டும் ஆசிரமத்திற்கு மற்றும் ஒர் புதிய அவதாரத்தில் சென்றுவிட்டாள். அடுத்து ஆகாஷ் அவன் அப்பா மற்றும் சுவாதி வேறொரு இடத்திற்கு பயணப்பட்டனர்கள்.
மலைபாங்கான இடங்களை கடந்து அவர்கள் சென்றனர். அங்கே ஓர் அருவி தென்பட்டது. மலையில் இருந்து விழும் அருவிக்கும் மலைக்கும் இடையே சிறிய இடம். அதன் நடுவே செல்ல செல்ல ஒரு குகை தென்பட்டது. அங்கேதான் உண்மையான சுவாமிஜி இருந்தார்.
சுவாமிஜியின் ஐந்து சீடர்களும் அங்கு பணிவிடைச் செய்துக் கொண்டிருந்தனர். சுவாமிஜியைப் போல வேடமிட்ட இளைஞன் ஆசிரமத்தில் சுவாமிஜியைப் போலவே வலம் வந்துக் கொண்டிருந்தான்.
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
சசிரேகாவின் "காணும் இடமெல்லாம் நீயே..." - காதல் கலந்த தொடர்கதை...
படிக்கத் தவறாதீர்கள்..
ஆகாஷ் அவன் சகாக்களுடன் உள்ளே சென்றான். அருவி நீரில் நனைந்தபடி உள்ளே செனறனர். மலை பாறைக்கும் கொட்டும் அருவிக்கும் இடையே கடந்து செல்வது புது அனுபவமாய் இருந்தது. அகலமான நீர் திரைக்கு பின்னே இவர்கள் இருந்தார்கள். ஒருவருக்கும் சந்தேகம் வராத இடம். அவர்கள் உள்ளே செல்ல அமைதியாய் இருந்த இடத்தில் கண்களை மூடியப்படி சுவாமிஜி தியானத்தில் இருந்தார்.
பத்ரிநாத் அங்கே ஏற்றப்பட்டிருந்த குத்துவிளக்கின் வெளிச்சத்தில் சில ஓலைச் சுவடிகளை வாசித்துக் கொண்டிருந்தார். அங்கே இருந்த அனைவருமே வேஷ்டியை பஞ்ச கச்சமாக அணிந்திருந்தனர். வெற்று மார்பில் அங்கவஸ்திரம்.
பத்ரிநாத் தான் இந்த இடத்தை தேர்ந்தெடுத்து சுவாமிஜியை வரவழைத்தார். ஆசிரமத்தில் சுவாமிஜிக்கு துரையின் ஆட்களால் ஆபத்து நேரலாம் என்பதால் இந்த ஏற்பாடு.
ஆசிரமத்தில் சுவாமிஜி இல்லாமல் போனால் வீண் பிரச்சனை மற்றும் சந்தேகம் எழும் என்பதால் அங்கே போலி சுவாமிஜி அமர்த்தப்பட்டார். அதுவுமில்லாமல் சுவாமிஜியின் மிக முக்கியமான பணியை ஆசிரமத்தில் இருந்தபடி செய்ய இயலாது.
அவர்களை பார்த்து பத்ரிநாத் வாருங்கள் என்பதாய் புன்னகைத்தார். சுவாமிஜி மெல்ல கண்களை திறந்து அவர்களை பார்க்க . . அடுத்த நொடியே ஆகாஷ் அவன் அப்பா மற்றும் சுவாதி சுவாமிஜியை நெடுஞ்சான்கிடையாக விழுந்து வணங்கினார்கள். அவரும் மனப்பூர்வமாய் ஆசிர்வதித்தார்.
“உங்கள் திட்டங்களும் நடவடிக்கையும் எப்படி போகுது?” சுவாமிஜி கேட்க
“சுவாமிஜி இதுவரை எல்லா சரியா போய்கிட்டு இருக்கு” ராமமூர்த்தி பதிலளித்தார்
“ இவர்களுக்கு தேவையானதை கொடுத்துவிடுங்கள் . . . ” என பத்ரிநாத்தை நோக்கி சுவாமிஜி கூற . . அவரும் சரியென தலையசைத்தார்.
“என்னால இதெல்லாம் சத்தியமா நம்பவே முடியல சுவாமிஜி . . இந்த நூற்றாண்டுலையும் இப்படியா?” என ராமமூர்த்தி ஆச்சரியம் மிகுதியாய் கூறினார்.
“காலம் எப்பவும் ஒரே மாதிரிதான் இருக்கு . . மனிதர்களோட பார்வைதான் மாறுப்படுது” என சுவாமிஜி அமைதியாய் பதிலளித்தார்.
“ஆகாஷ் இந்த வழியை தேர்ந்தெடுத்தான்னு கேள்விப்பட்டதும் முதல்ல வருத்தமா இருந்தது. இந்த காலத்துல இதெல்லா நடக்குமானு சந்தேகம் . .. ஒரு அப்பாவா அவன் தோல்வியை சந்திப்பானு நினைக்கவே கஷ்டமா கூட இருந்திச்சி. ஆனா . .” என அவர் பேசியபடி தன் மகனை பார்த்தார்.
ஆகாஷ் “கம்மான் டேட்” என அவரை கட்டிப்பிடித்தான்.
“இது சித்தர்கள் பூமி. இங்க தப்பா ஒரு போதும் நடக்காது. கவல வேண்டாம்” என சுவாமிஜி ஆசிர்வதித்தார்.
பத்ரிநாத் ஆகாஷிற்கு தேவையானவற்றைக் கொடுத்தார். அவர்கள் சுவாமிஜியிடம் விடைப் பெற்று கிளம்பினார்கள். மூவரும் அருவி வழியே முன் போல வெளியேறினார்கள்.