(Reading time: 21 - 42 minutes)

இனி அடுத்து என்ன? என்ற கேள்வியை அவனே அவனுக்கு திரும்ப திரும்ப கேட்டுக் கொண்டிருக்க, நீ ஒன்றும் செய்ய வேண்டாம், எல்லாம் உன் மனையாளே செய்துவிட்டாள் என்பது போல் அலைபேசி ஒலி எழுப்பியது.

ஆம் இவன் பேசிவிட்டு வந்தபின் அதைக் கண்டு யாதவியால் வியப்படையாமல் இருக்க முடியவில்லை. கண்டிப்பாக இப்படி ஒரு சூழ்நிலையில் எந்த ஒரு ஆண்மகனும் கோபப்படுவான் தான், ஆனால் இவன் இப்படி அமைதியாக பேசுவான் என்று எதிர்பார்க்காதவள், ஒரு நிமிடம் அவனை நம்பி பொறுமையாக அடுத்து என்ன என்று பார்க்கலாமா? என்று யோசித்தாள் தான்,

ஆனால் அடுத்து உடனே அவளுக்கு தன் அன்னை ரத்னாவின் ஞாபகம் வந்தது. சாத்விக்கோடு சேர்வதற்கு விபாகரன் ஒத்துக் கொண்டாலும், கண்டிப்பாக ரத்னா ஒத்துக் கொள்ள மாட்டார் என்பது அவளுக்கு தெரியும், ஏதாவது பேசி விபாகரனுடன் வாழும்படி செய்துவிடுவார் என்று அச்சம் கொண்டவள், விரைவில் சாத்விக்கை பார்த்து அவனை திருமணம் செய்துக் கொள்ள வேண்டுமென்று முடிவெடுத்தவள், யாரும் வீட்டில் இல்லாததை தனக்கு சாதகமாக்கிக் கொண்டு அந்த வீட்டிலிருந்து வெளியேறிவிட்டாள்

இப்போது அதை சொல்ல தான் மஞ்சுளா விபாகரனை அழைத்திருந்தார். அவன் அலைபேசி அழைப்பை ஏற்றதும், "விபு யாதவி வீட்ல இல்லடா.. அவ போனும் வீட்ல தான் இருக்கு, அவ உன்னோட இருக்காளா? நீ அவ தூங்கட்டும், அவளை தொந்தரவு செய்ய வேண்டாம்னு சொன்னதால, நாங்களும் அவ ரூம் கதவு சாத்தியிருக்கவே தூங்கட்டும்னு விட்டுட்டோம்.. ஆனா இவ்வளவு நேரம் அவ தூங்கறது நல்லதுக்கு இல்லன்னு ரத்னா எழுப்ப போனா ரூம்ல யாதவி இல்ல.. அர்ச்சனாக்கிட்ட கேட்டா, தூங்கிட்டேன் எனக்கு தெரியாதுன்னு சொல்றா.. யாதவி உன்னோட தான் இருக்காளா விபு..

ஒருவேளை அவளோட அப்பாக்கு விஷயம் தெரிஞ்சு அவளை கடத்திக்கிட்டு போயிட்டாரோன்னு ரத்னா ஒரே அழுகை.. சொல்லு விபு, யாதவி உன்னோட தான் இருக்காளா?" என்று மஞ்சுளா திரும்ப திரும்ப அதே கேள்வியை கேட்க,

"யாதவி நான் தான் சொன்னேனே.. அதுக்குள்ள அவசரப்பட்டுட்டியா? உன்னை தனியா விட்டுட்டு வந்திருக்க கூடாதோ.." என்று மனதிற்குள் பரிதவித்தவன்,

"இல்லம்மா யாதவி என்னோட இல்ல.. அவ எங்கேயும் போயிருக்க மாட்டா ம்மா.. இருங்க நான் வரேன்.." என்று சொல்லி அழைப்பை அணைத்தவன், நேராக வீட்டை நோக்கி கிளம்பினான்.

அவன் வீட்டுக்கு வரும்வரைக்குமே யாதவி சாத்விக்கிற்காக வீட்டை விட்டு சென்றிருப்பாள் என்று எதிர்பார்க்காத ரத்னா, மகளை காணாத வேதனையில் பரிதவித்து அழுதுக் கொண்டிருக்க, அதைப் பார்த்து அர்ச்சனாவிற்கு பற்றிக் கொண்டு வந்தது.

"இங்கப்பாருங்க யாதவியை அவளோட அப்பால்லாம் கடத்திட்டு போயிருக்க மாட்டாரு.. வேணும்னா அவளே அவங்க அப்பா கூப்பிட்டதும் கூடவே போயிருப்பா.. உங்க பொண்ணு எப்போ என்ன செய்வான்னு யாருக்கு என்ன தெரியும்.." என்று ரத்னாவை பார்த்து அவள் கூற,

"அச்சு கொஞ்சம் சும்மா இருக்கியா.." என்று அவளை மஞ்சுளா அதட்டினார்.

ஆனால் சொல்லப் போனால் அர்ச்சனா யாதவியை சரியாகவே கணித்து இருக்கிறாள். இருந்தும் அவளது எப்போது எப்படி பேச வேண்டும் என்று தெரியாத வெடுக்கென்று பேசுவது மற்றவர்களுக்கு தவறாக தோன்றுகிறது.

இப்படி ரத்னா அழுது புலம்பிக் கொண்டிருக்கும் போதே விபாகரன் அங்கு வர, வீட்டுக்குள் வந்தவனை பார்த்து ரத்னா அவன் அருகில் சென்றவர் அதிர்ச்சியில் உறைந்து நின்றுவிட்டார்.  பின்னாலேயே வந்த மஞ்சுளா, அர்ச்சனாவுமே அப்படித்தான் அதிர்ச்சியாகினர்.

விபாகரனின் போட்டிருந்தது பட்டுச் சட்டை என்பதால், அவன் பாக்கெட்டில் இருந்த அந்த மஞ்சள் கயிறு தெள்ளத் தெளிவாக வெளியில் தெரிய, அதுதான் அவர்கள் மூவரும் அதிர்ச்சியாக காரணமாக இருந்தது.

"விபு என்னடா இது உன்னோட சட்டை பாக்கெட்டில் தாலியா?" என்று மஞ்சுளா கேட்க,

"பார்த்தா தெரியலையா ம்மா.. தாலி தான், காலையில் யாதவி கழுத்தில் கட்டின தாலி.. இப்போ அது அண்ணனோட பாக்கெட்டில் இருக்கு.." என்று அர்ச்சனா பதில் கூறினாள்.

தாலியை மற்றவருக்கு தெரியும்படி பாக்கெட்டில் போட்டிருக்க கூடாது என்று விபாகரன் இப்போது யோசித்தான். தாலிக்கயிறை மறைத்து வைக்கலாம், ஆனால் யாதவி வீட்டை விட்டு போனது அனைவருக்கும் தெரிந்து தானே ஆக வேண்டும், அதை எப்படி மறைக்க முடியும்?

"விபு தம்பி.. அர்ச்சனா சொல்றது போல உங்க சட்டை பாக்கெட்டில் இருப்பது யாதவி கழுத்தில் கட்டின தாலியா? சொல்லுங்க தம்பி.. என்ன ஆச்சு? எதனால யாதவி கழுத்தில் இருக்க வேண்டிய தாலி உங்கக்கிட்ட இருக்கு?" என்று ரத்னா கேள்வியெழுப்ப,

"அதை நீங்க தான் சொல்லணும், தாலியை கழட்டிக் கொடுத்து போயிருக்கான்னா.. அப்பவே தெரியலையா ஏதோ இருக்குன்னு.. இதில் அவளோட அப்பாவால் ஏதாவது ஆகியிருக்கும்னு கதை கட்றீங்களா?" என்று அர்ச்சனா கோபப்பட்டாள்.

அந்த பேச்சை கேட்க முடியாமல் ரத்னா  கூனி குருகி போனார். "அர்ச்சனா பேசாம இரு.." என்று கூறிய விபாகரன்,

"அத்தை இதுக்கு மேல மறைக்க முடியாது.. அவளுக்கு இந்த கல்யாணத்தில் மனப்பூர்வமான சம்மதாமான்னு கேட்டீங்களா?" என்று அவரை பார்த்துக் கேட்டான்.

"என்ன சொல்றீங்க தம்பி.." என்று அவர் பதற,

"அவளுக்கு சாத்விக்கை தான் பிடிச்சிருக்குன்னு சொல்றா.." என்ற அவனது பதிலில் அர்ச்சனா, மஞ்சுளா இருவரும் அதிர்ச்சியாகினர்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.