ஜகதீஷ் சொன்ன இடத்திற்கு சென்றவன், அங்கு அவனுடன் இருந்த சக்தியை பார்த்து கோபம் கொண்டவன், அதை வெளிக்காட்டாமல் ஜகதீஷை பார்த்து, "யாதவி பத்தி உனக்கு என்ன தெரியும்?" என்றுக் கேட்டான்.
"சார் யாதவிக்கு சாத்விக்கை நல்லா தெரியும்னு எங்க காலேஜ்ல நிறைய பேருக்கு தெரியும், அதேபோல என்னோட ப்ரண்ட் ஒருத்தனோட பெரியப்பா பையன் சாத்விக்கிற்கு நடிகர் சங்கம் வைக்க அவங்க வீட்டுக்கு போனதாகவும், செமஸ்டர் லீவ் விட்டா என்னையும் அங்க கூட்டிட்டு எங்க அண்ணன் போவான்னும் என் ப்ரண்ட் சொல்லிக்கிட்டு திரிஞ்சது யாதவி உட்பட காலேஜ்ல நிறைய பேருக்கு தெரியும் சார்..
இன்னைக்கு மதியம் யாதவி என்னோட ப்ரண்ட்க்கு போன் செஞ்சு சாத்விக் வீட்டு அட்ரஸ் வேணும்னு கேட்டிருக்கா, நான் சென்னைக்கு போகப் போறேன் அங்க போய் சாத்விக்கை பார்க்கணும் அதனால் அட்ரஸ் கொடுன்னு கேட்ருக்கா, அவனும் அவளுக்கு அட்ரஸ் சொல்லிட்டு எனக்கு கால் செஞ்சான் சார்..
எனக்கு என்னவோ திடீர்னு யாதவி சாத்விக் அட்ரஸ் கேட்கவும் தப்பாப்பட்டு நான் யாதவிக்கு போன் செஞ்சேன், ஆனா யாதவி போனை எடுக்கல.. அப்புறம் தான் சக்திக்கு பேசினேன், அவ என்னென்னவோ சொன்னா சார்.." என்றவன் சக்தியை பார்க்க, விபாகரனும் அவளை பார்த்தான்.
"அண்ணா என்னை மன்னிச்சிடுங்க.. நானும் ஜகதீஷும் காதலிச்சோம், ஆனா அது ப்ரேக் அப் ஆயிடுச்சு, அடுத்து யாதவியை ஜகதீஷ் காதலிக்கிறதா சொன்னான். நான் இவனை காதலிக்கிற விஷயம் தெரிஞ்சும் யாதவி எதுவும் சொல்லாம அமைதியா இருந்ததில் எனக்கு அவ மேல கோபம், அதான் சாத்விக் என்கிட்ட கொடுத்த கார்டை அவக்கிட்ட இருந்து மறைச்சிட்டேன்.." என்று சொல்லி அந்த வாழ்த்து அட்டையை காண்பித்து, யாதவி, சாத்விக்கிற்கு எப்படி அறிமுகமானது என்பதில் ஆரம்பித்து கடைசியாக அவன் வாழ்த்து அட்டை கொடுத்தவரை சொல்லி முடித்தவள்,
"கடைசி வரை இந்த விஷயம் யாதவிக்கு தெரியக் கூடாதுன்னு தான் நினைச்சேன்.. ஆனா அவளை கல்யாண கோலத்தில் பார்த்ததும் அப்போதும் அவ மேல இருக்க கோபம் போகாததால் சாத்விக் அவளை காதலிக்கிற விஷயத்தை சொல்லி அவளை வெறுப்பேத்த தான் பார்த்தேன்.. ஆனா யாதவி இப்படி சாத்விக்கை தேடிப்போவான்னு நான் எதிர்பார்க்கல ண்ணா.. என்னை மன்னிச்சிடுங்க.." என்று அழுதாள்.
"நான் யாதவிக்கு ப்ரிபோஸ் செஞ்ச மறுநாளே அவ என்னோட ப்ரண்டை விட்டுட்டு என்கிட்ட காதலை சொன்னா என்னால ஏத்துக்க முடியாதுன்னு சொல்லிட்டா.. அப்போதும் அவளை விடாம தொந்தரவு செஞ்சது நான் தான்.. அதை புரிஞ்சிக்காம இப்படி செஞ்சுடீயே.." என்று ஜகதீஷ் அவளிடம் கோபப்பட்டான்.
"உங்களுக்கு இது காதலிக்கிற வயசா.. அறியா வயசுல ஒருத்தர் மேல ஏற்பட்ற ஈர்ப்பை காதல்னு நினைச்சு உங்க வாழ்க்கையை அழிச்சிக்கிறது பத்தாதுன்னு, இதில் உங்க ப்ரண்ட் உதவலன்னு அவங்க மேல வெறுப்பையும் வன்மத்தையும் வளர்த்துக்கிறீங்க..
முதலில் இந்த கார்டை நீ யாதவிக்கிட்ட காமிக்காம விட்ட சரி, ஆனா அவளுக்கு கல்யாணம் ஆனது தெரிஞ்சு அப்போ இதை காட்டலாமா? ஒரு நேரம் இல்லன்னாலும் ஒரு நேரம் நீ யாதவியை ப்ரண்டா யோசிச்சிருக்க மாட்டீயா? அவளுக்கு இப்படி ஒரு கெடுதல் செஞ்சுட்டீயே.." என்று விபாகரன் சக்தியை பார்த்துக் கேட்க, அவள் செய்த செயலை நினைத்து அவள் தலை கவிழ்ந்தாள்.
"ஜகதீஷ் உன் ப்ரண்ட்க்கிட்ட சொல்லி சாத்விக் அட்ரஸ் வாங்கித் தர்றியா?" என்று அவன் கேட்க,
"ஏற்கனவே வாங்கிட்டேன் சார்.. இந்தாங்க.." என்று ஜகதீஷ் முகவரியை கொடுத்தவன்,
"சார் உங்களுக்கு வேற ஏதாச்சும் உதவி வேணும்னாலும் சொல்லுங்க சார்.." என்று கேட்க,
"நீங்க செய்ற பெரிய உதவி இந்த காதல் கீதலெல்லாம் விட்டுட்டு நல்லா படிச்சு நல்ல வேலைக்கு போய் பெத்தவங்களை சந்தோஷப்படுத்துங்க.. அப்புறம் இன்னொரு உதவி இப்போதைக்கு யாதவி பத்தி எந்த விஷயத்தையும் உங்க நெருக்கமான ப்ரண்ட்ஸ்க்கிட்ட கூட சொல்லாதீங்க.. குறிப்பா எங்களுக்கு கல்யாணம் ஆனதையும் கூட, ப்ளீஸ்.." என்று விபாகரன் சொல்லவும், இருவரும் சரி என்றி தலையை ஆட்டினார்கள்.
அடுத்து சாத்விக்கின் வீட்டிற்குச் சென்று யாதவியை பார்க்க வேண்டுமென்ற முடிவோடு விபாகரன் சென்னை கிள்ம்பினான்.
இரவில் பொட்டு உறக்கம் இல்லாமல் விபாகரன் பழைய சம்பவங்களை நினைத்துப் பார்த்தப்படி இருக்க, அங்கு சாத்விக்கும் அவனை தேடி யாதவி வந்த தினத்தை தான் நினைத்துக் கொண்டிருந்தான்.
அது ஒரு மாலை நேரம், படப்பிடிப்பிற்காக அவன் வெளிநாடு செல்ல தயாராகிக் கொண்டிருக்க, அவனை பார்ப்பதற்கு ஒரு பெண் வந்திருப்பதாகவும், அவள் பெயர் யாதவி என்றும் காவலாளி தகவல் தெரிவிக்கவும், அடுத்து நடக்கவிருப்பதை முன்பே அறியாதவன், யாதவியின் வருகையை குறித்து மகிழ்ந்தான்.
மையல் தொடரும்..
Go to Maiyalil manam saaintha velai story main page
{kunena_discuss:1211}