“இங்கேயே உட்காரலாம். “ என்று கிருத்தி சொல்லவும்,
“சரி, ஒரு ஐஞ்சு நிமிஷம் இரு. நான் வந்தடறேன்” என்று விட்டு நேராக ஷோ நடந்த இடத்திற்குச் சென்றான்.
அங்கே இருந்த தன் உதவியாளர்களுக்குத் தேவையான இன்ஸ்ட்ரக்ஷன் கொடுத்து விட்டு, அங்கிருந்த அரசின் சுற்றுலா மைய கடையில் இரு பழரசங்கள் வாங்கி கிருத்தி இருக்குமிடம் வந்தான்.
கிருத்தி சற்றுத் தெளிவாகி, முகம் கழுவி இருந்தாள். ப்ரித்வி பழரசத்தைக் கொடுக்கவும்,
“உங்களுக்கு எதற்கு சிரமம் சார்? “ என்று தயங்க,
“இதில் எந்த சிரமும் இல்லை. ரொம்ப அப்செட்டா இருக்கிற மாதிரி இருக்க. கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக்கோ” என்று கையில் கொடுத்தான்.
இருவரும் பழரசம் குடித்தபடி ஒருவரை ஒருவர் பார்த்தனர்.
“சொல்லு, என்ன விஷயம்?” என்றான் ப்ரித்வி.
“எனக்கு தொடர்ந்து சில நாட்களாக கனவு வருகிறது பிரின்ஸ்” என,
“ப்ரித்வின்னு சொல்லு” என்றவன், “சில நாட்களாக என்றால் புரியவில்லை? “ என்றுக் கேட்டான்.
“ஹ்ம்ம். இந்த டூர் ஆரம்பிக்கும் முன்னிருந்து. சரியாகச் சொல்வதென்றால் அந்த அரசியல்வாதி மகனை பஸ்சில் வைத்து அடித்த பின்னால்”
“யார் ?
“அதான் சார் அந்த செல்வம். “
“ஒஹ். அன்னிக்கு என்ன ஆச்சு?” என்றுக் கேட்க,
அவள் செல்வம் பற்றியும், அவனால் தன் தோழிக்கு ஏற்பட்ட தொந்தரவு, அவனை எதிர்த்து இவளின் நடவடிக்கை, போலீஸ் ஸ்டேஷன் சென்றது , பிரதாப் அவளுக்கு சப்போர்ட் செய்தது எல்லாம் கூறிவிட்டு,
“அன்னிக்கு நைட் எனக்குக் கனவில் அவனை நான் கீழே தள்ளினது போலே , வேறே யாரையோ பிடிச்சுத் தள்ளறேன். யாருன்னு பார்த்தா , யாரோ ராஜா மாதிரி இருந்தது.”
“இன்ட்ரெஸ்ட்டிங். “ என்றவன் “அப்புறம் என்ன ஆச்சு?”
“திருப்பி நாம பிகானர் போகும்போது அங்கே அன்னிக்கு நைட் ஸ்டே பண்ணியபோது , அந்தக் கனவு தொடர்ந்து வந்தது. அப்போ தான் கனவில் வருவது யாருன்னு தெரிஞ்சுது”
“யார் வந்தாங்க?”