ஆனா அவ நிலைமை தான் இன்னும் மோசம் எல்லாத்தையும் மறந்துட்டு கல்யாணம் பண்ணினவனுக்கு உண்மையா இருக்கணும் தன்னால வாழ்க்கையை தொலைச்சவனை நினைச்சு நினைச்சு புழுங்கி சாகணும்.
அவளாள முடிஞ்சவரை போராடி பார்த்தா ஆனா சொந்த வீட்லயே அவ புரிஞ்சுக்க ஆள் இல்லாத அப்போ அவளும் தான் என்ன பண்ணுவா.இப்போ வரை என் அக்காவோட நிலைமை எனக்குத் தெரியும் ஆனா அவளா எதையும் வெளிக் காட்டினது இல்ல.
இப்படி ஒரு நிலைமை தான் எனக்கும் வரணும்னு நினைக்குறீங்களா ஆத்விக்.அவளாவது போராடினா,நான் எல்லாம் அவ்ளோ வொர்த் கூட கிடையாது.எங்கப்பா ஒரு பார்வை பார்த்தாலே அதுக்கு மேல என்னால எதுவும் பேச முடியாது.
அப்படியிருக்கும் போது உங்க மனசுல தேவையில்லாத ஆசையை வளர்த்துட்டு ஏமாத்தணுமா?சொல்லுங்க அதான் உங்களுக்கு இஷ்டமா?”,என்றவள் மீண்டும் அழத் தொடங்கியிருந்தாள்.
அனைத்தும் கேட்டவனுக்கு என்ன சமாதானம் கூற வேண்டும் என்று கூறத் தோன்றவில்லை.இவள் இத்தனை சாதுவானவளாய் இருப்பாள் என்றும் எண்ணியிருக்கவில்லை.அவன் சிந்தனைகளில் உழன்றிருந்த நிமிடங்களில் தன்னைத் தேற்றியிருந்தவள் தொண்டையை செருமியவாறே,
“சாரி..கொஞ்சம் எமோஷனல் ஆய்ட்டேன்.இப்போ என் நிலைமையை கொஞ்சமாவது புரிஞ்சுருப்பீங்கனு நம்புறேன்.அதுவும் இல்லனா என் மனசுக்கு மட்டுமே தெரிஞ்ச எனக்குள்ளேயே போட்டு புதைச்ச ஒரு விஷயத்தை சொல்லிட்றேன்.
என் காலேஜ்ல பர்ஸ்ட் டே நா பாட்டு பாட ஸ்டேஜ் ஏறினப்போ ஒரு சீனியர் என்கிட்ட மைக் கொடுத்துட்டு நா பாடுறதை அவ்ளோ உணர்ந்து கேட்டுட்டு இருந்தார்.அதுக்கு அப்பறம் தினமுமே என்னை மறைஞ்சு நின்னு பார்த்துட்டு இருப்பார்.
நிச்சயமா நா உலக அழகி கிடையாது.அப்படியிருக்க என்னை ஒருத்தர் அத்தனை விருப்பமா பாக்குறதை என்னால கண்டுபிடிக்க முடியாதா அது மட்டும் இல்லாம அந்த பார்வை எப்பவுமே எந்த விதமான தப்பான நோக்கத்தோடேயும் இருந்ததில்லை.ஆனா அதை வளர விடுறதுலயோ அவரை கஷ்டப்படுத்துறதுலயோ எனக்குத் துளியும் விருப்பமில்லை.
எல்லாம் தெரிஞ்சும் தெரியாத மாதிரியே இருந்தேன்.அவர் அப்போ பைனல் இயர் சோ படிப்பு முடிஞ்சா என்னை மறந்துடுவாருனு நம்பினேன்.அவரு மறந்தாரா இல்லையானு எனக்கு தெரியாது ஆனா அப்பப்போ என் நினைவுகள்ல அவர் இருந்துருக்கார்.
திடீர்னு ஒருநாள் பார்த்தா என்னோட எம்டினு சொல்லி எனக்கெதிரா உக்காந்து என்னை யாருனு தெரியுமானு அறிமுகப் படுத்தினார்.அந்த முகம் அத்தனை சீக்கிரம் மறந்து போகக் கூடிய முகம் இல்லையே ஆனா நா அதை அவர்கிட்ட சொல்லல.
ஒரு சின்ன பயம் தயக்கம்.ஆனா நா பயந்ததுதான் நடந்தது அவரு என்னை விரும்புறதா சொன்னார்.இத்தனை வருஷத்துக்கு அப்பறமும் அதே பார்வை.ஆனா அவருக்கும் அவர் அன்புக்கும் தகுதியானவளா நா இருப்பேன்னு எனக்குத் தோணல இப்பவும் அவர்கிட்ட என் அத்தனை நிலைமையும் சொல்றது அவருக்கு என்னை பிடிக்கணும்னு இல்ல.
எல்லாம் தெரிஞ்சும் எதுவுமே நடக்காத மாதிரி இருந்த அந்த முதுகெலும்பு இல்லாதவளை மொத்தமா வெறுக்கணும்ங்கிறதுக்காக தான்.அது தான் எனக்கும் நல்லது முக்கியமா அவருக்கு ரொம்பவே நல்லது.”
என்றவள் திரும்பிப் பார்க்காமல் அங்கிருந்து நகர்ந்து விட கேட்டது அனைத்தும் கனவா நினைவா எனும் குழப்பத்தில் அப்படியே அமர்ந்திருந்தான் ஆத்விக்
தொடரும்...