அவன் வருவதை உணர்ந்து யாதவி தலை குனிந்தப்படி அமர்ந்திருந்தாள். அதை விபாகரனும் கவனித்தான். ஏதோ பாலாவோடு பேசியது மன பாரத்தை குறைத்திருக்க, இத்தனை நேரம் கழித்து இப்போது தான் யாதவியின் முகம் பார்த்தான். ஆனால் அவள் தலை குனிந்திருந்ததிலேயே அவள் சங்கடத்தையும் உணர்ந்தான். அப்போது தான் பாலாவும் புவனாவிடம்,
"அம்மா திடீர்னு யாருமே எதிர்பார்க்காம தேவியை இங்க கூட்டிட்டு வந்துட்டோம்.. அதனால் இன்னைக்கு நைட் நீங்க யாதவி கூட இங்கேயே இருங்கம்மா.." என்று சொல்ல, புவனா கொஞ்சம் தயங்குவது போல் தெரியவே,
"பாலக்கிட்ட நான் தான் சொன்னேன் ம்மா.. நீங்க இன்னைக்கு யாதவி கூட இருந்தீங்கன்னா, அவளும் கொஞ்சம் தயக்கம் இல்லாம இருப்பா.." என்று விபாகரனும் சொல்ல, புவனாவும் ஒத்துக் கொண்டார்.
பின் மஞ்சுளா வந்து அனைவரையும் சாப்பிட அழைக்க, "நீங்கல்லாம் போய் சாப்பிடுங்க.. நான் கொஞ்ச நேரம் கழிச்சு சாப்பிடுகிறேன்.." என்று விபாகரன் தன் அறைக்குச் சென்றுவிட்டான். தான் அருகில் இருந்தால் யாதவி சரியாக சாப்பிட மாட்டாள் என்பதே அதற்கு காரணம், இருந்தும் மற்றவரை அமர வைத்து மஞ்சுளாவே பரிமாற, ஏனோ யாதவிக்கு அந்த சூழ்நிலையும் சாப்பாடு உள்ளே இறங்குவேனா என்றிருக்க, கடமைக்கு கொஞ்சமாக சாப்பிட்டாள்.
பாலாவும் ரூபினியும் கிளம்ப தயாரானதும் விபாகரன் கீழே இறங்கி வந்தான். பின் அவர்களை வழி அனுப்பியதும் திரும்ப அறைக்குச் சென்றுவிட்டான். யாதவி, புவனா தங்குவதற்கு அறையை காட்டிய மஞ்சுளா, பின் அர்ச்சனாவின் அறைக்குச் சென்று சாப்பாடு கொடுத்தார். அவள் யாதவி விஷயமாக ஏதோ கோபமாக பேச வர,
"எதுவா இருந்தாலும் இப்போ பேச வேண்டாம்.." என்று அவளிடம் சொல்லிவிட்டு வந்துவிட்டார்.
பின் விபாகரனுக்கும் அவனது அறைக்கே சாப்பாடு கொண்டு போனார். "என்னம்மா நான் கீழே வந்து சாப்பிட்டிக்க மாட்டேனா?" என்று அவன் கேட்கவும்,
"பரவாயில்ல ஒருநாள் தான் இங்க சாப்பிடேன் விபு.." என்றார்.
பின் சிறிது தயக்கத்தோடு, "அம்மா யாதவியை இங்க கூட்டிட்டு வந்ததை பத்தி நீங்க ஒன்னும் சொல்லலையே, இதுல உங்களுக்கு ஏதாவது ஆட்சயபணை இருக்கா.." என்று அவன் கேட்க,
"அவளை வீட்டுக்கு கூட்டிட்டு வந்ததுக்கு பிறகு கேக்கிறியே விபு.." என்று அவர் திருப்பிக் கேட்டார்.
அதில் அவன் அதிர்ந்து பார்க்க, "யாதவி பத்திய ஆசையை உன்னோட மனசில் வளர்த்தது நான் தான், ஆனா அவ உன்னை வேண்டாம்னு சொல்லிட்டு போனப்போ உன்னை விட நான் தான் அதிகமா மனசுக்குள்ள துடிச்சேன்.. என்னோட பையனுக்கு தப்பு பண்ணிட்டேனேன்னு வேதனைப்பட்டேன்..
நீ யாதவியே நினைச்சிக்கிட்டு இருக்காம அவளை மறந்து ஒரு நல்ல வாழ்க்கை வாழணும்னு ஆசைப்பட்டேன்.. ஆனா அது மட்டும் நடக்கல.. நான் தான் உன்னோட மனசில் யாதவியை பத்தி ஆசையை வளர்த்தேன்.. ஆனா அதை என்னால அழிக்க முடியல.. இதோ இன்னைக்கு அவ எந்த தப்பு செஞ்சிருந்தாலும் மறந்து அவளை கூட்டிட்டு வந்துட்ட.. கண்டிப்பா அதை வேண்டாம்னு நான் மறுக்க மாட்டேன்.. அதுக்காக உன்னை மாதிரி பெருந்தன்மையான மனசு எனக்கும் இருக்கும்னு நினைக்காத.." என்று சொல்லவும்,
"ஒருவேளை ரத்னா அத்தை உயிரோடு இருந்து, என் பொண்ணோட தப்பை மறந்து அவளை ஏத்துக்கோங்கன்னு சொல்லி உங்கக்கிட்ட சொல்லியிருந்தா அப்போதும் இப்படி தான் பேசுவீங்களா?"
"என்னோட மகனுக்கு என்ன குறைச்சல், அவனை வேண்டாம்னு சொல்லிட்டு போனவளை நான் எப்படி மன்னிப்பேன்.. ஆனா அவ ரத்னாவோட பொண்ணுன்னு தான் நான் அமைதியா அவளை ஆரத்தி எடுத்து கூட்டிட்டு வந்திருக்கேன்.. ரத்னா கேட்டாலும் இதை தான் சொல்லியிருப்பேன்..
அவளை மன்னிக்கும் மனசு இல்லை, ஆனா உன்னோட மனைவின்னு நீ கூட்டிட்டு வந்தவளை மறுக்கற மனசும் எனக்கு இல்லை, ஒருவேளை அவளோட தான் நீ சந்தோஷமா வாழ முடியும்னா அதை நான் வேண்டாம்னு சொல்லுவேனா.. அதனால் அவ இங்க இருக்கறதில் எனக்கு ஒன்னுமில்ல,
ஆனா இப்போ அவ கழுத்தில் நீ கட்டின தாலி இல்லை, எதுவா இருந்தாலும் முறைப்படி இருக்கட்டும், திரும்ப கோவிலில் வச்சு அவ கழுத்தில் நீ தாலிக் கட்டு, அது தான் நல்லது.. அப்போ எங்க மனசில் இருக்கும் உறுத்தல் மறையலாம்" என்று சொல்லிவிட்டு சென்றார்.
கடைசியாக மஞ்சுளா சொல்லிவிட்டு சென்ற அவள் கழுத்தில் தாலி இல்லை, கோவிலில் வைத்து திரும்ப நீ தாலிக் கட்டு.." என்ற பேச்சு விபாகரன் காதுகளில் திரும்ப திரும்ப எதிரொலிக்க, சற்று நேரம் அறையிலேயே நடைபயின்றவன், பின் ஏதோ நினைத்தவனாக தன் வார்ட்ரோபை திறந்து அதில் ஒரு சின்ன பெட்டியை எடுத்தவன், அதை திறந்து பார்த்தான்.
அதில் மஞ்சள் நிறம் மங்கியிருக்க, அங்கங்கே நைந்து போயிருந்த கயிற்றில் அந்த பொன் நிற தாலி மட்டும் அப்படியே ஜொலித்தது. அதை கையில் எடுத்து பார்த்தவனின் நினைவுகள் பின்னோக்கிச் சென்றது.
மையல் தொடரும்..
Go to Maiyalil manam saaintha velai story main page
{kunena_discuss:1211}