தொடர்கதை - உன்னோடு நானிருக்கும் மணித்துளிகள் - 09 - ஸ்ரீ
“ரோஜாக் கடலே என் ராஜா மகளே
என் ஆசைக் கனியே வா தனியே
காதல் துணையே என் கண்ணின் மணியே
என் இன்னோர் உயிரே வா அருகே
பூக்களின் பிள்ளாய் புன்னகைக் கிள்ளாய்
பொன்னில் வார்த்தது மேனி
ம்........
பூச்செடியின் மேலே காற்றடித்தாலும்
உன் நெஞ்சில் தைக்குமோ ஆணி
வா வா அலைகடல் சிறுதுளி வா வா
பெண்ணே வா வா எரிமலை சிறு பொறி வா வா
வா வா அலைக்கடல் சிறுதுளி வா வா
கண்ணா வா வா எரிமலை சிறுபொறி வா வா”
ஒரு வார பயணம் முடித்து வீடு திரும்பியிருந்தனர் ஜெயந்தும் ஜீவிகாவும்.தனது மாமியார் மாமனாருக்கு தாய்க்கு என வாங்கி வந்திருந்த அனைத்தையும் கடை பரப்பியிருந்தாள்.
“எல்லாம் நல்லா இருக்கு டா ஜீவிம்மா..உண்மையாவே என் பையன் பர்ஸ் காலி ஆச்சு போலயே!”
“என்ன அத்தை கல்யாணம் ஆகி ஒரு வாரத்துக்கே இப்படி சொன்னா இப்படி இன்னும் எவ்ளோவோ இருக்கு!!”
“ம்ம் ஜீவிக்கு இல்லாத காசு எதுக்கு டா இனி அவனுக்கு..உனக்கு என்ன வேணுமோ வாங்கிக்கோ”
“ஏன்மா ஏன்..ஏற்கனவே அவ என்னை உண்டு இல்லனு ஆக்குறா..இதுல நீ வேற சப்போர்ட் பண்ற?”
“டேய் மகனே இந்த கூட்டனி பயங்கர ஸ்ட்ராங்கா இருக்கு டா..பேச்சுக்கு கூட எதுவும் சொல்ல விடமாட்றா உங்கம்மா”
“பின்ன எனக்குத் தங்கம் போல மருமக கிடைச்சுருக்கா நா அப்படிதான் பேசுவேன்..”
“அப்படி சொல்லுங்கத்த..வயிறு கருகுற வாடை இங்க வர வருது..ரெண்டு பேரும் பொறாமைல பேசுறாங்க நீங்க அசந்துறாம கெத்தா தில்லா இருக்கணும்.நா இருக்கேன் உங்க பின்னாடி.”
“பின்னாடி நீ இருப்ப முன்னாடி நா இருப்பேனானு தான் கொஞ்சம் சந்தேகமா இருக்கு”
“என்ன வார்த்தை கூறிவிட்டீர்கள் அத்தை அவர்களே!ஐயஹோ நெஞ்சு பொறுக்குதில்லையே!”
மற்ற மூவருமே விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தனர்.
“ம்ம் இப்படியே சிரிச்சுட்டு இருங்க நா போய் சாப்பிட எதாவது எடுத்துட்டு வரேன்..வயிறு காலிங்..”
அவள் அங்கிருந்து சென்றதும் ஜெயந்த் அவளையே பார்த்திருக்க அவன் தந்தை இருவரிடமும்,
“நல்ல பொண்ணு கள்ளம்கபடம் இல்லாம எத்தனை பேரால இப்படி இருந்திட முடியும்.நல்லா வளர்த்துருக்காங்க அவங்க அம்மா.”
“உண்மை தாங்க நானும் நம்ம ஜெயந்தை நினைச்சு ரொம்ப பயந்தேன்.கல்யாணம் வேண்டாம் ரொம்ப படிச்சுருக்கானு சொல்லிட்டே இருந்தான்.அந்த பொண்ணு அனுசரிச்சு போகுமோ என்னவோனு எனக்குமே பயம்தான்.ஆனா இப்படி எதிர்பார்க்கவே இல்லங்க.
நம்ம பையன் முகத்துல இருக்குற இந்த சிரிப்பு போதும் அதுக்காகவே அவளுக்கு என்ன வேணா செய்யலாம்”
“ஆனா ஒண்ணுமா உன் பேச்சை கேட்காம ஜீவியை வேண்டாம்னு சொல்லிருந்தா லைப்ல பெருசா மிஸ் பண்ணிருப்பேன்.”
“அதுக்கு தான் டா அம்மா பேச்சை கேட்கணும்னு சொல்றது.ஆமா நாளைக்கு ஏதோ லஞ்ச்.. ப்ரெண்ட்ஸ் ட்ரீட் தராங்கனு சொன்னாளே எப்போ போணும்?”
“ஆமா மா போயஸ் கார்டன்ல வீடுனு சொன்னா இன்னும் யாருனு சொல்ல மாட்றா..”
“சஸ்பென்ஸ் தாங்க முடிலயே டா..ஆக்க பொறுத்தவங்க ஆறப் பொறுப்போம்..”
இரவு உணவு முடித்துவிட்டுத் தங்கள் அறைக்குள் வந்தவளை இழுத்துப் பிடித்து நிறுத்தினான் ஜெயந்த்.
“ஒரு இடத்துல உன் கால் நிக்கவே நிக்காதா வாம்மா மின்னல் மாதிரி எதாவது பண்ணிட்டே இருக்க.”
“ஹா ஹா அது அப்படியே பழகிருச்சுங்க..”
“சரி எல்லாருக்கும் எல்லாம் வாங்கின உனக்காக நான் ஒண்ணு வாங்கி வச்சுருக்கேன்.”
“ஹே ஜெய் சூப்பர் என்னது என்னது சொல்லுங்க கடையில இருந்து முந்திரி பாதாம் அப்படி எதாவது?!”