ஆரம்பித்திலிருந்தே யாதவியை அவளுக்கு பிடிக்காது. இதில் முன்பு தன் அண்ணன் அவளை தான் திருமணம் செய்யப் போகிறான் என்பதை வேண்டா வெறுப்பாக என்றாலும், ஏற்றுக் கொள்ள தயாரானாள். ஆனால் இப்படி ஒரு துரோகத்தை இந்த குடும்பத்திற்கு செய்தவளை திரும்ப ஏற்றுக் கொள்ள அவளுக்கு துளி கூட விருப்பமில்லை, ஆனால் தன் சகோதரன் அதையெல்லாம் பொருட்படுத்தாது யாதவியை மனைவியாக அழைத்துக் கொண்டு வந்ததில் அர்ச்சனா உள்ளுக்குள் கோபத்தில் கொந்தளித்துக் கொண்டிருந்தாள்.
அதை யாதவியிடம் காட்டும் நேரமும் வந்தது. காலை உணவை முடித்துக் கொண்டு விபாகரன் அலுவலகத்திற்கு செல்ல, அர்ச்சனாவிடம் சில பல திட்டுக்களை வாங்கிக் கொண்டு விஜயும் விபாகரனுடனே கிளம்பிவிட்டான். புவானாவும் யாதவிக்கு சில அறிவுரைகளையும், யாரிடம் எப்படி நடந்துக் கொள்ள வேண்டுமென்பதையும் எடுத்து சொல்லிவிட்டு தன் வீட்டிற்கு கிளம்பிவிட்டார்.
சமையலை தவிர வீட்டில் மற்ற வேலைக்கு ஆட்கள் இருக்க, அடுத்து என்ன செய்வதென்பது யாதவிக்கு புரியவில்லை, பழக்கப்படாத இடம் என்பதால், அவளுக்கு பொழுது போகாமல் இருக்க, சிறிது நேரத்தை அப்படியும் இப்படியும் கடத்தியவள், பின் மஞ்சுளாவிடம் வந்து,
"அம்மா மதியம் என்ன சமைக்கட்டும்?" என்றுக் கேட்க, அப்போது அர்ச்சனாவும் மஞ்சுளாவின் அருகில் இருந்தவள்,
"கொஞ்சம் இடம் கொடுத்தா.. மடத்தையே பிடிக்கலாம்னு நினைப்பா.. நீ எங்க அண்ணனுக்கு செஞ்ச துரோகத்துக்கு உன்னோட முகத்தில் கூட விழிக்கக் கூடாது.. ஆனா விட்ட குறை தொட்ட குறையா.. என்னோட அண்ணன் உன்னோட கழுத்தில் தாலிக் கட்டியிருக்கே, என்னத்தான் அதை நீ கழட்டி தூக்கி போட்டுட்டு போனாலும், சட்டப்படி இன்னமும் நீ என் அண்ணனோட மனைவி தானே,
அது தெரியாம ஒருத்தன் உன்னோட நிச்சயதார்த்தம்னு சொல்லி உன் கைப்பிடிச்சு மேடைக்கு கூட்டிட்டு போறான்.. நீயும் வெக்கமே இல்லாம அவன் கூட போற.. இதால உனக்கோ, நிறைய பொண்ணுங்க கூட ஒட்டி உரசி நடிக்கும் சாத்விக்கிற்கோ பெருசா எந்த மானம் அவமானமும் வராது..
ஆனா உலகம் முழுக்க கோடியில் பிஸ்னஸ் செய்ற என்னோட அண்ணனுக்கு தான் அவமானம், நாளை பின்ன உங்க கல்யாண விஷயம் வேற யார் மூலமாவது எல்லோருக்கும் தெரிய வந்தா, விபாகரனோட மனைவியா இப்படின்னு எல்லாம் எங்க அண்ணனை தான் கேவலமா பேசுவாங்க.. அந்த அவமானம் தனக்கு வரக் கூடாதுன்னு தான் என் அண்ணன் உன்னை இந்த வீட்டுக்கு கூட்டிட்டு வந்திருக்கு.. மத்தப்படி உன்னை வச்சு வாழ இல்ல..
அது புரியாம வீட்டுக்கு கூட்டிட்டு வந்ததால மனைவிங்கிற உரிமையோடு சமையல் செஞ்சு என் அண்ணனை மயக்கிடலாம்னு நினைக்காத.. அது ஒரு போதும் நடக்காது.. ச்சீ என்ன புத்தி இது? என்னோட அண்ணன் இப்போ வசதியா இருக்கவே தானே அவன் கூப்பிட்டதும் பின்னாடியே வந்த, இப்போ அவனை கைக்குள்ள போட்டுக்க பார்க்கிற.. இதுவே இன்னும் மாச சம்பளத்துக்கு போற ஆளா என்னோட அண்ணன் இருந்திருந்தா, திரும்பி பார்த்திருப்பியா? நீயெல்லாம் என்ன ஜென்மமோ.." என்று எவ்வளவு கேவலமாக பேச முடியுமோ அவ்வளவு கேவலமாக அர்ச்சனா பேச யாதவி மிகவுமே கூனி குறுகி போனாள்.
என்ன இருந்தாலும் அவள் செய்த தவறு அர்ச்சனாவிடம் திருப்பி பேச முடியாமல் வாயை மூடி நிற்கும் நிலையை உருவாக்க, இதில் மஞ்சுளாவும் அர்ச்சனாவை ஏதும் சொல்லாமல் அமைதியாக நிற்கவும், யாதவிக்கு தன்னை நினைத்தே கோபமாக வர, அதற்கு மேலும் நிற்காமல் அங்கிருந்து சென்றுவிட்டாள்.
மஞ்சுளாவிற்கோ அர்ச்சனா யாதவியிடம் அதிகம் பேசியதாக தான் தோன்றியது. ஆனால் அவளை அடக்க நினைத்தால் இன்னும் அதிகமாக பேசுவாள் என்பதால் அவர் அமைதியாக இருக்க, யாதவி தன்னை தவறாக நினைத்திருப்பாள் என்று தோன்ற,
"அர்ச்சனா உன்னோட அண்ணனே அவளை விருப்பப்பட்டு கூட்டிட்டு வந்தபிறகும், நீ யாதவிக்கிட்ட இப்படி பேசறது தப்பு.." என்று சொல்லவும்,
"அவ செஞ்சதெல்லாம மறந்துட்டு உங்க ரெண்டுப்பேரால இருக்க முடியலாம்.. ஆனா என்னால முடியாது.. இப்படி ஒருத்தர் கேட்டா தான், அவ செஞ்ச தப்பு அவளுக்கு உரைக்கும், இல்ல திரும்ப இப்படி அண்ணனை ஏமாத்த மாட்டான்னு என்ன நிச்சயம்?" என்று கேட்டுவிட்டு போக, மஞ்சுளாவிற்கு ஒன்றும் புரியவில்லை.
மகளாக போய்விடவே அர்ச்சனாவை கண்டிக்கவும் முடியாமல், அவளிடம் யாதவிக்காக
பேசவும் முடியாமல் திணறியவருக்கு, அர்ச்சனா இப்படி பேசியது விபாகரனுக்கு தெரிந்தால் என்ன ஆகுமோ? என்ற அச்சம் மட்டும் மனதில் இருந்தது.
மையல் தொடரும்..
Go to Maiyalil manam saaintha velai story main page
{kunena_discuss:1211}