பார்க்க எவ்ளோ கஷ்டமா இருக்குத் தெரியுமா?”
“உண்மைதான். அன்றும், இன்றும் , என்றும் பெண்களின் கற்பு தான் பேசும் பொருள். அதைக் காக்க உயிர் கூட பெரிதில்லை என்ற சமூகக் கோட்பாடுகளுக்குள் வாழ்ந்து வருகிறோம். அதன் படி அன்றைக்கு அவர்கள் தேர்ந்தெடுத்தது இந்த வழி”
“இது சரியா? நியாயமானதா ?”
“ நம் இந்திய வரலாற்றில் பல மன்னர்கள் பெண்களைக் காக்கத் தான் முற்பட்டனர். பல தாரம் கொண்டவர்களானாலும், போர் என்று வந்து விட்டால் குழந்தைகள், பெண்கள், முதியோர்களை பாதுகாப்பாக இருக்க வைத்து விட்டுப் பிறகு தான் போர் நடவடிக்கை எடுப்பார்கள். எதிரி நாட்டு அரசனும் அதற்கு அவகாசம் கொடுப்பான். சில முரட்டு அரசர்களைத் தவிர மற்றவர்கள் இந்த முறையைத் தான் பின்பற்றினர். அதையும் மீறி சில சமயங்களில் பெண்களை மானபங்க படுத்தும் எதிரிகள் இருந்தால், அவர்கள் எதிரிகளின் கையில் சிக்காமல் இருக்க இதைத் தவிர வேறு வழி இருக்கவில்லை”
“மகாராணா போன்ற வீரர்கள் இருந்தும் இதை நடக்க விட்டது பெரும் தவறு இல்லையா?”
“இல்லை கிருத்தி. உண்மையில் இந்த நிகழ்ச்சிக்குப் பிறகே , ராணா தன் மக்களிடம் விழிப்புணர்ச்சி ஏற்படுத்த ஆரம்பித்தார். பெண்கள் தங்கள் கணவனை இழந்தாலும், அவரின் ராஜ்ஜியத்தில் அவர்களுக்கு பாதுகாப்புக் கொடுத்தார். அவர்களின் வாழ்வாதாரத்திற்குத் தேவையானதை செய்து கொடுத்தார். மேலும் பெண்களும் வீரமாக இருக்க வேண்டும். போர்க் கலைகள் கற்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அதற்கு எடுத்துக் காட்டாகத் தன் மகள்களில் ஒரு பெண்ணை போர்க் கலைகள், குதிரை ஏற்றம் எல்லாம் கற்றுக் கொடுத்து, தன்னோடு எல்லா இடங்களுக்கும் அழைத்துச் சென்றார்”
“தெரியும். கிரண் தேவி” என்றாள் கிருத்தி.
“ஒஹ். நீயும் படித்து இருக்கிறாயா?”
“இல்லை. என் கனவில் வருகிறார்கள்” எனவும், ப்ரித்வி புரியாமல் முழித்தான்.
“உங்களிடம் சில விஷயங்கள் பேச வேண்டும் என்றேன் இல்லையா? எப்போது பேசலாம்?” என்றுக் கேட்டாள்.
“நிறையப் பேசணுமா?”
“ஆமாம்”
தன் கைகடிக்கரத்தைப் பார்த்து விட்டு,
“இந்த ஷோ முடிய இன்னும் அரை மணி நேரம் ஆகும். இங்கேயே உட்கார்ந்து இருக்காலாமா? இல்லை வேறு எங்கும் செல்லலாமா?” என்றுக் கேட்டான்.